Enable Javscript for better performance
A voice for the preservation of heritage and culture- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் காப்பதற்கான குரல்

    By ஜி.அசோக்  |   Published On : 28th November 2021 06:00 AM  |   Last Updated : 28th November 2021 06:00 AM  |  அ+அ அ-  |  

    sk14

     

    ""போராட்டம் என்பது, வெற்றுக் கூச்சல்களோ அல்லது கண்ணீர் கதறல்களோ அல்ல. அது நம் வாழ்வுரிமைக்கான வலி. அது எப்படியும் ஒலிக்கலாம். அதற்கென விதிமுறைகளோ, வடிவங்களோ கிடையாது என்பதுதான் மெரினா புரட்சி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட சம்பவங்கள் நமக்கு சொல்லி சென்ற செய்தி. இளைஞர்கள், மாணவர்கள் வைத்து எழுப்பிய நெருப்பு, ஒன்று திரளாத சமூகத்தையும், வறட்டு மெüனம் காக்கும் போலி ஜனநாயகத்தையும் பொசுக்கும் நெருப்பு என்பதை அதிகார மையங்கள் புரிந்துக் கொண்டதுதான் இந்த போராட்டங்களின் வெற்றி. அது போன்ற ஒரு போராட்டத்தின் முழு வடிவம்தான் இந்தப் படம்''. படத்தின் டிரெய்லர் ஓட விட்டப்படி பேசத் தொடங்குகிறார் இயக்குநர் ஜெ.பி. பாரதிராஜாவின் மாணவர். இவர் இயக்கும் மூன்றாவது படம் "குச்சி ஐஸ்'.

    "குச்சி ஐஸ் '.... கவர்ந்திழுக்கும் தலைப்பு.

    ஆமாம், அதை சரி வர புரிந்து வந்திருக்கிறேன். தலைப்புதான் படம். உண்மையில் இன்றைய தலைமுறைக்கான அரசியல் என்பது, உலக மயமாக்கலுக்குப் பிறகான குழப்பமான அரசியல். அதை கலைத்து பார்ப்பதற்கான ஒரு களமாக அந்த மெரினா போராட்டக் களத்தைப் பார்த்தேன். அதை விடஅதிகாரமும், வெளிநாட்டு நிறுவனங்களும் நம் மீது நிகழ்த்திய அடக்கு முறைகளுக்கு எதிரான போராட்டமாகவும் இது இருந்தது என்பதுதான் நிஜம். அதைத்தான் போராட்ட களம் வெளிப்படுத்தியது. மெரினா மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுக்கவே கோலா கம்பெனிகளுக்கு எதிரான தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்டதே, அதற்கு சாட்சி. கூடவே கருகும் பயிர்களுக்காக உயிர் விடும் விவசாயிகளுக்காகவும் அவர்களுடைய குரல் ஒலிக்கத்தவறவில்லை. மண்ணைக் காப்பது தொடங்கி அத்தனை பேரும் சர்வதேச அரசியலை எல்லாம் அவ்வளவு எளிமையாக உரையாடினார்கள். தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் எங்கும் ஒலித்த குரல்கள் நம் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் காப்பதற்கான குரல்களாகவே இருந்தன. நம்முடைய விளையாட்டிலும் குடிக்கும் கோலாவிலும் அரசியல் உண்டு என்ற கல்வியை போராட்டக் களத்தில் இருந்து வீட்டுக்கு எடுத்துச் சென்றதுதான் இதன் வெற்றி. அது மாதிரிதான் இதுவும்.

    எப்படி இருக்கும் திரைக்கதை வடிவம்...

    இந்தப் படத்தில் எல்லாரையும் ஈர்த்து, கவனம் கலைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். சினிமா என்பது பெரும்பாலும், நாம் பார்த்த, ரசித்த விஷயங்களை எடுக்க வேண்டும் என்றுதான் இருக்கும். நமக்கு எல்லாமே சென்னைதான். ஆனால் போகாத கிராமம் கிடையாது. பயண வாழ்க்கை மட்டும்தான். அதன் பின் சினிமாவுக்காக மும்பை, ஹைதராபாத், கேரளா, ஆந்திரம் என சினிமாவுக்காக சென்னை என பயணங்கள் நீண்டன. பிழைப்பு, சினிமா என எல்லாம் முடிந்து தமிழக கிராமப் பகுதிகளுக்கு போனால், ஊரின் முகமே மாறியிருந்தது. உசிலம்பட்டி அருகே ஒரு கிராமம். சித்திரம் போல் இருந்த அந்த கிராமங்கள், மக்கள் எல்லாவற்றிலுமே மாற்றங்கள். குறிப்பாக, மருத்துவமனைகள் வந்திருந்தன. அதிகபட்சம் ஒரு பெட்டிக்கடை இருந்த ஊர் அது.

    உணவுச் சங்கிலி முறைகள் அறுந்துபோனதன் விளைவுதான் அது என்று தெரிந்து கொண்டேன். உசிலம்பட்டி கலர், பன்னீர் சோடா என்றால், சுத்துப்பட்டில் அவ்வளவு பிரபலம்... ஒரு காலத்தில்.. திருநெல்வேலி, கன்னியாகுமரி, குற்றாலம் வரைக்கும் வியாபாரம் அள்ளும். கோயில் கோபுரம் போட்டு பக்கத்தில் ஒரு ரோஜாப் பூ வரைந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பன்னீர் சோடா கிடைக்காத கடை இருக்காது. வெற்றிலையைக் குதப்பிக்கொண்டே திண்ணைத் தூணில் சாய்ந்தபடி, "நீ இந்த சோடாவ எங்கயும் குடிக்க முடியாது... தாமிரபரணி தண்ணிக்குன்னு ஒரு டேஸ்ட்டு இருக்கு... அதானே நம்ம ஸ்பெஷல்...'' என்பார் பெட்டிக்கடை அண்ணாச்சி.

    இப்போது அந்த கம்பெனியே இல்லை. அழுக்கு வேட்டியும் துண்டுமாக அய்யாவைப் பார்க்கவே மனசுக்கு ஒருமாதிரி இருந்தது. உள்நாட்டின் தொழில்கள் நசிந்து போவது ஒரு முதலாளித்துவத்தின் ஆதார விதி அந்த சின்ன தொழில்களோடும் அவர்களின் வாழ்க்கை முறைகளோடும் நமக்கும் வெறும் நினைவுகளாக மட்டுமே தங்கி இருக்கிறார்கள். அவர்களது அழிவு என்பது தவிர்க்க முடியாதது மொத்தமாக முதலாளித்துவம் ஒழியும் போதுதான் போட்டா போட்டி நொறுங்கும். வாழ்க்கையை அதன் எதார்த்த நோக்கில் மனிதன் வாழ ஆரம்பிப்பான். இதை சினிமாவாக எடுத்து உணர்த்த வேண்டும் என்பதுதான் கனவு. அதுதான் இது. இங்கே குச்சி ஐஸ் விற்கிற ஒருவனின் வாழ்க்கைதான் படம். அதில் என்ன அரசியல் இருக்கிறது என கேட்கலாம். அதுதான் களம்.

    படத்தில் நிறைய நடிகர்கள்.... என்ன விசேஷம்...

    "நாடோடிகள்' பரணி, லத்திகா, நாஞ்சில் விஜயன், காந்தராஜ், அருள்மணி வசீகரன்... என நிறைய பேர். அவர்களின் அனுபவங்கள் பயன்பட்டு இருக்கிறது. கேட்கிற நாள்களில் வந்து நடித்து தந்தார்கள். அத்தனை பேரும் அப்படி பொருந்தி வந்திருக்கிறார்கள். டோஸ் நந்தா இசை. பிருந்தா சாரதி, அம்பிகா குமரன், மாலி ஆகியோரின் பாடல் வரிகள் அத்தனை பலம். இது என் முதல் படம். சும்மா கலகலவென படத்தை கொண்டு போவதுதான் தெளிவு. வாழ்க்கையின் எந்தப் பக்கத்தை திறந்து பார்த்தாலும், அதில் ஆச்சரியங்கள் நிறைந்து இறைந்து கிடக்கிறது. ஈரமான மனசுகள் நாம் எதிர்பார்க்காத இடங்களில் இருக்கும். உங்களின் சந்தோஷத்திற்கும், நிறைந்த எதிர்பார்ப்பிற்கும் நிச்சயம் உத்திரவாதம் உண்டு. முழு படத்தையும் கையில் வைத்துக் கொண்டுதான் நம்பிக்கையோடு பேசுகிறேன். நானே ரசிக மனப்பான்மையால் பார்த்து ரசித்துத்தான் சொல்கிறேன். சமூகம் சார்ந்த படம் இப்படித்தான் இருக்கும்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp