கண்டது
(சென்னை வட பழனியில் இருக்கும் ஒரு ஹோட்டலின் பெயர்)
'கைப்புள்ள கபாப்!'
(சென்னை வடபழனியில் உள்ள ஒரு இனிப்பகத்தில் ரசித்த வாசகம்)
'வாழ்க இனிப்புடன்!'
-மல்லிகா அன்பழகன், சென்னை.
(கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட ஒரு கிராமத்தின் பெயர்)
"தீர்த்தம்'
-மு.மதனகோபால், ஒசூர்.
(திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ம.மு.கோவிலூர் பிரிவு அருகில் உள்ள ரயில்வே கேட் பக்கத்தில் ரயில்வே நிர்வாகம் சார்பாக வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு வாசகம்)
'காத்திருக்கும் சிறிது நேரம் விரயமல்ல; அது உங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்காக!'
-ஆர்.பி.லிங்கராஜ், திண்டுக்கல்.
கேட்டது
(சென்னையில் இருந்து திருச்சி செல்லும் பேருந்தில் இரு பெண்கள்...)
'உன் பையனை அரசியல் மாநாட்டுக்குப் போறான்னு திட்டிக்கிட்டு இருந்த நீ... இப்ப திடீர்னு அவனை மெச்சுறீயே?'
'திரும்பி வரும்போது, வீட்டுக்கு பிரயோஜனமா நாலஞ்சு பிளாஸ்டிக் சேரை கொண்டு வந்திருக்கானே... மெச்சாம என்ன பண்றது?'
-அ.விஜயபாரதி, சென்னை-56.
(திருச்சி பேருந்து நிலையத்தில் இருவர் பேசியது)
'ஏம்பா! வந்து அரைமணி நேரமாச்சு. என்ன வேணும்னு கேட்கலியே?'
'வழக்கம்போல் நீங்க ரெஸ்ட் எடுக்க வந்துட்டீங்கன்னு நினைச்சிட்டேன், சார்!'
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
(தஞ்சாவூரில் பிரபல மருத்துவமனை ஒன்றில் நோயாளியும், மருத்துவரும்...)
'எனக்கு இப்ப பிரஷர் கூடியிருக்கு. அதுக்கு மாத்திரை, மருந்து வேண்டாம்.!'
'ஏன், அப்படிச் சொல்றீங்க?'
'எனக்கு பத்து மணிக்கு அப்பாயின்மென்ட். ஆனா, ஒருமணி நேரம் காக்க வச்சா, பிரஷர் ஏறாமல் என்ன டாக்டர் செய்யும்? அதை விட்டு மயக்கத்துக்கு மட்டும் எழுதுங்கள்!'
-ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.
யோசிக்கிறாங்கப்பா!
நாம் விளையாடுவதை நிறுத்தும்போது வாழ்க்கை நம்மை வைத்து விளையாட ஆரம்பித்துவிடுகிறது.
-ய.மாரீஸ்வரி, தங்கம்மாள்புரம்.
மைக்ரோ கதை
மூன்று வாரமாக ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகியிருந்த குமார் அவளைக் கவனித்து வந்த நர்ஸ் மாலதியின் சேவையில் தன்னையே மறந்து சொக்கிப் போயிருந்தார்.
டிஸ்சார்ஜ் ஆகும்போது நர்ஸிடம், 'என் இதயத்தையே திருடிவிட்டாயே மாலதி...' என்றார் குமார்.
பயந்த அந்த வெகுளிப் பெண் மாலதி, 'ஐயையோ... நாங்க உங்க ஒரேயொரு கிட்னியைத்தான் திருடினோம்...' என்றாள்.
இதைக் கேட்ட குமார் பயந்து போய் தலையில் கையை வைத்துக் கொண்டான்.
-க.அருச்சுனன், செங்கல்பட்டு.
எஸ்எம்எஸ்
உழைக்கும் வயதில் உறங்க நினைத்தால், உறங்கும் வயதில் உழைக்க நேரிடும்!
-க.பூமாலை, நமச்சிவாயபுரம்.
அப்படீங்களா!
இணையவழியில் தேடுதலை நொடிப்பொழுதில் காண்பித்தது கூகுள் செர்ச். தேடுதலை தொகுத்துக் காண்பித்தது சாட் ஜிபிடி. தற்போதும் பாடல், படம் என்று பல்வேறு சேவைகளைக் கேட்டுப் பெறும் புதிய வசதியை சாட்ஜிபிடியின் ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
சாட் ஜிபிடியில் திரைப்படப் பாடல்களை வழங்கும் ஸ்பாடிஃபய், போஸ்டர் படங்களை வடிவமைக்க உதவும் கேன்வா, பல்வேறு துறைகளைப் பயில உதவும் கோர்úஸரா, சுற்றுலா பயணத்தைத் திட்டமிட உதவும் எக்ஸ்
பீடியா, வீட்டை வாங்க உதவும் ஜில்லோ, தேவையான படங்களை உருவாக்க உதவும் ஃபிக்மா ஆகிய ஆப்கள் சாட்ஜிபிடியில் இருந்தபடியே பயன்படுத்தலாம். இதற்காக அந்த ஆப்களை நாம் பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேவையில்லை.
ஸ்பாடிஃபய் எனத் தொடங்கி, தீபாவளி கொண்டாட்ட பாடல்களை இசைக்கவும் என்று கட்டளையிட்டால் போதும். இதேபோல், பல்வேறு துறைகளைப் பயில்விக்க உதவும் கோர்úஸராவில் இணையவழி வகுப்புகளையும், அதற்கான எண்மப் புத்தகங்களையும் கேட்டுப் பெறலாம்.
உபேர், உணவு ஆர்டர் ஆப்கள் உள்பட பல்வேறு சேவைகளை வழங்கும் ஆப்கள் வரும் நாள்களில் சாட் ஜிபிடியில் இணைக்கப்பட உள்ளன. இது சாட்ஜிபிடி பயன்பாட்டாளர்களின் பயன்பாட்டை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.