ருத்ரய்யாவின் இயக்கத்தில் 1978 -இல் வெளியான "அவள் அப்படித்தான்' படம் பெண்ணின் சுய உரிமையைப் பற்றிப் பேசிய படமாகக் கவனிக்கப்பட்டது. படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சகர்களால் பேசப்படும் படமாகவும் குறிப்பிடத்தக்க படமாகவும் இன்றளவும் பேசப்படுகிறது. அந்தப் படத்தின் நீட்சியாக இப்பொழுது அதே சிந்தனையின் இன்னொரு வடிவமாக "அவள் அப்படித்தான் 2' உருவாகி வருகிறது. முந்தைய "அவள் அப்படித்தான்' படத்தின் நாயகியின் பெயர் மஞ்சு. இதிலும் நாயகியின் பெயர் மஞ்சு என்றே சித்தரிக்கப்படுகிறது. சினேகா பார்த்திப ராஜா, அபுதாகிர், சுமித்ரா, அனிதாஸ்ரீ, சுதாகர், வெங்கட்ரமணன், தனபால், தொல்காப்பியன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ரா .மு. சிதம்பரம் எழுதி இயக்குகிறார். இது குறித்து பேசும் போது... ""அவள் ஓர் ஆசிரியை. குழந்தைகளுக்குக் கற்பிக்கும் பணியை அவள் வேலையாக இல்லாமல் விருப்பமாகச் செய்து வருகிறாள். ஒரு சனிக்கிழமையன்று வேலைக்குச் செல்கிற அவள், வழக்கம்போல அன்று மாலை வீடுதிரும்பவில்லை. நேரம் நகர்கிறது. இரவு 10 மணி ஆகிறது. இன்னும் வீடு வந்து சேரவில்லை .அதற்கு மேல் நகரும் ஒவ்வொரு நிமிடமும் அந்தக் குடும்பத்தினருக்குப் பெரிய பதற்றத்தை ஏற்படுத்துகிறது. கணவர், மாமியார்,செய்தி கேட்டு வந்திருந்த அவளின் பெற்றோர் என அனைவரும் செய்வதறியாது தவிக்கிறார்கள். அக்கம்பக்கம் செய்தி பரவுகிறது.கணவன் எவ்வளவோ இடங்களுக்கு அலைந்து சென்று தேடியும் கிடைக்கவில்லை.பொழுதும் விடிகிறது. அதிகாலை 6 மணிக்கு அவள் வந்து சேர்கிறாள். அதன் பின் நடப்பதே கதை.
மனித மனம் ஆணவத்தின் சீண்டல்களால் வெளிப்படும் குரூர தருணங்களையும் அதன் அசைவுகளையும் இந்தப் படத்தில் அழகாகக் காட்டியுள்ளோம். நடித்துள்ளவர்களும் பாத்திரங்களின் மன இயல்புகளை நடிப்பாக வெளிப்படுத்தி உள்ளார்கள். படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன'' என்றார் இயக்குநர். நடிகை சினேகா பார்த்திபராஜா தமிழகத்தில் முதன்முதலில் சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் பெற்ற முதல் நபர்.