கண்டது
(கரூர்- தோகமலை சாலையில் கொசூர் அருகேயுள்ள ஊரின் பெயர்)
கடன் வாங்கியூர்
- எம்.சின்னசாமி,
கரூர்.
(சீர்காழி- திருமுல்லைவாசல் இடையே உள்ள ஊரின் பெயர்)
தொடுவாய்
- ம.ஸ்ரீகிருஷ்ணா,
மேலமங்கைநல்லூர்.
(தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட கயத்தாறு அருகேயுள்ள ஊரின் பெயர்)
தலையால் நடந்தான்குளம்
-எம்.முஸ்தபா,
திருநெல்வேலி.
கேட்டது
(புவனகிரி இ.சேவை மையத்தில் ...)
''சார்.. இ.பி. நம்பரோடு ஆதார் கார்டை இணைக்கணும்''
''இனி ஆதார் எண்ணை கையில் பச்சை குத்திக்கலாமுன்னு இருக்கேன்''
-பி.பரத்,
சிதம்பரம்.
(கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில்....)
''டாக்டர். எனக்கு இருமல் மருந்தும், சளி மருந்தும் கொடுங்க..!''
''உங்களுக்கு என்ன செய்யுதுன்னு சொல்லுங்க. அப்புறம் என்ன மருந்து தரணும்னு நான் முடிவு பண்றேன்''
-பி.பாலாஜிகணேஷ்,
சிதம்பரம்.
(சென்னை ரயில் நிலையத்தில் இருவர் பேசிக் கொண்டது)
''மச்சி. நீ கல்யாணத்துக்குப் பின்னர் ஆளே மாறிட்டேடா?''
''ஆமாண்டா. எதிர்த்துப் பேசறத குறைச்சிட்டேன்டா''
-ஏ.மூர்த்தி,
திருவள்ளூர்.
யோசிக்கிறாங்கப்பா!
நெருப்பையும் வெறுப்பையும் தள்ளியே வையுங்கள்.
-வி.ந.ஸ்ரீதரன்,
சிறுசேரி.
மைக்ரோ கதை
பிரசித்தி பெற்ற அந்தக் கோயிலில் அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வரிசையில் நின்று சுவாமி தரிசனம் முடித்து வர ஒரு மணி நேரம்
ஆகியது.
செந்தில் தன்னுடைய மனைவி கீதாவுடன் தரிசனம் முடித்து பிரகாரத்தில் வரும்போது, பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல் இருந்தது. ஒருவர் நூறு ரூபாய் கட்டு ஒன்றை உண்டியலில் போட்டார். அதை பார்த்து பிரமித்தாள் கீதா.
உண்டியலில் காணிக்கை செலுத்தாமல் நடையை கட்டிய தன் கணவன் செந்திலை நிறுத்தினாள்.
''என்னங்க! அந்த ஆள் பத்தாயிரம் ரூபாயை உண்டியலில் போட்டு போகிறார். நீங்க ஐம்பது ரூபாய் என்னிடம் தாருங்கள். நான் உண்டியலில் போடுகிறேன்!'' என்றாள்.
''கீதா! யாருக்கு என்ன தகுதியோ அதன்படி எல்லாம் நடக்கும். என் பாக்கெட்டில் அறுபது ரூபாய்தான் இருக்கிறது. வீட்டுக்கு டவுன் பஸ்ஸில் போக அந்தப் பணம் தான். சுவாமியை கும்பிட்டு விட்டோம். அந்தத் திருப்தி நமக்கு பலன் தரும். அந்தச் சுவாமிக்கு நம்மை பற்றி தெரியும். பேசாமல் வா!' என்று அழைத்துக் கொண்டு கோவிலை விட்டு வெளியே வந்தான் செந்தில்.
-கு.அருணாசலம்,
தென்காசி.
எஸ்எம்எஸ்
நேரத்தை வீணடிப்பவன் ஏழை.
பயன்படுத்துபவன் பணக்காரன்.
-ந.சண்முகம்,
திருவண்ணாமலை.
அப்படீங்களா!
''கைப்பேசி இல்லாதவர்கள் இல்லவே இல்லை;
அவர்கள் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோரே''
என்பது புதுமைக்குறள். ரகசியம் காப்பது தனித்துவம் என்பதால், சமூக ஊடகங்களில் வாட்ஸ் ஆப்புக்கு தனி மரியாதை (!?). 2010-ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்ட வாட்ஸ் ஆப் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய சம்ராஜ்யத்தை உண்டாக்கிவிட்டது.
பயனாளர்களின் விருப்பத்தின்பேரில், நாளுக்கு நாள் புதுமையாக மெருகேற்றுகிறது மெட்டா நிறுவனம்.
தொடக்கத்தில் 55 உறுப்பினர்கள்தான் ஒரு குழுவில் இருக்க முடிந்தது. அது 100, 256,512 என்றளவில் உறுப்பினர்களைச் சேர்க்கும் வகையில், விரிவடைந்தது. இப்போது 1034 உறுப்பினர்களைச் சேர்க்க முடியும். இதற்கு புதியதாக 'ப்ளே ஸ்டோர்'-க்குச் சென்று அப்டேட் செய்ய வேண்டும்.
இதுதவிர, வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களில் புகைப்படம், வீடியோ, குறுந்தகவல்களையே பதிவு செய்ய முடியும். விரைவில் 30 நிமிடப் பேச்சும் பதிவேற்றம் செய்யும் வகையில் வசதி மேம்படுத்தப்பட உள்ளது.
-தி.நந்தகுமார்