ஆர்யன் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் யாதிஷ் தயாரித்து வரும் படம் "ஈவில்'. விஜய் ஆகாஷ், நித்யாராஜ், ஜீவா, லவிகா, டயானா, லெட்சுமி உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் ஜெகன் அலோஷியஸ்.
1860 -ஆம் கட்டப்பட்ட கர்நாடகாவில் உள்ள தேவாலயத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்தின் திரைக்கதை உருவாகியுள்ளது. படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... ""ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். இங்கே குற்றம் என்பது நம்பிக்கை துரோகம். அந்த துரோகத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள்.
எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது. இப்போதுள்ள வாழ்க்கை அனுதினமும் சவால்தான். அதுவும் ஆண், பெண் உறவுகளுக்குள் உள்ள சிக்கல்கள் ஏராளம்.
குறிப்பாக காதல். எண்ணங்கள் பொருந்திப் போனால்தான் எந்த விஷயமும் ஈடேறும். இது காதலுக்கு அப்படியே பொருந்தும். ஆனால் நாளடைவில் எல்லாவற்றிலும் சலிப்பு, பிரியமானவர்கள் மீது காட்டுகின்ற அன்பு அவர்களை சந்தோஷப்படுத்த இல்லை. என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொள்ளத்தான் என்ற நிலை உருவானால் அந்த வாழ்க்கை என்னவாகும். அப்படியோர் பாதையில்தான் இந்தக் கதை பயணமாகும் என்றார் இயக்குநர்.