

'எந்தச் சூழ்நிலையிலும் பெண்கள் பயப்பட வேண்டாம். தோல்வியை எளிதில் ஏற்றுக் கொள்ளாதீர்கள். எப்போதும் முயற்சியில் அதிகமாக ஈடுபடுங்கள். தோல்வியை முன்கூட்டியே ஏற்றால் வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க முடியாது'' என்கிறார் 2024 பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற பதினேழு வயதாகும் ஷீத்தல் தேவி.
2022 மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் இரு தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளி பதக்கங்களை வென்ற இவர், மாற்றுத்திறனாளிகளுக்கான உலக வில் வித்தை போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய வில்வித்தை போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கங்களையும் சொந்தமாக்கிய அவர், அர்ஜுனா விருதையும் பெற்றவர்.
சோதனைகளைக் கடந்து சாதனைகளைப் படைத்தது எப்படி என்பது குறித்து அவர் கூறியது:
'ஃபோகோமெலியா பாதிப்பால் ஏறக்குறைய இரண்டு கைகள் இல்லாமல் 2007-இல் பிறந்தேன். 2021-இல் வில் வித்தை பயிற்சியைக் கால்களைப் பயன்படுத்தித் தொடங்கினேன். குறுகிய காலத்திலேயே சாதித்தும் விட்டேன்.
2024 பாரீஸ் பாரா ஒலிம்பிக்ஸில் பெண்களுக்கான தனிநபர் வில்வித்தை போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றேன். வில் வித்தை என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டது. நாடு முழுவதும் என்னை அடையாளம் கண்டுகொள்கின்றனர்.
மற்றவர்களைப் பார்த்து வில்வித்தையில் ஈடுபட தூண்டப்பட்டேன். இப்போது நான் மற்றவர்களுக்குத் தூண்டுகோலாக மாறியுள்ளேன். பதினைந்தாம் வயதில், பயிற்சிக்காக, பெங்களூரு சென்றபோது அங்கு, ப்ரீத்தியை சந்தித்தேன். வில்லாளியான அவர் பல யுக்திகளை எனக்குக் கற்றுக் கொடுத்தார்.
வில் வித்தையை நான் தேர்ந்தெடுக்கவில்லை. வில்வித்தையே என்னைத் தேர்ந்தெடுத்தது. எனது வெற்றிக்கு பயிற்சியாளர்களான அபிலாஷா சவுத்ரி, குல்தீப் வாத்வான் மற்றும் எனது குடும்பத்தினர் தந்த ஊக்கமும் உற்சாகமும்தான் காரணம்.
போட்டிகளில் பங்கேற்ற பிறகு, சிலர் வெற்றிப் பதக்கத்துடன் திரும்பி வருகிறார்கள். சிலர் கிடைக்கும் அனுபவத்திலிருந்து பாடங்களைப் படித்து திரும்பி வருகிறார்கள், ஆனால் யாரும் தோல்வியை மட்டும் கொண்டு வருவதில்லை.
தொடக்கத்தில் நான் ஆசிரியையாக வேண்டும் என்று கனவு கண்டேன். இப்போது, வில்வித்தை வீராங்கனையாகத் தொடர்ந்து பல பதக்கங்களை என் நாட்டுக்காக வென்று பெருமை சேர்க்க விரும்புகிறேன்.
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா எனது பயன்பாட்டிற்காக பிரத்யேக வாகனத்தை 2023-இல் வழங்க முன்வந்தார். அப்போது எனக்கு பதினாறு வயது. பதினெட்டு வயது நிறைவானதும் காரைப் பெற்றுக் கொள்வதாகக் கூறினேன்.
"எனது பாரீஸ் பாரா ஒலிம்பிக்ஸ் வெற்றிக்குப் பிறகு "அசாதாரண தைரியம், அர்ப்பணிப்பு, ஒருபோதும் விட்டுக் கொடுக்காத மனப்பான்மை ஆகியவை ஷீத்தலுக்கு பதக்கம் பெற்றுத் தந்துள்ளன. உங்களுக்கு 18 வயதாகும்போது கார் உங்களை வந்தடையும். என் வாக்குறுதியை நிறைவேற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்' என ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார் என்கிறார் ஷீத்தல் தேவி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.