ரத்தத்தின் ரத்தமே... - 61

மனித உடலின் ரத்தத்தைப் பற்றியும், ரத்த ஓட்டத்தைப் பற்றியும் அதிகமாக தெரிந்து கொள்ள நாம் படிக்கிறோம். பார்க்கிறோம்.
ரத்தத்தின் ரத்தமே... - 61

மனித உடலின் ரத்தத்தைப் பற்றியும், ரத்த ஓட்டத்தைப் பற்றியும் அதிகமாக தெரிந்து கொள்ள நாம் படிக்கிறோம். பார்க்கிறோம். அறிந்து கொள்கிறோம். ஆனால், நம்மைச் சுற்றி வாழும் விலங்குகளின் ரத்தத்தைப் பற்றியும், ரத்த ஓட்டத்தைப் பற்றியும் நாம் அதிகமாக தெரிந்து கொள்வதில்லை. தெரிந்து கொள்ள விரும்புவதும் இல்லை. தெரிந்து கொள்ள வாய்ப்பும் ஏற்படுவதில்லை. 

விலங்கினங்கள் என்றால் சிங்கம், புலி, கரடி போன்ற கொடிய விலங்குகளின் ரத்த ஓட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள அவசியம் அதிகம் இல்லை. மனிதர்களோடு சேர்ந்து, மனிதர்களை நம்பி, மனிதர்களோடு ஒட்டி, மனிதர்களுக்கு உதவியாக வாழும் விலங்குகளின் ரத்த ஓட்டத்தைப் பற்றி நாம் தெரிந்து வைத்துக் கொள்வது மிகமிக அவசியம். மிகமிக உபயோகமும் கூட.

சில விலங்குகளிடமிருந்து பெறப்படும் ரத்தம், மாற்று ரத்தமாக மனிதர்களுக்கும் உபயோகிக்கலாம் என தென் ஆப்பிரிக்காவில் ஒரு பதிவு இருக்கிறது.  "ஹீமோப்யூர்'  என்று சொல்லக்கூடிய ஆக்ஸிஜன் நிறைந்த பொருள், மாடுகளின் ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினிலிருந்து பெறப்படுகிறது. இந்தப் பொருள் மனிதர்களுக்கு, ரத்தச் சோகை சிகிச்சைக்கும், அறுவை சிகிச்சை சமயங்களிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. 

விலங்குகளின் ரத்த ஓட்டமும் அநேகமாக மனித ரத்த ஓட்டம் மாதிரியே தான் இருக்கும். மனிதர்களின் உடலில் நடப்பது போலவே, ஆக்ஸிஜனையும், சத்துப்பொருட்களையும் உடலெங்கும் கொண்டு செல்வது,  கார்பன் டை ஆக்ûஸடையும் கழிவுப் பொருள்களையும் உடலைவிட்டு வெளியேற்றுவது, இதைத்தான் விலங்குகளின் ரத்தமும் செய்கிறது. ஆனால் பல காரணங்களில் மனித ரத்தமும் விலங்குகளின் ரத்தமும் மாறுபடுகிறது. மனித ரத்தத்தில் "ஹீமோகுளோபின்' சுவாசப் பொருளாக இருக்கிறது. ஆனால் விலங்குகளின் ரத்தத்தில், ஹீமோகுளோபினுடன் வேறு சில சுவாச நிறமிப் பொருட்களும் கலந்திருக்கின்றன. சுவாச நிறமிப் பொருட்களைப் பொறுத்து, அந்த குறிப்பிட்ட விலங்கினுடைய ரத்தத்தின் நிறமும் மாறும். மனித ரத்தம் சிவப்பு நிறத்தில் இருக்கும். விலங்குகளின் ரத்தம் சிவப்பு, நீலம், பச்சை, மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். 

மனித ரத்தத்தைப் போல் விலங்குகளின் ரத்தத்தில் சிவப்பணுக்கள்,  வெள்ளை அணுக்கள், பிளேட்லெட் அணுக்கள், பிளாஸ்மா திரவம் போன்றவை இருக்கின்றன. பல விஷயங்களில் மனித ரத்தத்துக்கும், விலங்கு ரத்தத்துக்கும் மாறுபாடுகள் இருந்தாலும், மனித ரத்தத்தோடு அதிகம் ஒத்துப்போவது ஒரே ஒரு விலங்கின் ரத்தம்தான். உடனே நாம் எல்லோரும் குரங்கு என்று சொல்லுவோம். ஏனெனில் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் சொல்லப் போனால் மனித ரத்தத்தோடு ஒத்துப்போவது சாதா குரங்கோ அல்லது மனிதக் குரங்கோ இல்லை.

பன்றியின் ரத்த ஆன்டிஜனும் (எதிர்ப்புத்திறன் ஊட்டும் பொருள்) மனித ரத்த ஆன்டிஜனும் ஒரளவுக்கு அதிகமாக ஒத்துப்போகிறது. எதிர்ப்பு இல்லை என்று ஆய்வு கூறுகிறது. கேட்கவே ஆச்சரியமாகவும், பயமாகவும் இருக்கிறதா ஆய்வுகள் அப்படித்தான் சொல்கின்றன. லண்டனைச் சேர்ந்த டாக்டர் தானிராம் பரூவா என்கிற  அறுவை சிகிச்சை நிபுணர் நீண்ட காலங்களுக்கு முன்பு சுமார் 250 மில்லி லிட்டர் பன்றி ரத்தத்தை, பிழைக்கமாட்டார் என்று கைவிட்ட தீவிர ரத்தச் சோகையினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்குச் செலுத்தியுள்ளார். இதுதான் பின்னாளில் விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் எண்ணம் வருவதற்குக் காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. 

பன்றியின் ரத்தத்தைக் கொடுக்கும்போது,  குரங்கின் ரத்தத்தை ஏன் கொடுத்து சோதித்துப் பார்க்கவில்லை என்று நமக்குக் கேட்கத் தோன்றும். சிம்பன்சி, கொரில்லா குரங்குகளின் ரத்தத்தை மனிதர்களுக்குக் கொடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஆய்வின் முடிவு இன்னும் சரியாக நிரூபிக்கப்படவில்லை. 

கோழி, ஆடு, மாடு, பூனை, நாய் போன்ற விலங்குகள் தான் அதிகமாக மனிதர்களோடு வாழ்நாள் முழுவதும் தொடர்பில் இருக்கின்றன. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விலங்குகளும் மனிதர்களுடன்; அதிக பாசமாக பழகக்கூடியவை. அதேபோல் மனிதர்களும் இவ்விலங்குகளிடம் அதிக பாசம் கொண்டிருப்பார்கள். ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு சீமந்த நிகழ்ச்சி எப்படி கொண்டாடுவோமோ, அதே போன்று கர்ப்பமாக இருக்கும் ஒரு நாய்க்கும் சீமந்தம் நடத்தியதாக ஒரு நாளிதழில் படித்தேன். அந்த அளவுக்கு பாசப்பிணைப்பு செல்லப் பிராணிகளிடம் நமக்கு ஏற்பட்டுவிடுகிறது. 

பிராணிகளின் ரத்தம் சம்பந்தப்பட்ட ஓரளவு விஷயங்களை நாம் தெரிந்து வைத்துக் கொள்வதில் தப்பில்லை.

கோழி முதலிய பறவைகளைப் பொறுத்தவரை, மனிதர்களைப் போலவே ரத்தம், உடலிலுள்ள எலும்பு மஜ்ஜையிலிருந்து தான் உற்பத்தி ஆகிறது. கோழிகளுக்கு,  அதன் நீண்ட காலிலுள்ள எலும்பிலிருந்தும், இறக்கையிலுள்ள எலும்புகளிலிருந்தும் தான் ரத்தம் உற்பத்தியாகிறது. கோழியினங்களைப் பொறுத்தவரை கோழியின் ரத்தம் நியூகேஸில் நோய் என்கிற ஒரு வகை வைரஸ் நோயின் எதிர்ப்புச்சக்திப் பொருளைப் பரிசோதித்துப் பார்க்க உதவுகிறது. 

கோழியின் உடலில் அதன் மொத்த உடல் எடையில் சுமார் 6 லிருந்து 7 சதவீதம் அளவுதான் ரத்தம் இருக்கும். அதாவது சுமார் ஒரு கிலோ எடையுள்ள கோழியின் உடலில் 75 மில்லி லிட்டர் ரத்தம் இருக்கும்.  ப்ராக்கோலி, காலிப்ளவர், முட்டைகோஸ், முளைகட்டிய பயறுவகைகள் நன்கு வளர, அந்தச் செடிகள் விளையும் மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகமாக தேவை. சில இடங்களிலுள்ள மண்ணில் நைட்ரஜன் மிகமிகக் குறைவாக இருக்கும். 

கோழியின் ரத்தம் செடி கொடிகளுக்கு ஒரு நல்ல இயற்கை உரச்சத்து ஆகும். கோழியின் ரத்தத்தை தோட்டத்தில் வளர்க்கும் செடி கொடிகளின் மண்ணில் சேர்த்துவிட்டால்,  செடி கொடிகள் மிகப் பசுமையாகவும், பச்சைப் பசேலென்றும் வளரும். காரணம் அதிலுள்ள நைட்ரஜன் சத்துக்களே ஆகும். ஒரு கூரிய கத்தியால் ஒரு கோழியின் கழுத்தை வெட்டி விட்டால்,  ஒரு நிமிடத்தில் ரத்தம் முழுவதும் வடிந்து கோழி இறந்துவிடும். உணவுக்காக கொல்லப்படும் கோழியின் உடலிலுள்ள ரத்தம் முழுவதும், துண்டுதுண்டாக வெட்டி சுத்தம் செய்யும்போதே வெளியே எடுக்கப்பட்டுவிடும்.

ஆடு இனங்களைப் பொறுத்தவரை, ஆடுகளின் ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களை உபயோகித்து,  மின்காந்த சக்தியுள்ள நேனோ இரும்பு துகள்களை உற்பத்தி செய்திருக்கிறார்கள் நேனோ ஆராய்ச்சியாளர்கள். ஆடுகளின் ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட இந்த நேனோ துகள்கள்,  புற்றுநோய் செல்களை அழிக்க அனுப்பப்படும் மருந்துகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. ஆடுகளின் ரத்தத்தில் அதிக அளவில் புரதச்சத்து,  அமினோ அமிலம், கொழுப்பு அமிலம்,  இரும்புச் சத்து முதலியவை இருக்கின்றன. 

மனிதர்களுக்கு ரத்தச்சோகை இருந்தால், வைட்டமின் பி12 மருந்து ஊசி மூலம் செலுத்தப்படுவது போல, ரத்தச்சோகையால் பாதிக்கப்படும் ஆடுகளுக்கும் வைட்டமின் பி12 மருந்து ஊசி மூலம் செலுத்தப்படுவதுண்டு. ஆடுகளின் உடலில், ஒரு கிலோ எடைக்கு சுமார் 70 மில்லி லிட்டர் ரத்தம் இருக்கும். 

ஆடுகளின் ரத்தத்தை கொதிக்க வைத்து, உணவுப் பொருளாக உபயோகப்படுத்துவதும் உண்டு. ஆடுகளின் ரத்தத்தில் புரதம் அதிகம். நலிந்து மெலிந்து தெம்பு இல்லாத ஆடுகளுக்கு, மனிதர்களுக்குக் கொடுப்பது போலவே, ஆடுகளுக்கும் வைட்டமின் மருந்துகள், மக்காச்சோளச் சாறு முதலியவைகளை ஆடுகளின் நாக்கில் தடவுவதுடன், வாயிலும் ஊற்றுவதுண்டு. ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டால், ஆப்பிள் சாறுடன் சுமார் 30 மில்லி லிட்டர் சிவப்பணுக்களை சேர்த்து குடிக்கக் கொடுப்பதும் உண்டு.

மாடுகளின் ரத்தத்தில் சில உணவுப் பொருட்களை தயாரித்து விற்பது மேலை நாடுகளில் வழக்கமாக இருக்கிறது. அதே போன்று மாடுகளின் ரத்தத்திலிருந்தும்  பிரித்தெடுக்கப்படும் சில பொருட்கள், மனிதர்கள் உபயோகப்படுத்தும் சில உணவுப்பொருட்களின் தயாரிப்பில் பயன்படுகிறது. மருந்துகள் தயாரிப்பு, உரங்கள் தயாரிப்பு, கால்நடைத் தீவனங்கள் முதலியவைகள் தயாரிக்கப்படும்போது, மாடுகளின் ரத்தமும் ஓரளவு சேர்க்கப்படுவதுண்டு. மாட்டுப்பால் உற்பத்தியில் அதன் முன்பொருள் எல்லாமே மாடுகளின் ரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுவதுதான். 

சுமார் ஒரு லிட்டர் பால் உற்பத்தியாக,  சுமார் 500 லிட்டர் ரத்தம் தொடர்ந்து பசுவின் பால்மடியில் போய்க்கொண்டே இருக்கவேண்டும். எவ்வளவு கஷ்டப்பட்டு மாடுகள் நமக்கு பாலைக் கொடுக்கின்றது பார்த்தீர்களா பசுமாடுகளை "கோமாதா' என்று சொல்வது ரொம்பப் பொருந்தும். ஒரு பசு மாட்டின் உடலில் (ஒரு கிலோ எடைக்கு) சுமார் 55 மில்லி லிட்டர் ரத்தம் என்ற அளவில் இருக்கும். உதாரணத்திற்கு ஒரு மாடு சுமார் 500 கிலோ எடை இருக்கிறதென்றால், 

அதனுடைய உடலில் சுமார் 27.5 லிட்டர் ரத்தம் இருக்கும். சில நேரங்களில் பசும்பால், லேசான சிவப்பு நிறத்தில் இருந்தால், அதில் ரத்தம் கலந்திருக்கிறது என்று அர்த்தம். அப்படியென்றால், நாம் அதை குடிக்க பயன்படுத்தக் கூடாது. பசும்பாலில் புரதச்சத்து மிக அதிகம். நீர்யானையின் பால் நீலக்கலரில் இருக்கும். 

பூனைகளுக்கும் ரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் ஆக்ஸிஜனை சுமந்து சென்று உடலுக்குக் கொடுக்கின்றது. பூனைகளின் உடலில் சுமார் 171 மில்லி லிட்டர் ரத்தம் இருக்கும். பூனைகளின் உடலில் இருக்கும் ரத்தத்தின் அளவே முயல்களின் உடலிலும் இருக்கும். பூனைகளுக்கும் ரத்தச் சோகை ஏற்படுவதுண்டு. வயதான பூனைகளுக்கு கல்லீரல் நோய்,எலும்பு மஜ்ஜை நோய்,  போன்றவை ஏற்பட்டால், அந்தப் பூனைகளுக்கு மிகச் சுலபமாக ரத்தச்சோகை ஏற்பட்டுவிடும். ரத்தச் சோகையினால் பாதிக்கப்பட்ட பூனைகளுக்கு,  வேறொரு பூனையிடமிருந்து ரத்தத்தை எடுத்துக் கொடுப்பதுண்டு. ஆனால் அந்தப் பூனையிடமிருந்து சுமார் 40 மில்லி லிட்டர் ரத்தம் தான் எடுப்பார்கள். அதற்கு மேல் எடுக்க மாட்டார்கள்.

மனித ரத்தம் விலங்குகளுக்குக் கொடுக்க முடியாது என்பது போல, விலங்குகளின் ரத்தமும் மனிதர்களுக்குக் கொடுக்க முடியாது. செல்லப் பிராணியான நாய் மீது பெற்ற குழந்தைகளை விட அதிக பாசம் வைத்திருப்பவர்கள் நிறைய பேர் உண்டு. நாய் என்று சொன்னாலே, சிலர் நம்மை அடிக்க வந்துவிடுவார்கள். மரியாதையுடன் அதற்கென்று இருக்கும் பெயரைச் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். நாய்க்கும் விமானத்தில் ஸ்பெஷல் டிக்கெட் எடுத்து, அமெரிக்காவிலிருந்து அம்பாசமுத்திரத்திற்கு அழைத்து வருபவர்களும் உண்டு. நாய்களின் உடலில் ஒரு கிலோ எடைக்கு சுமார் 86 மில்லி லிட்டர் என்ற அளவில் ரத்தம் இருக்கும்.

விலங்குகளின் ரத்த ஓட்டத்தைப் பற்றியும், நமது செல்லப் பிராணிகளின் ரத்த ஓட்டத்தைப் பற்றியும் அதிகம் தெரிந்தவர் நமது குடும்ப கால்நடை மருத்துவர்தான். எனவே செல்லப் பிராணிகள் வளர்க்கும் அனைவருமே, தம்முடைய குடும்ப கால்நடை டாக்டரின் ஆலோசனைப்படியும், அறிவுரைப்படியும் அவைகளை வளர்ப்பது நமக்கு நல்லது.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com