ராஜாஜியின் ஆடை
கென்னடியை சந்திக்க ராஜாஜி அமெரிக்கா சென்றார். அயல்நாட்டுப் பயணத்திலும் கதர் வேஷ்டி தான். பஞ்சகச்சம் தான் உடுத்துவார் என்பதை சதாசிவம் உணர்ந்திருப்பார். அங்கே குளிர் அதிகம் எப்படி சமாளிப்பார் என்று கவலைப்பட்டார்.
ராஜாஜியிடம் இது பற்றி பேசினார். இருவரில் யாருடைய ஐடியா என்பது தெரியாது அடுத்த நாள் டெய்லர் முனுசாமி வரவழைக்கப்பட்டார். அவருக்கு பஞ்சகச்சம் என்றால் என்ன எப்படி கட்டுவது என்று விளக்கம் அளிக்கப்பட்டது . முனுசாமி ராஜாஜியை அணுகி அளவெடுத்துக் கொண்டார். உயர்ரக கதர் துணியும் வெள்ளை நிறத்தில் மெலிதான கம்பளி துணியும் வாங்கி வரப்பட்டன. உள்ளுக்குள் "உல்லன் லைனிங்' கொடுத்து ராஜாஜிக்கு ரெடிமேட் பஞ்சகச்சம் செய்து கொடுத்தார் முனுசாமி .
உண்மையில் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டிருக்க வேண்டாம் என்பதன் பின்னால் ராஜாஜி கூறிய சில வார்த்தைகளில் என்னை எண்ண வைத்தன. அமெரிக்காவில் எல்லாமே ஏர் கண்டிஷன் செய்யப்பட்டது தான் .
வீடு, கார் ஏன் லிஃப்ட் கூட. அதனால் அங்கே என்ன சீதோஷ்ண நிலை என்பதே தெரியவில்லை என்றார் ராஜாஜி. அவர் என்ன ஊர் சுற்றிப் பார்க்கவா சென்றார்; கென்னடியைப் பார்த்தார். அவர் உள்ளத்தை வென்று திரும்பி வந்துவிட்டார். அமெரிக்காவின் சீதோஷ்ண நிலை அவரை பாதிக்கவில்லை.
(கல்கி ராஜேந்திரன் எழுதிய "அது ஒரு பொற்காலம்' நூலிலிருந்து)