ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தேள்கடி வலி குறைய வழி என்ன?

காணாக்கடி, வண்டுக்கடி, பூரான்கடி, எலிக்கடி முதலியவைகளில் ஏற்படும் ஊரல்படை குணமாகவும், தேள்கடியால் ஏற்படும் கடும் வலி குறையவும் பயன்படும் சிறந்த மூலிகை எது?
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தேள்கடி வலி குறைய வழி என்ன?
Published on
Updated on
2 min read

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

காணாக்கடி, வண்டுக்கடி, பூரான்கடி, எலிக்கடி முதலியவைகளில் ஏற்படும் ஊரல்படை குணமாகவும், தேள்கடியால் ஏற்படும் கடும் வலி குறையவும் பயன்படும் சிறந்த மூலிகை எது?

-சாந்தி, திருவண்ணாமலை.

கிளிமூக்குக் கொன்னையின் விதைதான் தேள்கொட்டுக்குச் சிறந்தது. கொன்னையில் 23 வகைகள் இருப்பதாகத் தெரிகிறது.

பொட்டானிக்கல் பெயர் 'க்ரோடரியா லாப்ரோபோலியா' என்பது மிகவும் மென்மையான மரம். மஞ்சள் நிறப் பூவும், வில்வம் போன்ற மெல்லிய மூவிலைக் கொத்தும், தகர விதைபோல் விதையும் உள்ளது.

ஆண்டு முழுவதும் பூ பூக்கும். சிவ பூஜைக்கு உகந்த பூ. ஜூன் முதல் டிசம்பர் வரை காய்க்கும். காய் பழுத்துக் காய்ந்ததும், விதை குலுங்கிச் சதங்கை ஒலி கேட்கும். கிளைகள் காற்றில் ஆடினாலே ஒடிந்துவிடும். அதனால் நன்கு வளர்ச்சி பெறும் வரை தக்கப் பாதுகாப்புடன் வளர்க்கப்பட்ட வேண்டும்.

இதைக் கையாள்வது மிகவும் எளிது. இதைச் சாப்பிடுவதால் வேறு அபாயமோ, கெட்ட குணமோ காணப்படுவதில்லை. தேள்கடியில் தேளின் உருவம், கொட்டிய இடத்தில் வலி, தேள் கொட்டியவரின் வயதைப் பொறுத்து 6- 15 விதைகளுடன் அதற்குச் சமமாகவே 2/3 பாகமோ மிளகு சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து, அப்படியே விழுங்கிவிட வேண்டும். உடனே தேள் கொட்டிய இடத்திலுள்ள வலி நீங்கிவிடும். இதே அளவில் அரைத்தெடுத்த விழுதை வலியுள்ள இடத்தில் தடவி விடுவதும் நல்லதே.

பாம்புக் கடியில் 60- 300 வரை சம அளவு மிளகு சேர்த்து சாப்பிட வேண்டும்.

ஒரு வாரத்துக்குள் 200- 300 விதை வரை தினம் 10- 20 வரை இரண்டு வேளை காலை, மாலை சாப்பிட்டு உணவில் உப்பு- புளி- காரம் குறைத்து கவனத்துடன் சாப்பிட்டு வர, காணாக்கடி, வண்டுக்கடி, பூரான்கடி, எலிக்கடி முதலியவைகளில் ஏற்படும் ஊறல் படைகளில் நல்ல குணம் தெரியும்.

இந்த விதையைத் தூள் செய்து பாலுடன் சேர்த்துக் காய்ச்சி, புரை குத்தி அதிலிருந்தும் வெண்ணெய் எடுத்து அதை வெண்ணெய்யாகவோ அல்லது நெய்யாக்கியோ சாப்பிட ஆசனவாயிலுள்ள மூல முளைகள் சிறிதாகி மறையும். இதன் விதையைத் தினமும் 10-15 விதைகள் வீதம் ஒரு வாரம் காலை, மாலை சாப்பிட்டு வந்ததில் பல ஆண்டுகள் குணமாகாமல் இருந்த பித்தவெடிப்பு குணமாகிவிட்டதாக நோயாளி ஒருவர் தெரிவித்தார்.

இதை கிராமங்களில் பொதுவான இடங்களில் பயிராக்கலாம். எளிதில் பயிராக்கக் கூடிய மரமாகும். கிராம அதிகாரிகள் இதன் விதையைச் சேமித்துவைத்தால், பலருடைய தீராத வேதனைகளை எளிதில் நிவர்த்தி செய்ய முடியும். தேள் கடி, பூரான்கடி, பாம்புக் கடி முதலிய நெருக்கடியான சமயங்களில் பெரிதும் உதவக் கூடும்.

ஒரு மரம் ஆண்டுக்கு 200-300 தேள் கொட்டிற்குத் தேவையான விதைகளைத் தரும். இதற்கு நைட்ரஜனை நிலத்தில் சேர்க்கும் திறன் உள்ளதால், பசுந்தீவனமாகப் பயிரப்படலாம்.

பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை இருப்பதால், இலைகளைப் புண்கள், தோல் நோய்களில் அரைத்துப் பூசலாம். மேலும், சிறுநீரகச் செயல்பாடுகளுக்கு ஆதரவாக உள்ளது எனமரபுவழி வைத்தியக் கூறுகள் சொல்கின்றன.

கீல்வாதம் மற்றும் வீக்கங்களில் இலையை அரைத்துப் பற்றிடலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com