ரத்தத்தின் ரத்தமே... - 53

ரப்பர் மரத்தில் ரப்பர் பால் உருவாவதைப் போல், தென்னை மரத்தில் இளநீர் உருவாவதைப் போல், பனை மரத்தில் பனங்கள்ளும், நுங்குக்குள் நீரும் உருவாவதைப் போல், பெண்களின் உடலிலுள்ள ரத்தத்திலிருந்து, தேவைப்படும்
ரத்தத்தின் ரத்தமே... - 53

ரப்பர் மரத்தில் ரப்பர் பால் உருவாவதைப் போல், தென்னை மரத்தில் இளநீர் உருவாவதைப் போல், பனை மரத்தில் பனங்கள்ளும், நுங்குக்குள் நீரும் உருவாவதைப் போல், பெண்களின் உடலிலுள்ள ரத்தத்திலிருந்து, தேவைப்படும் காலத்திற்கு, தேவைப்படும் நேரத்திற்கு, ரத்தமே பல்வேறு செயல்முறையில் தாய்ப்பாலாக உருவாகி வெளிவருகிறது.

தாய்ப்பால் - ஓர் அற்புதமான, ஆச்சரியமான, அதிசயமான, தெய்வீகமான திரவஅமுதம் ஆகும். ஓர் ஆணின் உடலமைப்பு போலல்லாமல் ஒரு பெண்ணின் உடலமைப்பு சற்று வேறு விதமாக, மாற்றி வடிவமைக்கப்பட்டதற்குக் காரணமே பிறக்கும் குழந்தைக்கு விலைமதிப்பில்லாத சத்துணவாகிய தாய்ப்பாலைக் கொடுப்பதற்காகத்தான்.

ஒரு தாய், தான் பெற்றெடுத்த குழந்தைக்கு, வெறும் தாய்ப்பாலை மட்டும் கொடுத்து வளர்க்கவில்லை. தாய்ப்பாலுடன், அன்பையும், பாசத்தையும், நோய் எதிர்ப்புச் சக்திப் பொருள்களையும், சத்துணவுப் பொருள்களையும், வைட்டமின்கள், தாதுப் பொருள்கள், பலவித ஹார்மோன்கள் முதலியவற்றையும் சேர்த்துக் கொடுத்து வளர்க்கிறாள்.

ஒரு பெண் கர்ப்பமாகிவிட்டாலே, அவளுடைய மார்பகங்கள் தாய்ப்பாலை உற்பத்தி செய்வதற்குண்டான ஆரம்பகட்ட செயல்களில் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றன. மார்பகங்கள் எப்படி தாய்ப்பாலை உற்பத்தி செய்கின்றன? ரத்தம் எப்படி தாய்ப்பாலாக மாறுகிறது? என்பது இயற்கையின் படைப்பில் விந்தையான ஒரு காரியம் ஆகும்.

முழுக்க முழுக்க ஹார்மோன்களாலும், முழுக்க முழுக்க நோய் எதிர்ப்பு சக்திப் பொருள்களாலும், வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் புரதப் பொருள்கள், சர்க்கரைச் சத்துக்கள், கொழுப்புச் சத்துக்கள் முதலியவைகள் அடைக்கப்பட்ட, அற்புதமான தாய்ப்பால் என்கிற அமுதத்தை சுமந்து கொண்டிருக்கும் அட்சய பாத்திரம் தான் தாய்மை அடைந்த ஒரு பெண்ணின் மார்பகங்கள் ஆகும். நிறைய ஹார்மோன்கள் தாய்ப்பால் உற்பத்தி ஆவதற்கும், தொடர்ந்து சுரப்பதற்கும் உபயோகமாய் இருக்கின்றன.

உடலெங்கிலும் சருமத்தில் வியர்வைச் சுரப்பிகள் இருக்கின்றன. ஆனால் சற்று மாற்றி அமைக்கப்பட்ட வியர்வைச் சுரப்பிகளையும், அப்போக்ரைன் புறச்சுரப்பிகளையும் கொண்டதுதான் மார்பகத்திலுள்ள சுரப்பிகளாகும். கொழுப்புத்திரள்களின் நடுவே சிறுசிறு மடல்களாக சுமார் 20 மடல்கள் கொண்ட சுரப்பித் திசுக்கள் இருக்கின்றன. இந்த சுரப்பித்திசுக்களின் நடுவில்தான் சுரப்பிகள் பதிந்திருக்கின்றன.

மார்பகத்துக்கு ரத்த சப்ளை செய்யும் ரத்தக்குழாய், உடலிலுள்ள ரத்தக் குழாய்களில் சற்று பெரிதானது. ஆக்ஸிலரி ரத்தக்குழாய்கள் என்றழைக்கப்படும் இந்த ரத்தக் குழாய்கள், நெஞ்சின் ஒரு பாதிக்கும், கை அக்குள் பகுதிக்கும், தோள் பட்டையிலிருந்து கைவிரல்கள் வரையுள்ள பகுதிகளுக்கும் ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை சப்ளை பண்ணுகிறது.

சுரப்பிகளின் மொத்த உருவம் தான் மார்பகங்கள். ஒரு தாமரைப் பூவின் இதழ்கள் வெளிப்புறத்தில் பெரிதாக ஆரம்பித்து, பூவின் நடுவில் இதழ்களின் தண்டுகள் எப்படி வந்து ஒன்றாக குவிகிறதோ, அதுபோல மார்பகங்களிலும், இந்த 20 சிறு மடல்கள் மார்பகத்தின் நடுவிலுள்ள காம்பில் வந்து முடிகிற மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு  மார்பகத்திலுள்ள 20 சிறு மடல்களும், சிறு சிறு சுரப்பிகளைக் கொண்டுள்ளன. இந்த சிறுசிறு சுரப்பிகள் தான் தாய்ப்பால் போன்றதொரு திரவத்தை சுரக்கின்றது. மார்பகங்கள் கொழுப்புத் திசுக்களாலும், கூட்டுத் திசுக்களாலும் அரைவட்டமாக மாற்றியமைக்கப் பட்டிருப்பதற்குக் காரணமே, மார்பகங்களுக்கு உள்ளே கொத்துக் கொத்தாக திரண்டிருக்கும் சிறுசிறு மடல்களையும், சிறுசிறு சுரப்பிகளையும் பாதுகாக்கத்தான்.

மார்பகங்களுக்கென்று வேலை பார்க்கும் ஹார்மோன்கள் தான் தாய்ப்பால் சுரப்பதைக் கட்டுப்படுத்துகின்றன. சீராக்குகின்றன. மார்பகங்களுக்குள் எப்பொழுதுமே மிக நுண்ணிய ரத்தக்குழாய்கள், மிக அதிகமாக இருக்கும். அதே மாதிரி, மார்பகங்களுக்கு ரத்த சப்ளையும், எப்பொழுதும் அதிகமாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் ரத்த ஓட்டம் மிகமிக அதிகமாக இருக்கும்.

"மேம்மரி சுரப்பி' என்று சொல்லக்கூடிய மிகப் பெரிய சுரப்பி, ஒரு மார்பகத்தில் ஒன்றுதான் இருக்கும். சுமார் 20 சிறுசிறு சுரப்பிகள் சேர்ந்து அமைந்ததுதான் இந்தப் பெரிய மேம்மரி சுரப்பி. பால் சுரக்கும் திசுக்கள், இந்த சிறுசிறு சுரப்பிகளில் தான் இருக்கின்றன.

ஓவ்வொரு காம்பின் நுனியிலும் சுமார் 20 கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறிய துவாரங்கள் இருக்கின்றன. மார்பகங்களில் உற்பத்தியாகும் தாய்ப்பால், இந்தத் துவாரங்கள் வழியாகத்தான் வெளியே வந்தாக வேண்டும். பால் குடிக்கும் குழந்தை, தாயின் காம்பில் வாயை வைத்தவுடன்,  நரம்புகளின் தூண்டுதலினால், ஒரு சிக்னல் காம்பில் உருவாகிறது. இந்த சிக்னல் காம்பிலுள்ள நரம்புகளுக்குச் செல்கிறது. உடனே, இந்த நரம்புகள் மூளையின் அடியில், நடுப்பகுதியில் அமைந்துள்ள பிட்யூட்டரி சுரப்பிக்கு செய்தியை அனுப்புகிறது. பிட்யூட்டரி சுரப்பி உடனே இரண்டு ஹார்மோன்களை வெளியிடச் செய்கிறது. 1). புரோலேக்டின் ஹார்மோன் 2). ஆக்ஸிடோசின் ஹார்மோன்.

புரோலேக்டின் ஹார்மோன், மார்பகங்களின் உள்ளே மிக நுண்ணிய ரத்தக்குழாயை ஒட்டியிருக்கும் சிறுசிறு சுரப்பிகளுக்கு கட்டளை இடுகிறது. அது என்ன கட்டளை என்றால், ரத்தத்திலிருந்து சத்துப்பொருள்களையும், புரதத்தையும், சர்க்கரையையும், ஹார்மோன்களையும், கொழுப்புச் சத்துக்களையும், குழந்தைக்குத் தேவையான மற்ற பல பொருள்களையும் பிரித்தெடுத்து, அதை தாய்ப்பாலாக மாற்றுவதே. எனவே, புரோலேக்டின் ஹார்மோனின் உத்தரவுப்படி, மார்பகங்களிலுள்ள சிறுசிறு சுரப்பிகள் ரத்தத்திலிருந்து அத்தனை பொருள்களையும் வடிகட்டி, உறிஞ்சி எடுக்கிற வேலையைப் பார்க்கிறது.

அடுத்ததாக உள்ளது ஆக்ஸிடோசின் ஹார்மோன் ஆகும். இந்த ஹார்மோன் மார்பகங்களின் உள்ளேயிருக்கும் சிறுசிறு சுரப்பிகளைச் சுற்றியுள்ள செல்களைத் தூண்டிவிட்டு, சுரப்பிகளை அமுக்கிவிட்டு, தாய்ப்பாலை வடிகுழாய் வழியாக காம்புக்கு அனுப்பும் வேலையைச் செய்கிறது. கன்றுக்குட்டி தாய்ப்பசுவின் மடியிலுள்ள காம்புகளில் வாயை வைத்து செல்லமாக முட்டி முட்டி, செல்லமாக மோதி மோதி, எனக்கு பால் வேண்டும் இப்பொழுது, என்ற சொல்லாமல் சொல்லுகிறது. மனிதர்களைப் போலவே, பசுமாட்டிற்கும் ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரந்து, பால் சுரப்பிகளை அமுக்கி பசும்பாலை, கன்றுக்குட்டி குடிக்க காம்பின் நுனிக்கு வரவைக்கிறது. ஆனால், நகரங்களிலுள்ள பெரும்பாலான பால் கறக்கும் பசுமாட்டிற்கு, கன்றுக்குட்டிகள் உயிரோடு இருப்பதில்லை. ஆதலால் கன்றுக்குட்டிகள் பசுவின் மடியில் மோதி, காம்பை வாயில் வைத்து, பாலை வெளியே வரச் செய்ய குறைபாடாகிவிடுகிறது. இதற்காகத்தான் சிலர், பால் கறக்கும் பசுமாடுகளுக்கு, கன்றுக்குட்டி இல்லாத பசுமாடுகளுக்கு பால் வெளியே வரும் இயற்கை உணர்ச்சியை ஏற்படுத்த, செயற்கையாக "ஆக்ஸிடோசின்' ஹார்மோன் ஊசி மருந்தை, பால் கறப்பதற்கு முன் போடுவார்கள்.

இவ்வாறாகத்தான், தாய்ப்பால் உருவாகி மார்பகத்திலுள்ள காம்புகள் வழியாக, குழந்தைக்குச் சேருகிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி, மற்ற குழந்தைகளைவிட சற்று அதிகமாகவே இருக்கும். அதனால் நோய்த்தொற்று பாதிப்பு, அவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிடாது. குறைந்தது 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கண்டிப்பாக கொடுக்கவேண்டும். 1 வருடத்துக்கு மேலேயும் , உங்களுக்குத் தாய்ப்பால் சுரந்து கொண்டிருந்தால்,  தயவுசெய்து வீணாக்காமல் மேலும் குழந்தைக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள். 

5 வயது  வரை தாய்ப்பால் குடிக்கிற குழந்தையையும், 5 வருடம் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கிற தாயையும் நான் பார்த்திருக்கிறேன். நீங்களும் உங்கள் ஊரில் பார்த்திருப்பீர்கள்.

தாய்ப்பாலின் சுவை, தினமும் ஏறி இறங்கி, ஏறி இறங்கி, குழந்தைகளின் நாக்கை ருசிகண்ட பூனை என்று சொல்வார்களே, அதுபோல ஆக்கிவிடும். குழந்தையைப் பெற்றெடுத்த சில நாட்களில், உங்களுடைய புதிய வரவாகிய செல்லக்குழந்தையிடம், அன்பையும், பாசத்தையும் கொட்டி, அரவணைத்து, தாய்ப்பால் கொடுத்து, அதில் இன்பம் கண்டு, தாய்ப்பால் கொடுப்பதில் மும்முரமாக இறங்கிவிடுவீர்கள். அதிக நேரத்தை செலவழிப்பீர்கள். ஒரு புதிதாக தாயானவள் என்னென்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல், பார்த்தது, படித்தது, கேட்டது, ரசித்தது, சிந்தித்தது ஆகியவற்றின் அனுபவங்களை உபயோகித்து, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் கொஞ்ச நாளிலேயே வல்லவர் ஆகிவிடுவீர்கள்.

தாய்ப்பாலிலுள்ள சத்துணவுகளின் கலவை அளவு, எப்பொழுதும் மாறிக் கொண்டே இருக்கும். ஒன்றுபோல் எப்பொழுதும் இருக்காது. அதேபோல, தாய்ப்பாலிலுள்ள நுண்ணுயிர்களின் அளவும் தினந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும். தாய்ப்பாலின் சுவை,  அதிக இனிப்பூட்டப்பட்ட பாதாம் பால் மாதிரி இருக்கும். இதில் லேசாக வெள்ளரிக்காயின் சுவையும் சேர்ந்திருக்கும்.

"நீ ஆர்டர் கொடு, நான் தயாரித்துக் கொடுக்கிறேன்' என்று வியாபார உலகில் அதிகமாக இந்த வார்த்தை சொல்லப்படுவதுண்டு. அதுபோல, தாய்ப்பால் கொடுப்பதும் கூட ஏறக்குறைய இந்த வார்த்தைக்கு ஒத்துப்போகும். அதாவது, குழந்தைக்கு அதிகமாக தாய்ப்பாலை கொடுக்கக், கொடுக்க, தாய்ப்பால் சுரப்பதும் அதிகமாகும்.

குழந்தை பெற்ற பிறகு, மார்பகங்களின் காம்பு பெரிதாவதே, குழந்தைக்கு உணவு அதாவது தாய்ப்பால் இங்கிருந்துதான் வரும் என்று அடையாளம் காட்டவே, காம்பு பெரிதாகிறது.குழந்தை பிறந்தவுடன், தாயின் மார்பகங்களில் சுரக்கும் பாலை, "சீம்பால்' என்று சொல்வதுண்டு. இந்தத் தொடக்கப்பாலை ஆங்கிலத்தில் "கொலஸ்ட்ரம்' என்று அழைப்பார்கள். இந்தத் தொடக்கப் பாலில் சுமார் 50 லட்சம் ரத்த வெள்ளை அணுக்கள் இருக்கும். அதாவது உங்களது உடலிலுள்ள ரத்தத்தில் இருப்பதைவிட, நூறு மடங்கு அதிகமாக "தொடக்கப்பாலில்' வெள்ளை அணுக்கள் இருக்கும். 

தற்போதுள்ள சூழ்நிலையில்  பெட்ரோலைத் தான் "திரவத் தங்கம்' என்று எல்லோரும் சொல்கிறார்கள். 

ஏனெனில் தங்கத்தைவிட, அதிக விலையும் , அதிக கிராக்கியும் உள்ளது பெட்ரோல் ஆகும். அதுபோல, தாயின் மார்பில் சுரக்கும் தொடக்கப்பாலைக் கூட  "திரவத் தங்கம்'  என்று சொல்லலாம். ஏனென்றால் அந்த அளவுக்கு குழந்தை உடலுக்கு நன்மை தரக்கூடிய ஏகப்பட்ட நிறைய விஷயங்கள் தொடக்கப்பாலில் கொட்டிக் கிடக்கின்றன.

பொதுவாக, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தால் குடித்து முடிப்பதற்குள் குழந்தை தூங்கிவிடும். ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுக்கும்போதும், 

அன்பையும் அரவணைப்பையும் ஆக்ஸிடோசின் ஹார்மோனையும் சேர்த்தே குழந்தைக்கு கொடுக்கிறீர்கள். தாய்ப்பாலுடன் குழந்தைக்குப் போய்ச் சேரும் இந்த ஹார்மோன், தாய்க்கும், குழந்தைக்கும் ரத்த அழுத்தத்தையும், இருதயத் துடிப்பையும் குறைத்து, சீராக்கி, இரண்டு பேரையும் அமைதியாக்கிவிடுகிறது. சாந்தமாக்கிவிடுகிறது. இதனால் இருதய நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.
ரத்தத்திலிருந்து தான் வியர்வை வெளிவருகிறது என்று சொல்வதைப் போல, ரத்தத்திலிருந்து தான் தாய்ப்பாலும் வெளிவருகிறது. தாய்ப்பால் ஒரு திரவத் தங்கம். ஒரு சொக்கத் தங்கம். நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க, இயற்கை கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.

தாய்ப்பாலோடு, அன்பையும், பாசத்தையும் சேர்த்துக் கொடுத்து நம்மை உருவாக்கிய நம் தாயை என்றும் மதிப்போம். என்றும் போற்றுவோம்.

 - தொடரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com