நிலவில் 4 ஜி!

"சிங்களத் தீவிற்கு  ஒரு பாலம்   அமைப்போம்' என்று பாரதியார் சொன்ன மாதிரி,  "நிலவில்  4  ஜி சேவை  அமைப்போம்' என்கிறார் நிஷாந்த் பத்ரா.
நிலவில் 4 ஜி!


"சிங்களத் தீவிற்கு ஒரு பாலம் அமைப்போம்' என்று பாரதியார் சொன்ன மாதிரி, "நிலவில் 4 ஜி சேவை அமைப்போம்' என்கிறார் நிஷாந்த் பத்ரா. தில்லியில் வர்த்தக குடும்பத்தைச் சேர்ந்த பத்ரா இந்தோரில் கணினி இயல் பட்டப்படிப்பு படித்து அமெரிக்காவிலும் படித்தவர். இப்போது "நோக்கியா' நிறுவனத்தின் கொள்கை மற்றும் தொழில்நுட்பத்துறையின் தலைவராக உள்ளார்.

"நிலவில் மட்டுமல்ல ... நிலவையும் தாண்டி செவ்வாயிலும் 4 ஜி அலைவரிசை சேவையை வழங்குவோம்' என்று அறிவித்துள்ளார். விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, நிலவுடன் தொடர்பு கொள்ள வசதி செய்து தர வேண்டிய பொறுப்பினை "நோக்கியாவுக்கு வழங்கியுள்ளது. இப்போது நாம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்தில் உள்ளவரை அலைபேசியில் அழைப்பது போல, சந்திரனிலிருந்து பூமிக்கு 4 ஜி அலைவரிசையில் தொடர்பு கொள்ள முடியுமா.... நிலாவில் திரைப்படம் அல்லது காணொளியைக் காண முடியுமா....' என்பதுதான் இப்போதையைக் கேள்வி.

"நிலவில் 4 ஜி அலைவரிசை வசதி நிறுவப்பட்டால், இந்த வசதிகள் சாத்தியம்தான். இந்த வசதி ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பொது மக்களுக்கு வழங்கப்படமாட்டாது' என்கிறார் பத்ரா. நாசா 1969 -இல் செய்த மாதிரி, 2024 வாக்கில் நிலாவுக்கு விண்வெளி வீரர்களை மீண்டும் அனுப்பவுள்ளது. நிலவில் இறங்கும் வீரர்கள் பல திசைகளில் பயணம் செய்து நிலவைப் பற்றி ஆய்வு செய்வார்கள். அப்போது அவர்களுக்குள் பேச, தொடர்பு கொள்ள ஒரு அலைவரிசை தேவைப்படும். நிலவில் 4 ஜி சேவை இருந்தால் அதை பயன்படுத்தி விண்வெளி வீரர்கள் நிலவில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளலாம்.

2024 -இல் விண்வெளி ஆராய்ச்சியில் முதல் முறையாக கருப்பு இனப்பெண்ணான ஜெஸ்ஸிகா வாட்கின்ஸ்ûஸ நிலாவிற்கு நாசா அனுப்பும். அப்போது நிலவில் 4 ஜி அலைவரிசை வசதி நிலவில் ஏற்படுத்தப்படவேண்டும். ஜெஸ்ஸிகாவுடன் பயணிக்கும் இதர 17 விண்வெளி வீரர்கள் நிலவின் தரை அமைப்பை ஆராய்ச்சி செய்ய நீண்ட நாள்கள் நிலவில் இருப்பார்கள்.

"விண்வெளி வீரர்களுக்குள்ளும், பூமியில் நாசாவுடன் தொடர்பு கொள்ளவும் 4 ஜி அலைவரிசை வசதி வெகு விரைவில் தயாராகிவிடும்... நிலவின் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி அலைவரிசை நிலையத்தை அமைக்க வேண்டும். பூமியில் இருப்பது போல் அலைவரிசை கோபுரங்கள், நிலவில் தேவையில்லை. நிலவில் கட்டடங்கள் இல்லாததால் 4 ஜி அலைகள் தடைபடாது. அதனால் கோபுரங்கள் அவசியமில்லை. இந்தியாவில் தொழில்நுட்பத்துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. துறை சார்ந்த அறிவுள்ளவர்களுக்குப் பஞ்சமில்லை. இந்த முயற்சியில் இந்தியாவின் கணினி வல்லுநர்களையும் இணைத்துக் கொள்வோம்' என்கிறார் பத்ரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com