ராஜஸ்தான் மாநிலத்தில் தலைப்பாகை கட்டுவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
கி.மு. 1 மற்றும் 2-ஆம் நூற்றாண்டிலேயே தலைப்பாகைகள் கட்டும் வழக்கமிருந்ததை சாஞ்சி மற்றும் பாருட்டில் காணப்படும் சிற்பங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
இதைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்
படும் பட்டை 30 செ.மீ அகலமும் தலைப்பாகை துணி நீளத்தை விட இரண்டு மடங்கு நீளமும் இருக்கும்.
சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப இவைகளின் அளவு அமையும். விவசாயிகளும் கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இது பாதுகாப்பானதாக அமைகிறது. பயணங்களின் போது இதை தலையணியாகவும் உபயோகிப்பது உண்டு. உடலைத் துடைக்கும் துண்டாகவும் இது பயன்படும். பக்கெட் கட்டி கிணற்றிலிருந்து தண்ணீரை எடுப்பதற்கும் பயன்படுத்துவர்.
ஒருவரது தலைப்பாகையிலிருந்தே அவர் எந்த வகுப்பை சேர்ந்தவர், என்ன செய்கிறார் எந்த மாவட்டத்திலிருந்து வருகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ராஜஸ்தானில் ஒவ்வொரு 25-லிருந்து 30 கி.மீ தொலைவிற்கும் தலைப்பாகை கட்டும் பாணி மாறுகிறது.
ராஜஸ்தான் மக்கள் பிறப்பிலிருந்து இறப்பு வரை தலைப்பாகை கட்டுவதை கடமையாகக் கருதுகின்றனர். இறந்து போன உடல் அருகே இறந்தவரின் தலைப்பாகை வைக்கப்பட்டு மரியாதை செய்யப்படுகிறது.
ஒருவர் மத சம்பந்தமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அவசியம் தலைப்பாகை அணிந்து கொள்ள வேண்டும். தலைப்பாகை தீயசக்திகளிடமிருந்து தங்களை பாதுகாக்கின்றது என ராஜஸ்தானியர் நம்பு
கின்றனர்.
ஒருவர் தலைப்பாகை இல்லாமல் மற்றொருவரை சந்தித்தால் அது அபசகுனமாக கருதப்படுகிறது.
ஒருவருக்கு மற்றவரின் உதவி தேவைப்பட்டால் அவர் தன் தலைப்பாகையை எடுத்துவிட்டு தனது கோரிக்கையைச் சொல்வார். ஒருவர் தவறு செய்துவிட்டால் மன்னிப்பு கேட்பதற்கு அடையாளமாக தனது தலைப்பாகையை மற்றவர் காலடியில் வைப்பார்.
தலைப்பாகையை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்வது நட்பின் அடையாளமாக கருதப்படுகிறது.
- ஒருவர் இறந்துவிட்டால் அவர் இறந்து 12-ஆவது நாளன்று அவரது தலைப்பாகை உறவினர்கள் கூடி அவரது மூத்த மகனுக்கு அணிவிக்கப்படும்.
திருமணங்களின் போது மணமகளின் பெற்றோர் மணமகனின் நெருங்கிய உறவினர்களுக்கு தலைப்பாகைகளை பரிசாக அளிப்பர்.
குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டால் வெள்ளை நிற தலைப்பாகை அணிந்து இறுதிச் சடங்கில் கலந்து கொள்வர். துக்க நிகழ்ச்சியை விசாரிக்கச் செய்வோர் காக்கி, நீலம், சிவப்பு ஆகிய நிற தலைப்பாகைகளை அணிந்து கொள்வர்.
பிப்ரவரி -மார்ச் மாத அறுவடை காலங்களில் வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் வடிவமைத்த தலைப்பாகைகளையும் ஜுலை மாதத்தில் பிரகாசமான நிறங்களிலும் அல்லது முத்து பதித்த இளஞ்சிவப்பு வண்ணத்திலும் மழைக்காலங்களில் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் கோடு போட்ட தலைப்பாகைகளையும் அணிவார்கள்.
ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு விதமான தலைப்பாகை அணியப்பட்டது. கருப்பு பார்டரும், சிவப்பு பார்டரும் தாங்கியவை தீபாவளிக்கும் வெள்ளை சிவப்பு ஹோலிக்கும், குங்குமப்பூ நிறம் தசாராவிற்கும், சிறிய வட்ட வடிவங்கள் ரக்ஷா பந்தனுக்கும், மஞ்சள் வசந்த பஞ்சமிக்கும் அணியப்பட்டது.
ராஜஸ்தானிய மகாராஜாக்களும் விதவிதமான தலைப்பாகைகளை தங்கள் செல்வாக்கை வெளிப்படுத்தும் வகையில் பிரத்யேகமாக வடிவமைத்து அணிந்தனர்.