"கண்களால் கைது செய்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் பிரியாமணி. "பருத்திவீரன்' படத்தில் நடித்துப் பிரபலமானார். இந்தப் படத்துக்காக அவருக்குச் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
கரோனா பொது முடக்கத்தில் பிரியாமணி அளித்துள்ள பேட்டி:
""இப்போது கதைகள் கேட்கிறேன். சினிமா துறையில் ஒரு காலத்தில் கதாநாயகனுக்கு ஒரு மரியாதை கதாநாயகிக்கு ஒரு மரியாதை என்று வித்தியாசம் இருந்தது. அது இப்போது மாறுகிறது. காஜல் அகர்வால், தமன்னா, நயன்தாரா, சமந்தா போன்றவர்கள் மார்க்கெட்டை பொறுத்து சம்பளம் வாங்குகிறார்கள். இதைப் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன்.
எனக்கு பணத்தின் மீது ஆர்வம் இல்லை. இப்போது எனக்குக் கொடுக்கும் சம்பளத்தில் திருப்தியாக இருக்கிறேன். எனக்கு நல்ல கணவர். குடும்பம் கிடைத்து உள்ளது. திருமணமாகி 3-ஆவது நாளே படப்பிடிப்புக்கு போனேன். கணவர் குடும்பத்தில் எனக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. அதனால் சினிமாவில் நீடிக்க விரும்புகிறேன். படப்பிடிப்புகளை இப்போது ஆரம்பிப்பதுபோல் தெரியவில்லை. இதனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்'' என்றார் பிரியாமணி.