சபர்மதி ஆசிரமம் என்பது காந்தியும், கஸ்தூரி பாயும் குடியிருந்த ஆலயம் ஆகும். நம் நாட்டின் சுதந்திர போராட்ட முக்கிய முடிவுகள் இங்கே தான் எடுக்கப்பட்டன. சபர்மதி ஆசிரமத்தில் கடுமையான உணவுக் கட்டுப்பாடு உண்டு. சாமியார் வாழ்க்கைத்தான். காபி, டீ என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஒரு சமயம் தென்னிந்திய வாலிபர் ஒருவருக்கு உண்மையாகவே உடல் நலம் கெட்டுவிட்டது. அவர் படுத்த படுக்கையில் இருந்தார். கடுமையான வயிற்று கடுப்பு நோய் அவருக்கு இருந்தது. அவருக்கு ஒரு காபி சாப்பிட வேண்டும் போல் இருந்தது. இருப்பினும் ஆசிரம் கட்டுப்பாடு வேறு உள்ளதே. காந்திஜி அவரைக் காண வந்தார்.
காந்திஜி அவரிடம் "உன் உடம்பு இப்போது பரவாயில்லையா. வழக்கமான உணவை நீ சாப்பிடலாம். என்ன சாப்பிட விரும்புகிறாய் உப்புமா, தோசை எது வேண்டும்' எனக் கேட்டார். "காபி வேண்டும்' என்றார். இளைஞருக்கு உப்புமா, தோசை பிடிக்கும் என காந்திக்குத் தெரியும். சரி, கஸ்தூரி பாயிடம் கேட்டுப்பார்க்கிறேன் என காந்தி போய்விட்டார்.
சிறிது நேரத்தில் வெள்ளைக் கதர் துணி மூடிய தட்டோடு காந்தி வந்தார்.
"இந்தா காபி. ரொட்டியும் உனக்காக நானே தயாரித்தேன். ஒரு உயர்ந்த தென்னிந்திய சமையல்காரர் தயாரித்த காபி போல இருக்கிறதா என்று இதை சாப்பிட்டு பார்த்து எனக்கு சர்ட்டிபிகேட் கொடு' என்றார் காந்திஜி.
காந்தி நமக்காக காபி தயாரித்து வந்ததை எண்ணி அந்த இளைஞர் வருத்தப்பட்டார்.
காந்தி காபி தயாரித்து கொடுத்தது, மதுரை மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமம் இயக்குநரான ஜி.ராமச்சந்திரன் தான் அந்த இளைஞர்.