நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

பக்வா

தூய்மையான நீர்நிலைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்குத் தீர்வைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த அஸ்வின், ஆலன், பேஸில் ஆகிய மூன்று நண்பர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

News image
Updated On :2 மே 2026, 10:36 pm

தூய்மையான நீர்நிலைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்குத் தீர்வைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த அஸ்வின், ஆலன், பேஸில் ஆகிய மூன்று நண்பர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அவர்கள் அக்கறையுடன் தொடங்கிய தேடலால் 100 சதவீதம் மக்கும் தன்மையுள்ள பாட்டில்களை உருவாக்கும் 'பக்வா' என்ற பிராண்டை உருவாக்கியுள்ளனர்.

'இயற்கையாக மக்கும் 100% தாவர அடிப்படையிலான மக்கும் பாட்டில்களை வழங்குவதன் மூலம் குளிர்பானத் துறையிலிருந்து ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதே எங்கள் நோக்கம். எதிர்வரும் தலைமுறையினருக்குத் தூய்மையான, ஆரோக்கியமான பூமியை அளிப்பதே எங்கள் நோக்கம்'' என்கின்றனர் அவர்கள்.

இதுகுறித்து அஸ்வின் கூறியது:

'நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 3 லட்சம் டன் பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகள் உருவாகின்றன. அவை இறுதியில் ஆறுகள், கடல்கள், விவசாய நிலங்களை மாசுபடுத்துகின்றன.

பிளாஸ்டிக் அல்லது பெட் பாட்டில்கள் மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பிளாஸ்டிக் அல்லது பெட் தண்ணீர் பாட்டிலில் 2.4 லட்சம் வரையிலான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் உள்ளன. ஒவ்வொரு முறை தண்ணீர் குடிக்கும்போதும், அவை உடலுக்குள் நுழைய அதிகம் வாய்ப்பு உண்டு.

இதற்கு மாற்றே 'பக்வா' பாட்டில்கள். 'சட்'டென்று பார்த்தாலும், நின்று நிதானமாகப் பார்த்தாலும், எங்களது 'பக்வா' பாட்டில்கள் சாதாரண பெட் பாட்டில்கள் போன்றே தோற்றம் அளிக்கும்.

கரும்புச் சக்கை, சோள மாவில் இருந்து பெறப்படும் தாவர அடிப்படையிலான பயோ பிளாஸ்டிக்கான பாலிலாக்டைடில் இருந்து இவை தயாரிக்கப்படுகின்றன.

நீடித்து உழைக்கக் கூடியவை. சூடான, குளிர்ந்த பானங்கள் இரண்டுக்கும் ஏற்றவை. மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தவித மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் முற்றிலும் இல்லாதவை.

180 நாள்களுக்குள் மக்கிவிடுவதால், 'பக்வா' பாட்டில்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை. பாட்டிலில் போடப்படும் மூடி, ஒட்டப்படும் லேபிள் கூட மக்கக்கூடியவை. ஒரு லிட்டர் 'பக்வா' பாட்டில் 30 ரூபாய்க்கு சந்தையில் விற்பனை ஆகிறது. 250 மி.லி., 500 மி.லி., 1 லிட்டர் அளவுகளில் பக்வா பாட்டில்கள் கிடைக்கின்றன.

'பக்வா' பாட்டில்களை பிரபலப்படுத்தவும், பயன்பாட்டைப் பெருக்கவும், 'இலவச நீர்த் திட்டம்' என்ற ஒரு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இதில், சில நிறுவனத்தினர் பாட்டில்களின் உற்பத்திச் செலவை ஏற்றுக் கொள்கின்றனர். பாட்டில் லேபிள்களில் அந்த நிறுவனங்களின் விளம்பரம் அச்சிடப்படும். ஆறு மாதங்களுக்குள், 10,000-க்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

புதுப்பிக்கத்தக்க, தாவர அடிப்படையிலான பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுவதால், மத்திய அரசு நிறுவனமான சி.ஐ.பி.இ.டி. யால் 'பக்வா' அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மத்திய மாசு கட்டுப்பாடு ஆணையத்தின் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது'' என்கிறார் அஸ்வின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.