ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் நடந்த போராட்டத்தை "மெரினா புரட்சி' என்ற ஆவணத்திரைப்படமாக தயாரித்திருந்தனர். எம். எஸ். ராஜ் இயக்கியிருந்தார். கடும் போராட்டத்திற்குப் பிறகு தணிக்கை பெற்ற "மெரினா புரட்சி' நார்வே, கொரிய திரைப்பட விழாக்களில் விருது பெற்றது.
தற்போது நாச்சியாள் பிலிம்ஸூம் தருவை டாக்கீஸூம் இணைந்து 2018 மே மாதம் 22 & 23 தேதிகளில் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தை "முத்துநகர் படுகொலை' என்ற பெயரில் புலனாய்வு ஆவணப்படமாக தயாரித்துள்ளனர். எம்.எஸ்.ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இயக்குநர் பேசும் போது.... ""துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்த ஆவணப்படத்தை திரையிட்டோம்.வழியும் கண்ணீரை துடைத்தபடியே படத்தை பாராட்டியவர்கள் விரைவில் நீதி வழங்க வேண்டும் என்று கோரி கையெழுத்திட்டனர். தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் இந்த படத்தை திரையிட்டு பார்வையாளர்களின் கையெழுத்துகளை திரட்டி தமிழக அரசிடம் வழங்க இருக்கிறோம். நீதி கோரும் எங்களின் இந்த முயற்சிக்கு,இந்த பயணத்திற்கு அனைவரின் ஆதரவும் வேண்டும்'' என்றார்.