

ஐரோப்பாவின் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக திறன்கள் போட்டி 2022-இல் ஹோட்டல் வரவேற்புத் திறனுக்காகப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் இந்தியாவின் அனுஸ்ரீ சீனிவாசன்.
முந்தைய காலத்தைப் போல் இன்றி தற்போது இளைஞர்கள், இளம்பெண்கள் பல்திறன் மிக்கவர்களாக விளங்கினால் தான் வேலைவாய்ப்பு கிடைக்கும் என நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி இறுதி, கல்லூரிகளில் பயிலும் போதே வழக்கமான கல்வியுடன், பல்வேறு திறன்கள் (ஸ்கில்ஸ்) வளர்த்துக் கொள்கின்றனர்.
அப்போது தான் எம்.என்.சி. எனப்படும் பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்காக அவர்களைத் தேர்வு செய்கின்றனர். வெறும் பட்டம் இருந்தால் வேலையே பெற முடியாத சூழல் தான் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு நமது நாட்டிலும் இளைஞர்கள் திறன் மிக்கவர்களாக திகழ வேண்டும் என்பதற்காக தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் (நேஷனல் ஸ்கில் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன்) மூலம் அவர்களுக்கு பல்திறன் பயிற்சி, உதவித் தொகையுடன் அளிக்கப்படுகிறது. இந்த சான்றிதழை பெறுபவர் வேலைவாய்ப்புக்கான தகுதியைப் பெறுகிறார்.
ஒவ்வொருவருக்கும் பிடித்தமான துறைகளில் போதிய திறன்களுடன் திகழ குறுகிய, நீண்ட கால பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
உலக திறன் போட்டிகள் 2022: இதற்கிடையே, உலகளவில் இளைஞர்கள், இளம்பெண்கள் திறன்களை சோதிப்பதற்காக வேர்ல்ட் ஸ்கில்ஸ் அமைப்பு சார்பில் உலக திறன் போட்டிகள் 46-ஆவது முறையாக ஐரோப்பா, ஆசியா, அமெரிக்காவில் மொத்தம் 15 நாடுகளில் நடைபெற்றன. இதில் 58 நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கு மேற்பட்டோர் 62 திறன் போட்டிகளில் பங்கேற்றனர்.
இந்தியா சார்பிலும் 58 போட்டியாளர்கள் 58 திறன் பிரிவுகளில் கலந்து கொண்டனர். இதில் 19 சதவீதம் பேர் பெண்களாகும். 52 திறன் பிரிவுகளில் 6 திறன்கள் அணிகள் பிரிவாகும். தொழில்துறை 4.0, ரோபோ சிஸ்டம் இன்டகரேஷன், அடிட்டிவ் மானுஃபாக்சரிங், புதுப்பிக்க வல்ல எரிசக்தி, மொபைல் அப்ளிகேஷன்ஸ் டெவலப்மெண்ட், டிஜிட்டல் கன்ஸ்ட்ரக்ஷன் போன்றவை அடங்கும். இதில் இந்தியா 4 பதக்கங்களை கைப்பற்றியது.
அனுஸ்ரீ சீனிவாசனுக்கு வெண்கலம்: உலக திறன் போட்டிகளில் ஹோட்டல் வரவேற்புத் திறன் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த அனுஸ்ரீ சீனிவாசன் வெண்கலப் பதக்கத்தை வென்றார். சமூக, தனிநபர் சேவைத்திறன் போட்டிகள் சுவிட்சர்லாந்தின் மான்ட்ரியக்ஸ் நகரில் கேசினோ பெராரி ஓட்டலில் அக்டோபர் 6 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது.
ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களை அணுகும் விதம் மிகவும் முக்கியமானது. இதில் வரவேற்பு அரங்கில் இருக்கும் நபர் திறன் கவனத்தை ஈர்ப்பதாக இருக்க வேண்டும். இதில் தமிழகத்தின் அனுஸ்ரீ சீனிவாசன் தனது சிறப்பான செயல்பாடுகள் மூலம் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் பணியில் உள்ள அனுஸ்ரீ உடன் ஸ்பெயினின் செர்ஜியோ மார்ட்டினஸ் வெண்கலம் வென்றார்.
சிங்கப்பூரின் ஜோவின் டோ தங்கமும், சுவிட்சர்லாந்தின் டிம் ஓபர்லி வெள்ளியும் வென்றனர்.
சுற்றுலா, புகைப்படம் எடுப்பதில் ஆர்வம்: அனுஸ்ரீ சீனிவாசன் அடிக்கடி பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதிலும், புகைப்படங்கள் எடுப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
சிறந்த தடகள வீராங்கனையான அனுஸ்ரீ, ஹாஸ்பிட்டாலிட்டி, ஹோட்டல் மேனேஜ்மெண்டில் பிஎஸ்சி பட்டதாரி ஆவார். சென்னை அடுத்த காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிலையத்தில் பயின்றவர்.
2021-இல் நடைபெற்ற இந்தியா திறன் போட்டிகளில் ஹோட்டல் வரவேற்புத் திறனில் முதலிடம் பெற்றவர்.
மேலும் ஜெர்மனியின் ஸ்டட்கர்ட்டில் நடைபெற்ற தண்ணீர் தொழில்நுட்பத்திறன் போட்டியில் இந்தியாவின் பிரவீண்குமார் கிரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அதே போல் மெக்கட்டிரானிக்ஸ் திறன் பிரிவில் அகிலேஷ் நரசிம்மமூர்த்தி, கார்த்திக் கெளடா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
பதக்கம் வென்றவர்களுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.