ஜீவா இருக்கிறாரா? நடுக்கத்துடன் பிறந்தது கேள்வி. எங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு போய் அவரது அறையில் உட்கார வைத்து விட்டு, "இருங்கள் இதோ வந்து விடுவார்'' என்று கூறி விட்டார் எங்களை அழைத்து வந்தவர்.
எப்படி ஜீவாவிடம் என் அப்பாவிடம் பேச்சைத் துவங்குவதென்று குழம்பித் தவித்துக் கொண்டிருந்தோம். அதற்குள் அவரும் வந்து தனது இருக்கையில் அமர்ந்தார்.வணக்கம் செலுத்தினோம்.
பிறந்தது முதல் அன்றுதான் தந்தையை முதன் முதலாகப் பார்ப்பதால் அவரையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். "என்னம்மா
வேண்டும்?
உங்களைப் பார்க்க விரும்பி வந்தோம்'' உடன் வந்த சகோதரி கூறினாள்.
"நீ யாரம்மா ? எங்கிருக்கிறாய் ? என்ன வேண்டும் ?'' உடன் வந்தவர் தாம் ஆசிரியப் பயிற்சி முடித்த மாணவி என்றும், நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் பயில்கிறோம் என்றும் கூறினாள்.
அடுத்து நான் விசாரிக்கப்பட்டேன். அதே கேள்விகளையே என்னையும் கேட்டார். முதல் கேள்வியிலேயே எனக்குக் கண்ணீர் வந்து விட்டது. உள்ளம் தேம்பியது. "நீ யாரம்மா ?'' என்ற அவரின் கேள்விக்குப் பதில் கூற எனக்கு அரைமணி நேரம் பிடித்தது.
மீண்டும் "நீ யாரம்மா ?''
கண்ணீரே எனது பதில் !
என் அவநிலையை வாயால் சொல்ல விரும்பாமல் எழுதிக் கொடுத்தேன்.
எனது தாத்தாவின் பெயர் குலசேகரதாஸ். என் அன்னையின் பெயர் கண்ணம்மா. உங்களுக்கு நான் மகள்.
இப்படி எழுதிய துண்டுத்தாளை அவர் பார்த்தார். அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அதே துண்டுத்தாளில் எழுதினார் என் மகள்.
இதுதான் போராட்ட வீரர் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவின் வாழ்க்கை.
( ஒரு முறை அவரின் மகளே சொன்னது )