ரத்தத்தின் ரத்தமே... - 56

திருமணமாகி சுமார் 13 ஆண்டுகள் ஆகியும் கர்ப்பம் தரிக்காத அந்தப் பெண்மணிக்கு திடீரென்று ஒரு நாள், தான் கர்ப்ப முற்றிருப்பதாகத் தெரிய வருகிறது.
ரத்தத்தின் ரத்தமே... - 56

திருமணமாகி சுமார் 13 ஆண்டுகள் ஆகியும் கர்ப்பம் தரிக்காத அந்தப் பெண்மணிக்கு திடீரென்று ஒரு நாள், தான் கர்ப்ப முற்றிருப்பதாகத் தெரிய வருகிறது. எல்லையில்லா ஆனந்தம், வானளாவிய சந்தோஷம், கட்டுக்கடங்காத மகிழ்ச்சி..... இப்படி, அளவே இல்லாத அளவுக்கு அந்தப் பெண்மணியும், குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர்.

அந்த மகிழ்ச்சி, கொஞ்ச நாள்கள் கூட நீடிக்கவில்லை. திடீரென்று அந்தப் பெண்ணுக்கு தாங்கமுடியாத இடுப்பு வலி, முதுகு வலி, தொடை வலி, பிளந்தெடுக்கும்படியான  அடி வயிற்றுவலி ஏற்படுகிறது. ரத்தக் கசிவு லேசாக ஆரம்பிக்கிறது. அவளால் வலியை தாங்க முடியவில்லை. கத்துகிறாள். கதறுகிறாள். பக்கத்திலுள்ள மருத்துவமனைக்கு உடனே அழைத்துச் செல்கிறார்கள். மருத்துவமனைக்குப் போகிற வழியெல்லாம் ரத்தக் கசிவு. அவளைப் பரிசோதித்த டாக்டர், "அபார்ஷன் ஆகிவிட்டது' என்று சொல்லிவிட்டு, முதலுதவி சிகிச்சையை ஆரம்பிக்கிறார்.

முடிந்து விட்டது, எல்லாமே முடிந்துவிட்டது. பல ஆண்டுகள் கழித்து, கொடுத்துவிட்டாயே என்ற சந்தோஷத்தில் இருந்த எங்களது மகிழ்ச்சியை, எடுத்துவிட்டாயே என்று குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுதனர். கொடுப்பதும் சரி, எடுப்பதும் சரி, யார் கையிலும் இல்லை. அந்தப் பெண் அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை.

"அபார்ஷன்' என்று ஆங்கிலத்திலும் "கருச்சிதைவு' என்று தமிழிலும் சொல்லப்பட்டாலும், பொதுவாக எல்லோருமே "அபார்ஷன்' என்ற சொல்லைத் தான் அதிகமாக உபயோகிக்கிறார்கள். ஆரம்பகாலத்திலேயே ஒரு கர்ப்பம், மேலும் தொடராமல் முடிவுக்கு வந்துவிடுவதைத் தான் "அபார்ஷன்' என்று சொல்கிறோம். "அபார்ஷன்' அதாவது "கருச்சிதைவு' பல வகைகளில், பல மாதிரி ஏற்படும். மேலே கூறிய பெண்மணிக்கு ஏற்பட்ட அபார்ஷன் - அதுவாகவே, தன்னிச்சையாக, திடீரென்று, ஏற்பட்டது. இப்படி தானாகவே, திடீரென்று, ஏற்படும் அபார்ஷனை மிஸ்கேரேஜ்; அபார்ஷன் அதாவது தவறிப்போய் ஏற்பட்ட கருச்சிதைவு, என்று சொல்லலாம்.

தன்னிச்சையாக, திடீரென்று தானாகவே இந்த கருச்சிதைவு ஏற்பட்டாலும், ஒரு காரணமும் இல்லாமல் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பே இல்லை. என்ன காரணத்தினால் இந்த கருச்சிதைவு ஏற்பட்டிருக்கும்? என்று அலசிப் பார்க்கும்போது , தவறிப்போய் ஏற்பட்ட கருச்சிதைவு என்று சொல்லப்படும் இந்த வகையில், கருச்சிதைவு ஏற்பட நிறைய காரணங்கள் இருக்கின்றன. நோய், ரணம், காயம், விபத்து, மரபணுக்குறைபாடு, தாய்க்கும் கருவுக்கும் இடையே ஏற்படும் மருந்திடை ஒவ்வாமை, போன்ற சில காரணங்களினால் மேற்கூறிய கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டு.

இந்த வகை கருச்சிதைவை எந்த அறிகுறிகளை வைத்துக் கண்டுபிடிப்பது? 

1)முதலில் ரத்தம் கசிவது போல், கொஞ்சமாக, மெதுவாக ஆரம்பித்து, பின் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு விடுதல். 

2)அடி வயிற்றைமுறுக்கி, பிசைவது போன்ற அதிகப்படியான வலி 

3) தொடையில், இடுப்பில், முதுகில் வலி 

4) திடீரென்று அதிக சோர்வு 

5)சில நேரங்களில் சில பேருக்கு காய்ச்சல் கூட ஆரம்பித்துவிடுவதுண்டு.  

6)வெள்ளையும், இளஞ்சிவப்பும் கலந்த நிறத்தில் கோழை போன்ற திரவம் பிறப்புறுப்பிலிருந்து வடிவது 

7)மேற்கூறிய அறிகுறிகளை வைத்து, அடுத்து திடீரென்று கருச்சிதைவு முழுவதுமாக ஏற்படப் போகிறது என்று கர்ப்பமுற்றிருக்கும் பெண்கள் கண்டறிந்து, உடனடி மருத்துவ உதவிக்கு தயாராகிவிடலாம்.

சில நேரத்தில்,  கர்ப்பப்பையிலேயே கரு இறந்துபோய் விடும். ஆனால் வெளியே வராமல் உள்ளேயே இருந்துவிடும். ஆனால் ரத்தக் கசிவும், வலியும் மட்டும் இருக்கும். இதை வைத்து கண்டுபிடித்து உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில், மகப்பேறு மருத்துவரால் தான் உடலினுள் இருக்கும், உயிரற்ற கருவை சுத்தமாக வெளியே எடுக்க முடியும்.

இன்னொரு வகை அபார்ஷனில், பெண்ணின் வயிற்றில் கரு, முழு வளர்ச்சி அடைவதற்கு முன்பே அதைக் கலைத்துவிடுவது ஆகும். வேண்டுமென்றே, தூண்டப்பட்டு செய்வதுதான் இந்த வகை கருக்கலைப்பு. ஆகவே இந்த வகை அபார்ஷனை தூண்டப்பட்ட கருக்கலைப்பு என்று கூட சொல்லலாம். தூண்டப்பட்ட கருக்கலைப்பு, என்பதை, முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட கர்ப்பம் என்றும் கூட சொல்லலாம். இந்த வகை கருக்கலைப்பை, மருந்து, மாத்திரைகளை உபயோகித்தும் செய்யலாம். நாள்பட்ட நிலையில் அறுவைச் சிகிச்சை மூலமும் செய்யலாம். அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படும் கருக்கலைப்பில் கருப்பையிலுள்ள கருவையும், நஞ்சுக் கொடியையும் சேர்த்து அகற்றிவிடுவார்கள்.

ஆனால், தூண்டப்பட்ட கருக்கலைப்பு என்று சொல்லப்படும் இந்த வகை கருக்கலைப்பை செய்வதற்கு மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையும், சம்மதமும், உதவியும், கருவை சுமந்திருக்கும் பெண்ணின் சம்மதமும் கண்டிப்பாக சட்டப்படி தேவை.  தூண்டப்பட்ட கருக்கலைப்பு நடக்க, பல காரணங்கள் இருக்கின்றன.

1)தாயின் உடல்நிலை சரியில்லாமல் போதல் 2) தாயின் மனநிலை சரியில்லாமல் போதல். 3)தாயின் உயிர் முக்கியம் என்ற காலகட்டம். 4)தகாத உறவுமுறையினாலோ, அல்லது கற்பழிப்பினாலோ ஏற்பட்ட கர்ப்பத்தை சுமக்க விரும்பாதது. 5)முழு வளர்ச்சி அடையாததினாலோ, மரபணு குறைபாட்டினாலோ, அதிக குறைபாடுடன் குழந்தை பிறக்கலாம் என்பதை கர்ப்பத்திலிருக்கும்போதே பரிசோதனைகள் மூலம் உறுதி செய்து, அதைத் தடுக்க கருக்கலைப்பு செய்வது. 6)மிகமிகச் சிறிய  வயதிலேயே கர்ப்பமானதினால் குழந்தைப் பேற்றையையும், குழந்தையையும் கவனிக்க போதுமான உடல் பக்குவமும், மனப்பக்குவமும் இல்லாமற் போய்விடுமே என்ற பயத்தில் கருக்கலைப்பு செய்து கொள்வது. 7) சமூக- பொருளாதார காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்து கொள்வது.

அபார்ஷன் பண்ணிக் கொள்ள மிகச்சிறந்த மிகப் பாதுகாப்பான தருணம், முதல் மூன்று மாதங்களுக்குள் தான் என்று மருத்துவ உலகம் கூறுகிறது. முதல் மூன்று மாதங்களுக்குள் பண்ணினால், அபார்ஷன் பண்ணும்போது ஏற்படக்கூடிய நோய்த்தொற்று, கர்ப்பப்பை சிதைவு, அதிக ரத்தப்போக்கு போன்றவை அதிகமாக ஏற்படாமல், மிகக் குறைவான அளவில் ஏற்பட வாய்ப்பு அதிகம். மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையுடன், மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு அபார்ஷன் பண்ணிக் கொள்வது மிகவும் நல்லது என்று மகப்பேறு மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.

மருத்துவமனைக்குச் சென்று அபார்ஷன் பண்ணிக்கொள்வது என்பது இன்னொரு வகை. என்ன காரணத்திற்காக அபார்ஷன் செய்து கொள்ள முடிவெடுத்தீர்கள் என்று சில பெண்களைக் கேட்டால் 

1) தாயின் வேலை பாதிக்கப்படும். 2)தாயின் படிப்பு பாதிக்கப்படும். 3)இருக்கக்கூடிய குழந்தையைக் கவனிக்க முடியாமற் போய்விடும். 4) இப்போது இன்னொரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள பொருளாதார சூழ்நிலை ஒத்துவரவில்லை. 5) குடும்பத்திலுள்ளோர் கொடுக்கும் நெருக்கடி 6)கணவன் - மனைவி உறவுகளில் புரிதல் இல்லாமற் போதல் 7)அதிக வயதாகிவிட்டதே, இப்பொழுது போய் குழந்தை பெற்றுக் கொள்வதா என்று அசிங்கப்படுதல் 8)ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடையே உள்ள இடைவெளி மிக அதிகமாக இருக்கிறதே என்ற கவலை இன்னும் நிறைய காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

திருமணத்திற்கு முன் பெண்கள் செய்துகொள்ளும் அபார்ஷனில் உடல் சிக்கல், மனச்சிக்கல், சட்டச் சிக்கல் ஆகிய மூன்றும் அடங்கியிருக்கின்றன. இந்த மூன்று பிரச்னைகளையும் அலசி, ஆராய்ந்து, அதற்குப் பிறகு தான் முடிவெடுக்க வேண்டும்.

"அபார்ஷன் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் ஆயிரம் பெண்களுக்கு 37 பேர் அபார்ஷன் பண்ணிக் கொள்கிறார்கள். அபார்ஷனை  தாராளமாக செய்து கொள்ளலாம் என்று சொல்லும் நாடுகளில் ஆயிரம் பெண்களுக்கு 34 பேர் அபார்ஷன் செய்து கொள்கிறார்கள், என்று அமெரிக்காவிலுள்ள கட்மேக்கர் இன்ஸ்டிடியூட் செய்த ஒரு ஆய்வு கூறுகிறது. வித்தியாசம் ஒன்றுமே இல்லை. 

அபார்ஷனின் அறிகுறிகள் ஆரம்பிக்கும் நேரத்தில், சிலசில சொட்டுக்களாக கசியும் ரத்தம், அபார்ஷனின்போது ரத்தப்போக்கு அதிகமாகி, பின் கரு முழுவதுமாக வெளியேறிய பிறகு ரத்தம் வருவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவரும். சில சமயங்களில், சில பேருக்கு அபார்ஷன் முடிந்து சுமார் 2 வாரங்கள் வரைக்கூட ரத்தக் கசிவு இருக்கும். சில நேரங்களில் சுமார் 1 மாதம் வரைக்கூட ரத்தக்கசிவு இருக்கும். அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது.

அபார்ஷனின் போது வெளியாகும் ரத்தத்தின் அளவும் கூட ஒருவருக்கொருவர் மாறுபடும். சுமார் 15 மில்லி லிட்டரிலிருந்து சுமார் 500 மில்லி லிட்டர் வரை ரத்தம் வெளியாக வாய்ப்புண்டு. ஒரு பெண்ணுக்கு சுமார் 761.4 மில்லி லிட்டர் ரத்தம் வெளியானதாக ஒரு பதிவு இருக்கிறது. எனவே, அபார்ஷன் நேரத்தில் ஏற்படும் ரத்த இழப்பு மீது ஒரு கண் எப்பொழுதும் இருக்க வேண்டும். எச்சரிக்கையும், பாதுகாப்பும் மிக மிக அவசியம். 

அபார்ஷனின் போது கசியும் ரத்தம், கருப்பொருளோடும் மற்ற திசுக்களோடும் சேர்ந்து உறைந்து சிறுசிறு கட்டிகளாக வர வாய்ப்புண்டு. இந்தக் கட்டிகள் ஒரு சின்ன வெங்காயம் போன்ற அளவிலும் இருக்கலாம். ஒரு எலுமிச்சம்பழம் அளவிலும் இருக்கலாம். கவனம் தேவை. அபார்ஷன் முடிந்த பிறகு கூட சிலருக்கு லேசான ரத்தக் கசிவு வந்து கொண்டே இருக்கும். அப்படி இருந்தால், கருப்பொருள் முழுமையாக வெளியேறவில்லை என்று அர்த்தம். மகப்பேறு மருத்துவரை உடனே சந்திக்கவும்.

பெண்களுக்கு மாதாமாதம் இயற்கையாக நடைபெறும் மாதவிடாய் சமயத்தில் கசிந்து வெளியாகும் ரத்தத்தின் மொத்த அளவு சுமார் 80 மில்லி லிட்டர் வரை இருக்கலாம். அதாவது ஒரு கணக்குக்கு 16 டீஸ்பூன் வரை இருக்கும் என்று சொல்லலாம். (ஒரு டீஸ்பூன் என்பது 5 மில்லி லிட்டர் அளவாகும்). 

இயற்கையாக நடக்கும் பிரசவத்தின்போது சுமார் அரை லிட்டர் ரத்தம் வெளியாகலாம். ரத்த இழப்பு ஏற்படலாம். தவறிப் போய் ஏற்படும் கருச்சிதைவு சமயத்தில், 80 மில்லி லிட்டருக்கும், 500 மில்லி லிட்டருக்கும் இடையில் இருக்கலாம். பெரும்பாலும் கருச்சிதைவு காலங்களில் ரத்த இழப்பு கிட்டத்தட்ட  லிட்டரை நெருங்கிவிடும்.

இயற்கையாக மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் ரத்த இழப்பை விட, சற்று அதிகமான, ரத்த இழப்பு அபார்ஷன் நேரத்தில் இருக்கும். உடலில் சக்தி இருக்கும் பெண்கள் இதை சாதாரணமாக சந்தித்துவிடுவார்கள். 

கர்ப்பத்தில் கருமுட்டை வளர பிடிமானம் அடித்தளம் அதாவது ஊன்றுகோல் சரியாக இல்லாததால், இந்த இடம்மாறிய கர்ப்பம், ஒன்று கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பிலோ தான் முடியும். இந்த வகை அபார்ஷனில் கடுமையான வலியும், கடுமையாக ரத்தப்போக்கும் இருக்கும். உடனே மருத்துவமனை செல்வது தான் நல்லது.

அபார்ஷனின் போது அல்லது அபார்ஷனுக்குப் பிறகு, உங்களுக்கு ரத்த அழுத்தம் மிக அதிகமாக குறைந்துவிட்டாலோ, உங்கள் முகம், தோல் போன்றவை வெளுத்துப் போனது போல் தோன்றினாலோ, அதிகமாக வியர்த்துக் கொட்டினாலோ, மயக்கமடைந்தாலோ, ரத்த இழப்பு அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்வது தான் சிறப்பு.

திருமணம் முடிந்து கர்ப்பம் அடைவதற்காக காத்திருக்கும் பெண்களே, திருமணம் முடிந்து கர்ப்பம் அடைந்திருக்கும் பெண்களே, இந்த உலகிற்கு விலை மதிக்கமுடியாத, உன்னதமான உயிர் ஒன்றை, வெகு விரைவில் தரப் போகிறீர்கள். எனவே கர்ப்பமும் சரி, கர்ப்பகாலமும் சரி, மிக மிகக் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டிய காலங்கள் ஆகும்.

-தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com