ரத்தத்தின் ரத்தமே... - 60

"ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இரு நாளுக்கு  ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும் என்னோவறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது'
ரத்தத்தின் ரத்தமே... - 60

"ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இரு நாளுக்கு  ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும் என்னோவறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது'

 "துன்பம் மிகுந்த என் வயிறே உணவு கிடைக்காதபோது ஒரு நாளைக்கு உணவு உண்ணாமல்  ஒழி என்றால் கேட்கமாட்டாய். உணவு கிடைக்கும் போது இருநாளைக்கு சேர்த்து உணவினை உண்டு கொள் என்றால் அதுவும் உண்ணமாட்டாய் ஏ  வயிறே! உன்னோடு சேர்ந்து வாழ்ந்து காலம் தள்ளுதல் அரிது என்ற கருத்தில் பசியின் கொடுமையைப் பற்றி ஒளவையார் "நல்வழி' என்னும் நூலில் வயிற்றோடு வாக்குவாதமே செய்திருக்கிறார்.

உங்களைச் சாப்பிடச் சொல்லி தூண்டும் ஒரு உணர்வுக்குப் பெயர்தான் "பசி' ஆகும். பசியை சந்திக்காத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். நாம் எப்பொழுதுமே பசி பட்டினி என்றுதான் சொல்வோம். பசிவேறு, பட்டினிவேறு. சாப்பிடச் சொல்லி தூண்டும் உணர்வுக்குப் பெயர் பசி. பசியிருந்தும் அந்த நேரத்துக்கு உணவு கிடைக்காமல் சாப்பிடமுடியாமல் போவதற்குப் பெயர் "பட்டினி'. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்... என்று பாரதியார் பட்டினியாய் கிடப்பவரைப் பார்த்த ஆவேசத்தில் மிகுந்த கோபத்துடன் பாடிய வரிகள் தான் இவை.

பசி-பொறுத்துக் கொள்ளமுடியாத உருவமற்ற ஒரு உடல்நோய். உலகம் முழுவதும் வாழும் மக்கள் உயிர்வாழ தினமும் உணவுதேவை. உலகம் முழுக்க வாழும் மக்களுக்கு ஏதோ ஒரு வழியில் குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டாலும், ஒரு வேளை உணவுகூட சரிவரக் கிடைக்காமல் பட்டினியாய்க் கிடப்பவர்களும் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பசி உணர்வு உங்களுக்கு ஏற்பட்டவுடன், உங்களது வயிறு காலியாக இருக்கிறது. உடனடியாக நடவடிக்கை எடு என்று உங்களது உடல், உங்களது மூளைக்குச் சொல்கிறது. மூளை ஏற்படுத்தும் சிக்னலினால் வயிறு அதாவது இரைப்பை உறுமுகிறது. இதைத்தான் நாம் வயிறு இரையுது, சீக்கிரம் சாப்பிடணும் என்று சொல்வோம். வயிறுகாலியாக இருப்பதினால்,  பசியினால் வயிற்றில் திடீரெனகடும் வேதனைஏற்படுகிறது. இதைசிலர் வயிறு வலிக்குது என்று சொல்வார்கள். 

தெரிந்தவர்கள் புரிந்தவர்கள் அறிந்தவர்கள் சிலர் இதை "பசி வலி' என்பார்கள். சிலருக்கு பசி வயிற்றில் எரிச்சலை உண்டு பண்ணிவிடும். சாப்பிடும் நேரம் தாண்டி வயிறு எரிச்சலடைய ஆரம்பித்துவிட்டால் "சார் வயிற்றிலிருந்து கருகின வாசனை வருகிறது' என்று கேலியாகச் சொல்வார் எனது டிரைவர். அகோரப் பசியில் அவர் இருக்கிறார் என்றுஅர்த்தம். பசியின் அறிகுறி ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமாக இருக்கும். "வெயிலின் அருமை நிழலில் தெரியும்'  என்பது போல, பசியின் அருமை அதை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.

பசி உணர்வு மூளையின் அடியிலுள்ள "ஹைப்போதலாமஸ்' என்கிற ஒரு சிறிய உறுப்பினால் கட்டுப்படுத்தப்படுகிறது. மூளையின் அடியில் மூளையின் பின்பகுதியில் மூளையோடு சேர்ந்திருக்கும் ஒரு சிறிய உறுப்புக்குப் பெயர் ஹைப்போதலாமஸ் ஆகும். 

இந்த உறுப்பு பசி தாகம், உடல்சூடு பாலுணர்வைத் தூண்டுதல் போன்றவைகளின் செயல்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறது. இதுபோக உங்கள் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு உங்களது உடலிலுள்ள சில ஹார்மோன்கள் அளவு  மற்றும் உங்களது இரைப்பையும் குடலும் எவ்வளவு காலியாக இருக்கிறது என்பதைப் பொறுத்தும் பசிஅமைகிறது.

பசி ஆர்வம் என்பது உணவின் மேல் ஏற்படும் விருப்பமாகும். இதை பசி ஆசை என்று கூட சொல்லலாம். பொதுவாக, இது ஒருஉணவைப் பற்றி நினைத்தாலோ, நினைத்துப் பார்த்தாலோ, வாசனையை நுகர்ந்தாலோ, நேராக உணவு அயிட்டங்களைப் பார்த்தாலோ, உடனே ஏற்பட்டு விடும். உங்களது வயிறு நிரம்பியிருந்தால் கூட இந்த பசியார்வம் ஏற்படக்கூடும். சில நேரங்களில் நீங்கள்  பசியோடு இருந்தால்,அந்தப் பசியை நிறுத்தவும் செய்யும். இந்த மாதிரி ஏற்படுவது எப்பொழுதென்றால, நீங்கள் பசியோடு இருப்பீர்கள். உங்களுக்கு நன்றாக பசியெடுக்கும். ஆனால் உங்களால் சாப்பிடமுடியாது. உடல் நலமில்லாத நேரத்திலும் அதிக டென்ஷனாக இருக்கும் போதும் இம்மாதிரி ஏற்பட வாய்ப்புண்டு.

பசியின் போது உடல் என்னஆகும்? உங்களது ரத்தத்தில் குளுகோஸ், அமினோ அமிலங்கள்,கொழுப்பு அமிலங்கள் முதலியவை மிகமிகக் குறைவான அளவில் இருந்தால் நீங்கள் பசியுடன் இருக்கிறீர்கள் அல்லது உங்களுக்கு பசி ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம். இரைப்பையிலும் குடலிலும் உள்ள செல்கள் "க்ரெளின்' என்கிற ஒரு வகை ஹார்மோனை உற்பத்தி செய்யும். இந்த ஹார்மோன் பசியின் உணர்வை தூண்டிவிடும்.

 ஆனால்,  இந்த "க்ரெளின்' ஹார்மோன் அதிகமாக சுரந்தால், அதிக எடை உடலில் சேர்ந்து குண்டாகி விடவும் வாய்ப்புண்டு.

பசியை உணர வைக்க, பசி எடுக்கிறது என்பதைத் தெரிய வைக்க க்ரெளின் மற்றும் லெப்டின் ஆகிய இரண்டு முக்கியமான ஹார்மோன்கள் செயல்படுகின்றன. இரைப்பையில் உற்பத்தி ஆகும். க்ரெளின் மற்றும் லெப்டின் ஹார்மோன்கள், ரத்தத்தின் வழியாக மூளைக்குள் நுழைந்து, மூளையின் அடிப்பகுதியிலுள்ள, "ஹைப்போதலாமஸ்' உறுப்புக்குள் நுழைந்து, நியூரான் என்கிற நரம்பணு மூலமாக பசியின் செயலை அதிகரிக்கச் செய்யும் நரம்புகளை தூண்டிவிடுகிறது.

வயிறு காலியாகிவிட்டால் மறுபடியும் இந்த ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பித்துவிடுகிறது. க்ரெளின் ஹார்மோனை பசி ஹார்மோன் என்று கூட சொல்லலாம்.
நீங்கள் சற்று அதிகநேரம் சாப்பிடாமல் வயிற்றை காலியாக வைத்திருந்தால், உங்களது இரைப்பை, மேற்கூறிய இரண்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்து, பசியை தூண்டிவிடுகிறது. இரைப்பை மற்றும் குடல்கள் மெதுவாக அசைய ஆரம்பித்துவிடுகிறது. இரைப்பையில் சுரக்கும் ஜீரண அமில உற்பத்தி அதிகமாகி, ஜீரணமண்டலம் செயல்பட ஆரம்பித்துவிடுகிறது.

பசியை நீங்கள் உதறித் தள்ளினால், பசியை நினைவுபடுத்தும் அறிகுறிகளை நீங்கள் கண்டு கொள்ளவில்லை என்றால்,லேசான தலைசுற்றல், லேசான தலைக்கனம், லேசான தலைவலி, பொறுமையின்மை, எதையும் கூர்ந்து கவனிக்க முடியாமல் போதல் போன்றவை ஏற்படலாம்.

வேளாவேளைக்கு ஒழுங்காக சாப்பிட்டும் உங்கள் பசியின் தொல்லை அடிக்கடி இருக்கிறதென்றால்,  உங்களுடைய உணவு அயிட்டத்தில் புரதச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, அதிகமாக இல்லை என்று அர்த்தம். வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டோம். மனசு திருப்தியாக சாப்பிட்டுவிட்டோம் என்று உங்களுக்குத் தோன்றினால், அந்த உணர்வு உங்களது இரைப்பையிலிருந்து உங்களுடைய மூளைக்குச் செல்கிறது. பொதுவாக இந்த உணர்வு வருவது என்பது நீங்கள் அதற்கு மேல் சாப்பிட்டுவிடக் கூடாது என்பதற்காகவும்,சாப்பாட்டை  நிறுத்தவேண்டும் என்பதற்காகவும், அடுத்த சில மணி நேரங்களுக்கு சாப்பாட்டைப் பற்றி நினைக்கக்கூடாது என்பதற்காகவும் தான்.

நிறைய நேரம் பசியோடு இருந்தால், நமது உடலிலுள்ள புரதச் சத்துக்கள் சேமிப்புக் கிடங்கிலிருந்து வெளியாகி புரதங்கள் சிதைந்து, கரைந்து, சக்தியாகி உடலுக்குத் தருகிறது. உடம்பு இந்தப் புரதச் சத்துக்களை உடைத்து அமினோ அமிலங்களாகவும், குளுகோஸாகவும் மாற்றிவிடுகிறது. குளுகோஸ் உடலுக்கு இவ்வாறு கிடைத்து விடுவதனால் தான் சில பேரால் கடும்பசியைக் கூட தாங்கிக் கொள்ள முடிகிறது. சில நேரங்களில் உடலில் குளுகோஸ் அளவுக்கதிகமாக இருந்தாலுங் கூட, பசிஉணர்வு தோன்றுவதுண்டு.

நீங்கள் கடும் பசியோடு இருக்கிறீர்கள். ஆனால் சாப்பிடவில்லை, அதாவது உங்களால் அந்த நேரத்தில் சாப்பிடமுடியவில்லை என்றால் என்னவாகும்? உடல் "கார்டிஸால்' என்கிற ஹார்மோனை அதிகப்படுத்தும். இதனால் நாம் டென்ஷனாலும் பசிக்கோபத்தினாலும் பாதிக்கப்படுவோம். வேளாவேளைக்கு சாப்பிடவில்லை என்றாலும் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம்  ஒன்று உடல் எடையை குறைக்கும் அல்லதுஉடல் எடையைக் கூட்டும்.

உலகம் முழுவதும் வாழும் மக்கள், உயிர்வாழ தினமும் சாப்பிட்டே ஆக வேண்டும். ஆனால்,  எல்லோருக்கும் தினமும் உணவு கிடைக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். உலக ஜனத்தொகை ஒரு பக்கம் தினம் தினம் கூடிக்கொண்டே இருக்க, பசியின் கொடுமையும் இன்னொருபக்கம் கூடிக்கொண்டேதான் இருக்கிறது.

உலக அளவில் சராசரியாக ஒன்பது பேருக்கு ஒருவர் பசியால் வாடுகிறார்களாம். அதாவது உலக ஜனத்தொகையில் சுமார் பத்து சதவீதம் பேர் பசியால் வாடுகிறார்கள்.

ஹெய்தி, ஜாம்பியா, ஏமன்,  எத்தியோப்பியா, சாட், சூடான், கொமோரோஸ், திமோர் லெஸ்தே, எரித்ரியா,  புருண்டி, சோமாலியா ஆகிய நாடுகளில் பசியால் தவிப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். கொவைட் 19 தாக்கத்திற்குப் பிறகு பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

நம் நாட்டில் கூட பல கோடி மக்கள் பசியோடுதான் தூங்குகிறார் எனத் தகவல் உலக வங்கியும் ஐக்கியநாடுகள் கூட்டமைப்பும் 2030-க்குள் வறுமை பசி, பட்டினியை ஒழித்து விடவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள்.

""பொருள் இல்லாதவனுக்கு கஷ்டத்தினால் ஏற்படும் பசியை பொருள் உள்ளவர்கள் போக்க வேண்டும். அந்த தர்மமே, பொருள் உள்ளவனுக்கு பிற்காலத்தில் உதவ சேர்த்து வைக்கும் மிகப்பெரிய பொக்கிஷமாகும்'' என்கிறார் வள்ளுவர்.

அற்றார் அழி பசி தீர்த்தல் அஃ தொருவன்
பெற்றான் பொருள் வைப் புழி   

-குறள் எண் 226.

-தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com