ரத்தத்தின் ரத்தமே... - 55

கடந்த இருநூறு ஆண்டுகளாக மருத்துவ விஞ்ஞானம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து வந்துகொண்டிருக்கின்றது.
ரத்தத்தின் ரத்தமே... - 55


கடந்த இருநூறு ஆண்டுகளாக மருத்துவ விஞ்ஞானம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து வந்துகொண்டிருக்கின்றது. மருத்துவமனைகளுக்குச் சென்று வரும் அநேக பேருக்கு மனிதன் உயிர்வாழ ஆக்ஸிஜன் மிக முக்கியமாக தேவை, அந்த ஆக்ஸிஜன் நாம் சுவாசிக்கும் காற்றில்தான் கலந்திருக்கிறது என்று விவரமாகத் தெரியாது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக, ஒருவருக்கு மூச்சு வாங்கினால், ஆஸ்பத்திரிக்குப் போய் ஆக்ஸிஜன் டியூப் மாட்டவேண்டும் 
அப்பொழுதுதான் சரியாகும் என்றுதெரியவந்தது.

உலகப் போர்களைவிட மிகப் பயங்கரமான கொடுமைகளை உண்டாக்கி, உலகெங்கும் பரவி, உயிர்ச்சேதத்தையும், பொருட் சேதத்தையும் ஏற்படுத்தி, உலகையே புரட்டிப் போட்ட கரோனா  தொற்று என்ற ஒன்று வந்த பின், மக்களின் உடலும், மனதும் அறவே மாறிவிட்டது.

இன்று காரில் போகிற வரும் சரி,மோட்டார் சைக்கிளில் போகிறவரும் சரி "என் உறவினருக்கு மூச்சுதிணறுது. கரோனா  தொற்று அவருக்கு வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

அவருக்கு உடனடியாக ஆக்ஸிஜன் தேவை. அதனால் அவரை ஆஸ்பத்திரிக்கு அவசரமாக கூட்டிக்கொண்டு போகிறேன்'  என்றனர். படிப்பறிவு அதிகம் இல்லாதவர்கள் கூட ஆக்ஸிஜன்,  ஆக்ஸிஜன் என்று சொல்லஆரம்பித்தார்கள். உடலில் ஆக்ஸிஜன் இல்லை. 

ஆக்ஸிஜன் பத்தலை. ஆக்ஸிஜன் குறைவாத்தான் இருக்கு. ஆக்ஸிஜன் ரொம்ப குறைஞ்சிடுச்சி, அவரை உடனே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுபோறேன். ஆக்ஸிஜன் குறைஞ்சிடுச்சி. உடனே ஆஸ்பத்திரிக்குப் போய் ஆக்ஸிஜன் வச்சாகனும்,  ஆஸ்பத்திரியில பெட்  இல்லைன்னு சொல்லிட்டாங்க இந்தமாதிரி ஆக்ஸிஜன் ஓலங்கள் கடந்த 2 ஆண்டுகளாகத்தான் உலகின் எல்லா மூலைகளிலும் கேட்க ஆரம்பித்தது. அதற்கு முன்னர் ஆக்ஸிஜனைப் பற்றி நாம் அதிகம் கவலைப்படவில்லை.

ஆக்ஸிஜன் - உயிரினங்கள் உயிர்வாழ மிகமிக முக்கியமாக தேவைப்படும் முதல் பொருள் ஆக்ஸிஜன் ஆகும். ஆக்ஸிஜன், நாம் சாதாரணமாக சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கிறது. எனவே, காற்று எங்கெல்லாம் பரவியிருக்கிறதோ, அங்கெல்லாம் ஆக்ஸிஜன் இருக்கிறது என்று அர்த்தம். காற்றை சுவாசித்துத்தான், காற்றிலுள்ள ஆக்ஸிஜனை சுவாசித்துத்தான், மனிதர்களாகிய நாம் வாழுகிறோம்.

மெக்ஸிகோ நாட்டின் கடலோரத்தில், ஒரு  குறிப்பிட்ட  பகுதியில் , சுமார் 20140 சதுர கிலோமீட்டர் அளவில் உள்ள இடம் "கல்ஃப் டெட் úஸான்' என்றுஅழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் மிக மிக மிகக் குறைவானஅளவிலேயே ஆக்ஸிஜன் இருக்குமாம். இந்த இடத்தில் உயிரினங்கள் இருக்க வாய்ப்பே இல்லையாம்.

உயிர் வாழ லாயக்கற்ற, ஆக்ஸிஜனே இல்லாத இடங்களை மனிதன் தான் உண்டாக்குகிறான் என்று தெரியவரும்போது, மனம் மிகுந்த வேதனைப்படுகிறது. விவசாயத்திற்குப் பயன்படும் ரசாயன உரங்கள், பூச்சிமருந்துகள், ஊக்கமருந்துகள், தொழிற்சாலைகளில் தயாராகும் ரசாயனப் பொருட்கள், தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் ரசாயன கழிவுப் பொருட்கள், அதிக ஜனத்தொகையால் மனிதன் ஏற்படுத்தும் மாசுப் பொருட்கள் - இவைகளெல்லாம் அதிகமாகி, அதிகமாகி நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் பொருட்களை அதிக அளவில்  உற்பத்தி செய்ய காரணமாக இருக்கின்றன. 

மனிதனால்  உண்டாக்கப்படும்  இந்த ஆபத்தான பொருள் கடலோரத்தில் கலந்து,படிந்து, ஆக்ஸிஜன் அறவே நுழைய, முடியாத, நிலையை, அந்த இடத்தில்  உருவாக்கிவிடுகிறது. 

ஆக்ஸிஜன் இல்லாத ஏரியா என்று சொல்லப்படும் இந்த இடங்கள், மக்கள் அதிகமாக வசிக்கும் கடலோரங்களை ஒட்டியுள்ள நகரங்கள் தான்.

நாம் சுவாசிக்கும் வெளிக்காற்றிலுள்ள ஆக்ஸிஜன், நுரையீரல் உள்ளே நுழைந்து, காற்று நுண்ணறைப் பைகள் வழியாக, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களோடு சேர்ந்துவிடுகிறது. சிவப்பணுக்களில் உள்ள "ஹீமோகுளோபின்' பொருளோடு சேர்ந்த ஆக்ஸிஜன், உடலெங்கும் உள்ள செல்களைச் சென்றடைகிறது. ஆக்ஸிஜன் ரத்தத்தில் கலந்து கொண்டே இருந்தால், ஒரு குறிப்பிட்ட அளவில், ஆக்ஸிஜன் முழுமையாகக் கரைந்து, தெவிட்டும் நிலையை அடைந்துவிடும். இந்த தெவிட்டும் நிலையைத் தான்  ஆக்ஸிஜன் ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினில் முழுமையாக இருக்கிறது என்றுசொல்வோம்.

ஆக்ஸிஜன் ரத்தத்தில் சேர்ந்திருக்கும் அளவை, நாம் சதவீதத்தில் சொல்வதுண்டு. பொதுவாக ஒரு நல்லஆரோக்கியமான மனிதனுக்கு,  95 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரைஆக்ஸிஜன் இருக்கணும். இருக்கவேண்டும். இருக்கலாம். ரத்தத்தில் ஆக்ஸிஜன் எவ்வளவு சதவீதம் இருக்கிறது என்பதைப் பார்க்க உதவும், கருவிக்குப் பெயர்தான் "பல்ஸ் ஆக்ஸிமீட்டர்' ஆகும்.

மருத்துவ உலகில் உள்ளவர்களைத் தவிர, வேறுயாருக்கும் தெரியாதிருந்த இந்த "பல்ஸ் ஆக்ஸிமீட்டர்' கருவி, இப்பொழுது உலகமெங்கும் பிரபலமாகிவிட்டது. ஒரு வீட்டிலேயே ரூமுக்கு ஒன்று என்று இருக்கும் நிலைக்கு வந்துவிட்டது. இந்த ஒரு கருவி மட்டுமே சுமார் இருபதாயிரம் கோடி வியாபாரம் ஆகும் அளவுக்கு,  இந்த கரோனா  தொற்று உண்டாக்கியிருக்கிறது.

பல்ஸ் ஆக்ஸிமெட்ரி:- ரத்தத்தில் ஆக்ஸிஜன் சதவீதம் எவ்வளவு இருக்கிறது என்பதை இந்தப் பரிசோதனை மூலம் "பல்ஸ் ஆக்ஸிமீட்டர்'  என்ற கருவியை உபயோகித்துக் கண்டுபிடிக்கலாம். இந்தப் பரிசோதனையில் ரத்தம் எடுத்து டெஸ்ட் பண்ண வேண்டிய வேலை இல்லை. உடலுக்குள் எந்தக் கருவியையோ, ஊசியையோ, பொருளையோ நுழைக்க வேண்டியதில்லை. உடலின் வெளிப்புறதோலின் மூலமாகவே இந்த டெஸ்ட்டை பண்ணிவிடலாம். "பல்ஸ் ஆக்ஸிமீட்டர்' என்று சொல்லக்கூடிய இந்த சென்ஸார் உணரிக் கருவி ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைக் கண்டுபிடித்துகாண்பித்துவிடும். 

இதை கை விரல்களிலோ,காதுமடலிலோ நுழைத்துப் பார்க்கவேண்டும். விரலை நுழைத்த சில நொடிகளில் உங்கள துரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் அளவை, சதவீதத்தில் காட்டிவிடும். கை விரல்களிலும், காதுமடல்களிலும் தோல் அதிக தடிமனாக இல்லாமல், சற்றுமெல்லியதாக இருப்பதால் தான் இந்த இடங்களில் அந்தக் கருவியை நுழைத்துப் பார்க்கப்படுகிறது. இப்பொழுதெல்லாம் கையில் கட்டியிருக்கும் வாட்ச்களில் கூட, ஆக்ஸிஜன் அளவுபார்க்கும் வசதி இருக்கிறது.
ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிட்டால் அதற்குப் பெயர் "ஹைப்பாக்ஸீமியா'. உடலிலுள்ள திசுக்களில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தால், அதற்குப் பெயர் "ஹைப்பாக்ஸியா'. 

ஹைப்பாக்ஸீமியா உண்டாகக் காரணங்கள் -

1)நீங்கள் சுவாசிக்கும் காற்றில், குறைவான அளவு ஆக்ஸிஜன் இருப்பது. விமானத்தில் பறக்கும்போது இந்த மாதிரி ஏற்பட வாய்ப்பு உண்டு. 

2)ஆஸ்துமா, நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயில்,  மூச்சு சரியாகவிடுவது தடுக்கப்படுவதால் ஆக்ஸிஜன் குறைந்து விடுதல். 

3)நிமோனியா போன்ற நுரையீரலில் ஏற்படும் நோயில் ஆக்ஸிஜன் உள்ளிழுப்பது குறைந்து விடுதல்.

4) ரத்தசோகையில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து விடுதல்.

5)கார்பன் மோனாக்ûஸடு, சயனைடு போன்ற கெட்ட வாயுக்களை சுவாசிப்பதன் மூலம் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிடுதல். இந்த வாரத்தில் கூட கேரளாவில் விஷ வாயுவான கார்பன் மோனாக்ûஸடை வீட்டிற்குள் பரவவிட்டு, ஒரு குடும்பத்திலுள்ளஅனைவரும் இறந்துவிட்டார்கள். மேற்சொன்ன விஷ வாயுக்களெல்லாம் மிகவும் கொடியது.

ரத்தத்தில் குறைவான அளவே ஆக்ஸிஜன் இருந்தால், உடலிலுள்ள திசுக்களிலும் குறைவான அளவே ஆக்ஸிஜன் இருக்கும். இதுபோக உடல் உறுப்புகள் மற்றும் தசைகளில் கூட ஆக்ஸிஜன் குறைவாக வேசப்ளை செய்யப்படும். கொஞ்சம் குறைவான அளவில் ஆக்ஸிஜன் இருந்தால், உடலும் சரி,  செல்களும் சரி, சமாளித்துக் கொள்ளும். ஆனால் அதிகமான அளவு ஆக்ஸிஜன் குறைந்தால்,  செல்கள் இறக்க ஆரம்பித்துவிடும்.

மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ரத்த ஒட்டம் குறைந்துவிட்டால், பக்கவாதம் வந்துவிடும். அதேமாதிரி, இருதயத்தின் தசைகளுக்கு ரத்தஓட்டம் குறைந்துவிட்டால், மாரடைப்பு வந்துவிடும்.

தீவிர கரோனா  போன்ற தொற்றுநோய் நுரையீரலில் பாதிப்பை உண்டாக்கும் போது, உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிடுகிறது. ஆகவே ஆக்ஸிஜன் அளவை உடலில் சரியாக வைத்திருக்க, மருத்துவ ஆக்ஸிஜனை கொடுக்க வேண்டிய  சூழ் நிலை ஏற்படுகிறது. காற்றில் கலந்துள்ள 21 சதவீத  ஆக்ஸிஜனைதனியாகப் பிரித்தெடுத்து, அதை ஒரு முகப்படுத்தி, சிலிண்டரில் அடைக்கவேண்டும். 

இதற்குப் பெயர்தான் மருத்துவ ஆக்ஸிஜன் என்பதாகும். இதை தனிதொழில் நுட்பத்தில் தயார் பண்ணவேண்டும். சுமார் 148 நாடுகளில் மருத்துவ ஆக்ஸிஜன் தயார் பண்ணும் தொழில் நுட்பம் தாராளமாக இருக்கிறது. இயற்கையாக, காற்றில் கலந்துள்ள ஆக்ஸிஜனை சுவாசித்து, நமதுஉடலுக்கு கிடைப்பது இயற்கை ஆக்ஸிஜன் ஆகும். மருத்துவ உலகில் அவசரத்திற்கும், ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்கும் சிலிண்டர்களில் உள்ள ஆக்ஸிஜன், டியூப் மூலமாகக் கொடுக்கப்படுகிறது. சிலிண்டர்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் மருத்துவ ஆக்ஸிஜனை மூக்குவழியாக நுரையீரலுக்குள் டியூப் மூலமாகஅனுப்புவதுதான் அவசரகால முதலுதவி. உயிர்காக்கும் மருந்துமருத்துவ ஆக்ஸிஜன் தான்.

போதிய அளவு ஆக்ஸிஜன் மருத்துவமனைகளில் இல்லை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை - இப்படியெல்லாம் இந்த கரோனா தொற்று தீவிரமாக இருந்த காலத்தில் நாம் கேட்டுக் கேட்டுப் பழகிவிட்டோம். மருந்துவ ஆக்ஸிஜன்அவசர காலத்திற்காக தயாரிக்கப்பட்டது. அதையே நம்பி மக்கள் அனைவரும் வாழமுடியாது. எனவே இயற்கையாக, நமதுகாற்றுமண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிஜனைநம்பித்தான் உயிரினங்கள் அனைத்தும் வாழவேண்டும். காற்றுமண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிஜனை அதிகப்படுத்த, நாம் இயற்கை சூழ்நிலையை கெடுக்காமல் இருக்கவேண்டும்.  இயற்கைக்கு எதிராக எதுவும் செய்யக்கூடாது. இயற்கையை மாற்ற நினைக்கக் கூடாது. 

இயற்கையை நாம் கெடுத்தால், நமது சந்ததிகளுக்கு சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போய்விடும். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் வாழ்வது பெரிதல்ல. நாளை உங்கள் வாரிசுகள் இந்த உலகில் ஆரோக்கியமாக வாழவேண்டும்.சுத்தமான ஆக்ஸிஜன், தாராளமாகக் கிடைக்க,  இயற்கை ஆர்வலர்களாகிய முன்னாள் ஐனாதிபதி அப்துல்கலாம், மறைந்த நடிகர் விவேக்,  இவர்களைப் போல் இன்னும் பலர் சொல்லிய அறிவுரையின்படி, மரம் வளர்ப்போம், நிறையமரம் வளர்ப்போம். நாட்டையே பசுமைக்காடாக மாற்றுவோம்.

-தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com