அன்புக்கு மட்டுமே நிஜமாக இருப்போம்!

"வரம்பு மீறிய காதல், காமம், பெற்றோர்களை ஏமாற்றுவது, பொய் சொல்லுவது.. இன்னும்இன்னப் பிற மீறல்களைத்தான் பல சினிமாக்கள் அர்த்தப்படுத்தி வந்திருக்கின்றன.
அன்புக்கு மட்டுமே நிஜமாக இருப்போம்!

"வரம்பு மீறிய காதல், காமம், பெற்றோர்களை ஏமாற்றுவது, பொய் சொல்லுவது.. இன்னும்இன்னப் பிற மீறல்களைத்தான் பல சினிமாக்கள் அர்த்தப்படுத்தி வந்திருக்கின்றன. இது அது மாதிரி இல்லாமல், வேறொரு மீட்டுருவாக்கத்தில் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஆனாலும், எப்போதைக்குமான மனசுஅந்தப் பள்ளி, கல்லூரி என காதல் வாழ்க்கையிலேயே சிலாகிக்க விரும்புகிறது. சக தோழர்கள், ஆசிரியர்கள், அந்த மர நிழல், குளம், ஆறு என எதையும் மறக்க மறுக்கிறது மனசு. ஆயிரங்களில் இருந்து லட்சங்களுக்கு மாறிய வாழ்க்கை கிடைத்தாலும், இன்னொரு முறை அந்த வாழ்க்கையை வாழவே முடியாது. வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பது போல, முகத்தால்... குரல்களால்... செயல்களால்... சாயல்களால்தான் நம்பிரிவுகளையும் பிரியங்களையும் நிரப்பிக் கொண்டே இருக்கிறோம்.'' உள் வாழ்க்கை உணர்ந்து பேசுகிறார்இயக்குநர் ஆர். கண்ணன். தமிழ் சினிமாவில் தொடர்ந்து இயங்கும் படைப்பாளி. இப்போது "தள்ளி போகாதே'கதையுடன் வருகிறார்.

தலைப்பே வசீகரமாக இருக்கிறது...

பல சம்பவங்கள் அடங்கிய ஒரு காதல் வாழ்க்கை தரிசனம் இது. காதல் அதி முக்கியமானது. அதர்வா - அனுபமா பரமேஸ்வரன் இந்த இருவருக்கும் காதல். ஆனால், சந்தர்ப்பமும் சூழலும் இவர்களை இடம் மாற்றி வைக்கிறது. எல்லோருக்கும் வாழ்க்கையில் இரண்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் வரும். ஆனால், காதலில் எப்படியும் ஜெயித்தே ஆக வேண்டும் என்கிற வழிதான். இப்படியும் போகலாம், அப்படியும் போகலாம் என்பது இதில் இல்லை. இதில் வருகிற கதை நாயகன் தேர்ந்தெடுக்கிற வழிதான் முக்கியமானது.

மனிதன் தோன்றிய காலத்திலிருந்து மென்மை, துரோகம், வன்மம், குற்றம் எல்லாம் இருந்துக் கொண்டே இருக்கிறது. கொஞ்ச சதவீதம் கூடிக் குறைந்து இருந்தால் நாமே நல்லவன், கெட்டவன் என்று பிரித்து சொல்லி விடலாம்.

கெட்டவனாக இருந்தவனை நல்லவனாக ஆக்குவதற்கான முயற்சியும், அவனை வேறு திசைக்கு கொண்டு போகிற முயற்சியும் இங்கே நடக்கிறது. அப்படிப்பட்டவனை ஒரு சூழல் தெளிவு நிலைக்கு கொண்டு வருகிறது. வாழ்வில் எல்லாமும் போன பின்பு, அன்புக்கு மட்டுமே நிஜமாக இருப்போம் என்று போகிற இடங்களும் வருகிறது. இன்னமும் இங்கே மென்மையும், பிற மனிதர் சார்ந்த அக்கறையும் அருகிப் போய்விடவில்லை என்பதும் புரியும். இங்கே ஆரம்பிக்கிற கதை ரஷ்யா வரை பயணமாகி போகிறது.

காதலை அர்த்தப்படுத்துகிற தலைமுறை பிள்ளைகள் மாறியிருக்கிற காலம் இது....

எல்லாவற்றுக்கும் இங்கே முன் மாதிரிகள் இருப்பதால், உங்களுக்கு அப்படித் தோன்றும். ஆனாலும், இன்னும் உண்மையான அன்புக்கு கிடையாய் கிடப்பவர்கள் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். காதல் என்கிற, அற்புதமான சந்தோஷம் இருப்பதால்தான் சமூகம் வாழ்கிறது. படித்தது, பார்த்தது, கேட்டது, உணர்ந்ததுதான் படைப்பாக வருகிறது. இது கூட சென்டிமென்ட் சினிமாவிற்கான வார்த்தையாக இருக்கலாம். அப்படிப் பார்த்தால் இது கூட சென்டிமென்ட்தான். இந்த கதை, உறவுகள் கூட பழையதுதான். ஆனால், அதை எனக்கான உணர்வாக, மனிதனாக காட்சிப்படுத்தியதுதான் புதிது. எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இவை எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடைய துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களை தவிர வேறு எதையும் விட்டு போகக்கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும். மனித உறவுகளின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. காதலை சொல்லலாம். சொல்லாமல் கூட இருக்கலாம். காதல், பேசுகிற விஷயமில்லை.

எப்படி இந்த கதைக்குள் அதர்வா வந்தார்...

இதுதான் கதை என்று முடிவான வேகத்தில் எல்லா நடிகர்களையும் முடிவு செய்து விட்டேன். கதையின் உண்மைத்தன்மைக்கு பக்கத்தில் இருப்பவர்களை மட்டும்தான் இந்தப் படத்திற்காக விரும்பினேன். அப்படி வந்தவர்தான் அதர்வா. ஒரு ஸ்கிரிப்ட்டில் இறங்கி சடசடன்னு உள்ளே போய்ப் புகுந்து கொள்கிற ஆர்வம் அதர்வாவிடம் இருக்கிறது. இன்னமும் அவர் சின்னப் பையன் இல்லை. தூக்கத்தைக் கூட மறந்து விட்டு "நான் எப்படியெல்லாம் இருந்தா நல்லாயிருக்கும்'னு கேள்விகளால் துளைத்தெடுப்பார். "வேலை இல்லா பட்டதாரி'யில் அமுல் பேபியாக வருவாரே... அவருக்கு கதையில் இன்னொரு இடம் உண்டு. முக்கியமாக அனுபமா பரமேஸ்வரன். தனித்து தெரிகிற கதையின் நாயகி. இந்த மூன்று பேரும் இணைந்து நிற்கிற புள்ளிதான் கதையும் கூட. இன்னும் அவ்வளவு விஷயங்கள் இதில் உண்டு. இப்போது இருக்கிற ரசிகர்கள் மிகவும் சினிமா தெரிந்தவர்கள். அவர்களை தியேட்டரில் உட்கார வைக்க நிறைய திறமை தேவைப்படுகிறது. அழகான கதை. அவ்வளவுதான்.

பாடல், இசைக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பீங்க...

கோபி சுந்தர்தான் மியூசிக். தெலுங்கு, மலையாளம் என இவருக்கு தனி வட்டம் உண்டு. தமிழிலும் தனித்துவம் இருக்கிறது. அவசரப்படாமல் கதை கேட்டு, அதில் இசைக்கு என்ன வழி உண்டு என பார்த்து விட்டு "சரி'ன்னு சொல்கிற ஆளு. இசைக்கு வலிமையான இடங்கள் இருப்பதை தெரிந்து கொண்டு, உடனே அவரது பெஸ்ட்டைக் கொடுத்து இருக்கிறார். ரசித்து கேட்கும் ட்யூன். பாடல்கள் எல்லாமே அருமையாக வந்திருக்கிறது. தனித்துவத்தை நீங்களே உணர்கிற இடங்கள் வருவது ஆச்சர்யம்.

நல்லிசையும், மெல்லிசையும் இணைகிற இடத்தில் அவர் இனி இருப்பார். ஒளிப்பதிவு சண்முக சுந்தரம்.

கபிலன் வைரமுத்து வசனங்கள் படத்துக்கு அவ்வளவு பலம். கரோனா கால கட்டத்துக்குப் பின் ரசிகர்களுக்கு எதார்த்த களம் தேவைப்படுகிறது. அதை ஆரோக்கியமாக இந்தப் படம் தொடங்கி வைக்கும். எல்லோரும் சேர்ந்து உழைத்து இருக்கிறோம். அழகான நம்பிக்கை சித்திரம் இது. இந்த உற்சாகம் தொடர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com