இயக்குநர் விசு மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை வினோதினி. சிறு வயதிலேயே "நாயகன்' படம் முதலாக பெரும் நடசத்திரங்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 16 வயதில் கஸ்தூரி ராஜாவின் "ஆத்தா உன் கோயிலிலே' படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். பாலு மகேந்திராவின் "வண்ண வண்ண பூக்கள்' இந்திய அளவில் பெரும் பிரபலத்தை பெற்று தந்தது. கன்னட, மலையாள மொழிகள் உட்பட, பல மொழிகளில் நாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும், முன்னணி நாயகர்களுடனும் பல படங்களில் நடித்து, தென்னிந்தியாவில் பிரபல நட்சத்திரமாக திகழ்ந்தவர். திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த அவருக்கு இப்பொழுது நல்ல வாய்ப்புக்கள் தேடி வருவதால் மீண்டும் நடிப்பில் களமிறங்கவுள்ளதாக கூறியுள்ளார்.
""மணிரத்னத்தின் "நாயகன்' படத்தில் சிறு வயது சாராவாக நடித்தேன். மும்பையில் தான் படப்பிடிப்பு. அங்கு தங்கியது நடித்தது எல்லாமே மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. மணிரத்னம் சாரை அந்தப்படத்திற்கு பிறகு நான் பார்த்ததே இல்லை. என் வாழ்க்கை முழுவதுமே சினிமாவை சுற்றித்தான் இருந்தது. பாலுமகேந்திரா எனக்கு ஒரு தந்தை போல் இருந்தார். எனக்கு திரைத்துறையில் மிகவும் பிடித்தவர். தமிழை விட கன்னடத்தில் நிறைய படங்களில் நாயகியாக நடித்தேன். கன்னடத்தில் நிறைய வாய்ப்புகள் வந்ததால் தமிழில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை, நான் திரும்பி வரும்போது இங்கு நிறைய புது நடிகைகள் வந்துவிட்டனர். தமிழ் திரையுலகம் பிடிக்கும் என்பதால் அதிலும் தொடர்ந்து நடித்தேன். அப்போதைய நட்சத்திரங்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளேன் என இப்போது நினைத்தால் பெருமையாக இருக்கிறது'' என்றார் வினோதினி.