ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கோடையில் நீர்வேட்கை ஏன்?
கோடையில் கடும் நாவறட்சியால் அவதியுறுகிறேன். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், நீர்வேட்கை குறையவில்லை. இது எதனால்? இதனை குணப்படுத்த எளிய உபாயம் உள்ளதா?


பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
கோடையில் கடும் நாவறட்சியால் அவதியுறுகிறேன். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், நீர்வேட்கை குறையவில்லை. இது எதனால்? இதனை குணப்படுத்த எளிய உபாயம் உள்ளதா?
-சந்திரமௌலி, சிதம்பரம்.
கப தோஷத்தின் குணங்களாகிய நெய்ப்புடன் குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, கொழகொழப்பு, நிலைப்பு போன்ற தன்மையுடன் கூடிய குணங்களின் குறைவினாலும், வாத, பித்தத் தோஷங்களின் சீற்றத்தாலும் நீர்வேட்கை எனும் நாவறட்சி கோடையில் மேம்படுகிறது.
தாடையின் உட்புறம், நீரை ஏந்திச் செல்லும் குழாய்களில் வறட்சி ஏற்படுவதால் இத்தன்மை ஏற்படுகிறது. நீர்வேட்கையானது உண்ணும் உணவுகளின் தன்மையால் வருகிறதா? அல்லது நாட்பட்ட சர்க்கரை உபாதையின் தாக்கத்தால் உருவாகிறதா, பேதி போன்ற நோயினால் ஏற்பட்டதா என்பதையும் அறிந்து சிகிச்சை செய்ய வேண்டும்.
பித்தத் தோஷத்தின் குணமாகிய ஊடுருவும் தன்மை மற்றும் சூடு ஆகியவை கோடையில் இயற்கையாகவே உடலில் அதிகரிப்பதால் ஏற்படும் நீர்வேட்கை எனும் நாவறட்சியை அந்தத் தோஷத்தின் குணங்களை அடக்குவதால் மட்டுமே உங்களுக்கான தீர்வைப் பெற இயலும். அதில், சில எளிய உபாயங்களை ஆயுர்வேதம் கீழ்காணும் வகையில் எடுத்துக் கூறுகிறது.
அத்திப்பழத்தைப் பிழிந்தெடுத்த சாற்றை குளிர்ந்த நிலையில், குடிக்கலாம். ஒன்றிரண்டு பழங்களைச் சாப்பிட்டு, அதன் மேல் குளிர்ந்த நீரைக் குடிக்கலாம். மதிய உணவு செரித்த பின்னர் இதைச் சாப்பிடலாம்.
பத்து கிராம் வெட்டிவேருடன் ஐந்து கிராம் உலர்திராட்சை கலந்து, வெதுவெதுப்பான கால் லிட்டர் தண்ணீருடன் கலந்து, இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை, அதை வடிகட்டி, காலை உணவுக்கு அரை மணி நேரம் முன்பாகப் பருகலாம். இதுபோலவே நெல்பொறியை தண்ணீருடன் கலந்து, சிறிது வெல்லம் சேர்த்து ஊறவைத்து குடிக்கலாம்.
சிலருக்கு வாயுவின் சீற்றத்தால் ஏற்படும் நாவறட்சி, வாயினுள் எச்சில் சுரப்பானது குறைந்த நிலையில், நீர்வேட்கையை நரம்புகளின் சிறிய துடிப்பினால் ஏற்படுத்தக் கூடும். அதுபோன்ற நிலையில், 'தயிருடன் வெல்லம் கலந்து சாப்பிடுதல் நல்லது' என்று சக்ரதத்தர் எனும் முனிவர் கூறுகிறார்.
இந்த இரு பொருள்களுக்கும் உட்புற அணுக்களில் பிசுபிசுப்பை ஏற்படுத்தும் தன்மையிருப்பதால், அதன்மூலம் நரம்புகளிலும் எச்சில் சுரப்பிகளிலும் போஷனையை ஏற்படுத்தி, வறட்சியை நீக்கித் தருகின்றன. பொதுவாகவே, அதிக தண்ணீர் தாகத்தில் நிறைய தண்ணீர் குடிப்பதைவிட பானைத் தண்ணீரால் வாயைக் கொப்பளித்துத் துப்புவதே நல்லது. காரணம் அதிக நீர்அருந்துவதால், பசித் தீயானது மந்தமாகி அதனால் ஏற்படும் அஜீரணமானது மிகவும் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
கபதோஷத்தின் சீற்றத்தால் ஏற்படும் நெய்ப்பு, கனம், மந்தம் போன்ற குணங்களின் வாயிலாக, எச்சில் சுரப்பிகளில் ஏற்படும் அடைப்பினாலும் நீர்வேட்டை சிலருக்குக் கூடுகிறது. இருநூறு மில்லி இளஞ்சூடான தண்ணீரில் வேப்பிலைக் கொழுந்து, வேப்பம்பூ, வேப்பம்பட்டை ஆகியவற்றை இரண்டு மணி நேரம் ஊறவைத்த பிறகு, அதைக் குடித்து வாந்தி செய்துவிடுவதால் இந்த அடைப்பானது நீங்கிவிடுகிறது. கிராமங்களில் இந்தப் பழக்கமானது இப்போதும் வழக்கத்திலுள்ளது.
மாவிலை அல்லது நாவல் இலைகளை அறுபது கிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி, கால் லிட்டராக வற்றியதும் வடிகட்டி, குளிர்ந்ததும் ஐந்து மில்லி தேனை சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் பருக, கடும் நாவறட்சி குணமாகிவிடும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...