துல்லியமான செய்திகளை அளிப்பது தினமணி
நான் சிவகங்கை மாவட்டம் கண்டிப்பட்டி கிராமத்தில் பிறந்தேன். எங்கள் கிராமத்தில் நான் 5-ஆம் வகுப்பு படிக்கும்போது, குடும்பச் சூழ்நிலை காரணமாக 1957-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் கீழ பட்டமங்கலத்தில் எனது மாமா வீட்டில் 13 ஆண்டுகள் தங்கியிருந்தேன். அப்போது தொடங்கியது தினமணி வாசிக்கும் பழக்கம்.
கீழபட்டமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அந்தக் காலத்தில் தினமணி நாளிதழ் மட்டுமே வரும். எனவே, நான் கடந்த 63 -ஆண்டுகளாக தினமணி நாளிதழ் வாசகர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
மேலும் 1970- ஆம் ஆண்டு ஜூன் மாதம், தினமணி நாளிதழில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலை வாய்ப்பு இருப்பதாக வெளியாகியிருந்த வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்தியை வாசித்து வேலை தேடி 1970 ஜூலை மாதம் சென்னை வந்தேன். பின், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் 100 ரூபாய் ஊதியத்தில் சில காலம் வேலை பார்த்தேன். அந்தக் காலகட்டத்தில் எத்தனையோ சிரமங்கள் இருந்த போதிலும் தினமணி நாளிதழ் மட்டும் வாங்கி வாசிக்கத் தவறமாட்டேன்.
தினமணி நாளிதழில் வெளிவரும் செய்திகள் யாவும் துல்லியமானவை. கூர்மையானவை. செய்திகள் அனைத்தும் அறிவுக் களஞ்சியம். அவை, எனது தொழில் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக அமைந்தது.
பின்னர் மெல்ல மெல்ல உயர்ந்து கடந்த 31 ஆண்டு காலமாக சொந்தமாக அம்பத்தூர் தொழிற்பேட்டை அய்மா டெக்னாலஜி எதிரில் முதல் குறுக்குத் தெருவில் ஆட்டோ மொபைல் தொழில் நிறுவனமும் மற்றும் அம்பத்தூர் சிட்கோவில் ஹாட் ஃபோர்ஜிங் தொழிலும் நடத்திவருகிறேன்.
இதற்கெல்லாம் அறிவு மூலப் பொருள், தொழில் வழிகாட்டி என்ற பெருமை தினமணி நாளிதழையே சாரும். இன்றும் அதே சிறப்புடன் தொடர்வதற்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் அவர்களே காரணம் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
- எஸ்.சேவுகப் பெருமாள்
தரமான பொக்கிஷம்!
1972 -ஆம் ஆண்டில் ஆசிரியப் பணியேற்ற நாள் முதல் இன்றுவரை தினமணியின் வாசகனாக இருந்து வருகிறேன்.
எனது வகுப்பறை பாட போதனைக்கு, குறிப்பாக தமிழ் பாடபோதனைக்கு தினமணி தலையங்கக் கட்டுரையும், தமிழ்மணியும் மிகவும் பயன்பட்டு வந்தது. தமிழ்மணி தமிழ் ஆசிரியர்களுக்கு ஓர் அகராதி என்றே கூறலாம்.
கடந்த காலங்களில் வெளிவந்த தினமணி சுடரும், வணிகமணியும் இன்றும் நினைவில் உள்ளது.
மேலும் "நேற்றைய நிழல்' என்ற பகுதியில் வெளிவந்த தலைவர் பெருமக்களின் இன்றியமையாத படங்களும் எனது சேகரிப்பு தொகுப்பில் உள்ளன.
சிறுவர்மணியில் எனது குழந்தைப் பாடலும், ஞாயிறு கொண்டாட்டத்தில் வெளிவந்த, எளிய பொருட்களில் கல்வி உபகரணங்கள் என்ற பகுதியும் என்னால் என்றென்றும் மறக்கவியலாததாகும். தினமணியும், சிறுவர்மணியும், தினமணி கதிரும் சமுதாயத்தில், காலங்களால் அழிக்கமுடியாத அறிவு பொக்கிஷங்களாகும்.
- பி.தேவதாசன் ஞானராஜ்