பரத் பவி மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ஆறா'. பரத், பவித்ரா, சாதனா, ரமேஷ், பிரியங்கா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். வெற்றிவேல் சாரங்கபாணி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன் ஒளிப்பதிவும் செய்கிறார். பகைமையை சொல்லி பிள்ளைகளை வளர்க்காமல் அன்பை ஊட்டி பிள்ளைகளை வளருங்கள் என்ற கருவை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து இயக்குநர் பேசும் போது....""இந்தக் கதையின் எல்லாக் காட்சிகளும் போய் முடிவது மனிதத்தின் வாசலில்தான். ஒவ்வொரு மனிதனுக்குமான அன்பும் வன்மமும் மாறி மாறி கண்ணீரிலும் புன்னகையிலும்தான் போய் முடியும். அழகு, நிறம், பணம், ஜாதி, மதம் என்று அன்றாட அத்தனை அபத்தங்களையும் அடித்து நொறுக்கி, அன்பையும் அக்கறையையும் மட்டுமே முன்வைக்கிற இடம் அது. மனதின் வெளிச்சமே மானிட வெளிச்சம் என்று உணர்கிற இடங்கள் ஆங்காங்கே வரும். அதுதான் இந்த கதையின் பலம் என்று நினைக்கிறேன். நம் கண் முன்னே கொட்டிக் கிடக்கிற மனித வாழ்க்கைதான் இந்தப் படத்துக்கான வடிவம்.
நீங்கள் எப்படி நினைத்தாலும் கதை, அப்படியே அதை பேசும். உங்களை கடந்து போகிற ஒவ்வொரு எளிய மனிதனும் இந்த சினிமாவில் தென்படுவான். ஒரு காதல், ஒரு சம்பவம், ஒரு பிரச்னை.. என எதையும் இந்தக் கதையில் முன்னிலைப்படுத்தி பார்க்க முடியாது. அப்படி பார்த்தால் அதை சுற்றியிருக்கிற மனிதர்களை விட்டும் அகல முடியாது. எழுதுவதும், பேசுவதும், சினிமா எடுப்பது சந்தோஷத்துக்காக மட்டுமேதான். சக மனிதர்களின் அன்பும், அரசியலும்தான் இங்கே மூலதனம். சில சமானியர்களின் குறிப்புகள் என்று கூட இதைச் சொல்லலாம்'' என்றார் இயக்குநர்.