ரத்தத்தின் ரத்தமே... - 57

கர்ப்ப காலம் -  ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் முக்கியமான பயண காலம் தான் இந்த கர்ப்ப காலம்.
ரத்தத்தின் ரத்தமே... - 57

கர்ப்ப காலம் -  ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் முக்கியமான பயண காலம் தான் இந்த கர்ப்ப காலம். இது ஒரு திகைப்பான, அற்புதமான, உற்சாகமான, பயத்தையும் கொடுக்கக்கூடிய பயண காலம் ஆகும். இந்தப் பயண காலத்தில், பலவிதமான, விசித்திரமான,எதிர்பாராத, ஆச்சரியமான மாற்றங்கள் பெண்ணின் உடலில் ஏற்படுகின்றன.

ஒரு பெண்ணின் உடலை கர்ப்பம் முழுவதுமாக மாற்றிவிடுகிறது. ஒரு பெண் தன் குழந்தையை வயிற்றில் சுமக்க ஆரம்பித்துவிட்டால், அவள் நிறைய காரியங்களில் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். நிறைய காரியங்களில் விட்டுக் கொடுத்து வாழப் பழகிக் கொள்ள  வேண்டும். நிறைய காரியங்களை தியாகம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அவளும், அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தையும் பாதுகாப்பாக ஆரோக்கியமாக இருப்பார்கள்.

குழந்தை பெரிதாக, பெரிதாக தாயின் வயிற்றில் இடம் மாறிக்கொண்டே இருக்கும். சுற்றிக் கொண்டே இருக்கும். அதனால் குழந்தைக்கு இடம் கொடுக்க, தாயின் வயிற்றிலுள்ள சில உறுப்புகள் இடம் மாறி, குழந்தைக்கு நிறைய இடத்தைக் கொடுக்கின்றது.

ஒரு ஆரஞ்சுப் பழத்தின் அளவே இருக்கக்கூடிய கர்ப்பப்பை, கர்ப்பமுற்ற 3-ஆவது மாதத்தில் ஒரு தர்ப்பூசணி பழம் அளவுக்கு பெரிதாக மாறிவிடும். கர்ப்பப்பை அதனுடைய உண்மையான அளவு மாதிரி சுமார் நூறு மடங்கு பெரிதாவதற்குக் கூட வாய்ப்பு உண்டு.

கர்ப்ப காலம் என்பது பத்து மாதம், என்று பலர், பல இடத்தில் சொல்லிக் கொண்டிருந்தாலும், 280 நாள்கள் அதாவது 9 மாதங்களில்தான் பிரசவம் அதிகமாக நடைபெறுகிறது. பத்து நாட்கள் முன்போ அல்லது பின்போ இருக்கலாம். இது அனுமதிக்கப்பட்ட காலமே.

வயிற்றில் இருக்கும் கருவுக்கு ரத்த சப்ளையையும், ஊட்டச் சத்தையும் கொடுக்கும் உறுப்புக்குப் பெயர் "நஞ்சுக்கொடி' அதாவது "பிளாஸன்டா' ஆகும். கர்ப்பப்பையின் உள்ளேயே இருக்கும் இந்த உறுப்பு, சில ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. கர்ப்பம் அடையாத ஒரு பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சுரக்கும் மொத்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை, கர்ப்பமுற்ற பெண்ணுக்கு ஒரே நாளில் சுரக்கச் செய்துவிடுகிறது.

பெரிதாகிக் கொண்டே வரும் கர்ப்பப்பையிலுள்ள ரத்தக்குழாய்களுக்கு, இருப்பது போக மேற்கொண்டு அதிகமாக ரத்தம் தேவைப்படுகிறது. வளரும் கருவுக்கும், கருவைச் சுற்றிப் பாதுகாக்க உதவும் திசுக்களுக்கும், தேவையான ஆக்ஸிஜனையும், சத்துப் பொருள்களையும் எடுத்துக்கொண்டு செல்லவும் ரத்தம் அதிகமாக தேவைப்படுகிறது. கர்ப்பப்பையில் உண்டாகும் கழிவுகளையும், கருவில் உண்டாகும் கழிவுகளையும், வெளியே எடுத்துக்கொண்டு வரவும் ரத்தம் அதிகமாகத் தேவைப்படுகிறது. இதுபோக பிரசவ காலத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டால் அதைச் சமாளிக்க அதிக ரத்தம் சேமிப்பில் இருக்க வேண்டியதிருக்கிறது. கர்ப்பிணிப் பெண்களின் உடலில் சுமார் 25 சதவீத அளவு ரத்தம்,  ஏற்கெனவே இருப்பதைவிட இந்த நேரத்தில் அதிகமாகிவிடுகிறது. ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாவதினாலும், ரத்தத்திலுள்ள பிளாஸ்மா திரவம் அதிகமாவதினாலும், இந்த 25 சதவீத அதிகப்படியான ரத்தம் கர்ப்ப காலத்தில், கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிகமாகக் கிடைக்கிறது.

ரத்தத்திலுள்ள பொருட்களை, செல்களை, அணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய உறுப்புகளாகிய எலும்பு மஜ்ஜைகள், கர்ப்பகாலத்தில் சிவப்பணுக்களை நிறைய அளவில் உற்பத்தி செய்து, ரத்தத்துக்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறது. கர்ப்ப காலத்தின் ஆரம்பக் கட்டத்தில், ரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்கள் சற்று கூடுவதுண்டு. ஆனால் கடைசி மாதங்களில் இந்த வெள்ளை அணுக்கள் கூடுவதில்லை.

கர்ப்பமில்லாத ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு சிவப்பணுக்கள் சுமார் 4.50 லட்சத்துக்கு மேலும், ஹீமோகுளோபின் சுமார் 14 கிராம் வரையும் இருக்கும். அதே நேரம் ஒரு கர்ப்பிணிப் பெண் நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டு, திடமாக, ஆரோக்கியமாக இருக்கிறாள் என்றால், அவளது ரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் சுமார் 4 லட்சமும், ஹீமோகுளாபின் சுமார் 13.5 கிராமுக்குக் குறையாமலும் இருக்கும். இருக்கணும்.

உடலிலுள்ள பெரும்பாலான நாளமில்லா சுரப்பிகள் கர்ப்ப காலத்தில் பெரிதாகிவிடும். சில சுரப்பிகள் தங்களின் வேலைகளைக் கூட, மாற்றிக் கொள்ளும். கர்ப்பமாயிருந்தால் அந்தப் பெண்ணுக்கு சுரக்கும் ஹார்மோன்கள் ஒன்று குறைந்துவிடும் அல்லது கூடிவிடும். இந்த சுரப்பிகள் எல்லாமே கர்ப்ப காலம் முடிந்து, பிரசவம் ஆனபிறகு தான் பழைய நிலைக்கு வரும். தைராய்டு சுரப்பிகள் கூட கர்ப்ப காலத்தில் சற்று பெரிதாகும். ஆனால் அதன் வேலைகள் முன் எப்படி நடந்ததோ அப்படியேதான் நடக்கும். அதில் எதுவும் மாற்றம் இருக்காது.

கர்ப்ப காலத்தில் உடலில் ஆக்ஸிஜனின் உபயோகமும் கொஞ்சம் கொஞ்சமாக, அதிகமாகிக் கொண்டே வரும். 3 ஆவது மாதத்திலிருந்து இந்த ஆக்ஸிஜனின் உபயோகம் அதிகமாக ஆரம்பிக்கும். பிரசவத்திற்கு முன்பு, 2 மடங்கு அதிகமாக ஆக்ஸிஜன் உபயோகிக்கும் சூழ்நிலை கூட ஏற்படும்.
ஓராம் மாசம் உடலது தளரும், ஈராம் மாசம் இடையது மெலியும், என்ற ஒரு திரைப்படப் பாடல் வரிகள் போல, கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் லேசாக எடை குறையும். ஏனெனில் உடலில் ஏற்படும் மாற்றம், பசியின்மை, தொடர்ந்து வாந்தி, மயக்கம், போன்றவைகளினால் சரியாக சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுவிடும். ஆனால், 3 ஆவது மாதத்திலிருந்து 9 -ஆவது மாதம் வரை உடலின் எடை நிறைய பெண்களுக்கு கூடிக்கொண்டே தான் வரும். இந்த எடை கூடுதல் என்பது, ஒரு வாரத்துக்கு கால் கிலோ என்ற கணக்கில், சுமார் 9 கிலோ வரைக்கும் கூடுவதற்கு வாய்ப்புண்டு. கர்ப்பமாயிருக்கும் காலத்தில், கர்ப்பப்பை, அதனுள் இருக்கும் சிசு, ரத்தக்குழாய்கள், திசுக்கள், நஞ்சுக்கொடி எல்லாம் சேர்ந்து சுமார் 4 கிலோ இருக்கும். கர்ப்பப்பையும், மார்பகங்களும் சேர்ந்தே சுமார் 2 கிலோ எடை இருக்கும்.

அதிகப்படியான எடை கர்ப்ப காலத்தில் கூடினால், அது கர்ப்பிணிக்கும்,  டாக்டருக்கும் பிரச்னைதான். அதிகம் சாப்பிடுவதால் உண்டாகலாம் என்று நினைத்தாலும் கூட, உடலில் ஏற்படும் இயற்கையான மாற்றங்கள் சரியாக முறையாக நடக்கவில்லையோ என்ற சந்தேகம் டாக்டருக்கு வந்துவிடும். எனவே அபரிமிதமான எடை இருந்தால், உடனே உங்கள் டாக்டரைச் சந்தியுங்கள். நாம் சாப்பிடும் உணவிலுள்ள புரதச்சத்து சிதைந்து, அதிலிருந்து கிடைக்கும் பொருளாகிய நைட்ரஜன், குழந்தை, நஞ்சுக்கொடி, கர்ப்பப்பை, மார்பகங்கள் மற்ற திசுக்கள் வளர மிகவும் தேவை. தாயின் ரத்தத்திலுள்ள பிளாஸ்மா திரவம், சிவப்பணுக்கள் முதலியவை கூடுவதற்கும் நைட்ரஜன் தேவை.

ஆக்ஸிஜன் கலந்த ரத்தத்தை குழந்தைக்கு கொடுக்க வேண்டியிருப்பதால், ரத்தம் 50 சதவீதம் அதிகமாகிறது. அதிகப்படியான ரத்தத்தை பம்ப் செய்ய, இருதயம் அதிக வேலை பார்க்கிறது. இதனால் கர்ப்ப காலத்தில் இருதயம் சற்று பெரிதாவதுண்டு.

கர்ப்ப காலத்தில் தாயின் குரல் லேசாக மாற வாய்ப்புண்டு. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோய்ஜஸ்ட்ரான் என்கிற ஹார்மோன்கள் அதிகமாவதால், குரல்வளை தடிமனாகி குரல் மாறுவது ஏற்படுகிறது.

கர்ப்ப காலத்தில் சத்தமில்லாமல் அமைதியாக கருப்பையில் குழந்தை அழக்கூடும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. தயவுசெய்து குழந்தையை அழ வைக்காதீர்கள்.

கர்ப்ப காலத்தில் உணவு அல்லாத பொருட்கள் மீதும் நாட்டம் ஏற்படும். "மாங்காய் இனிக்கும்' சாம்பல் ருசிக்கும்  என்பது போல,  ஊறுகாய், சாக்பீஸ் இன்னும் சில பொருட்களையும் ருசி பார்க்கத் தோணும். நாவை அடக்கிக் கொள்ளுங்கள்.

கர்ப்ப காலத்தில்,  ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்புண்டு. பிரசவ காலத்தில் சுகப்பிரசவம் ஏற்பட வேண்டும் என்பதற்காக,  கர்ப்ப காலத்திலேயே உடலின் கீழ்ப்பாதி எலும்பு மூட்டுகள், குறிப்பாக இடுப்பு எலும்பு மூட்டுகள் தளர்ந்து,  பிரசவ நேரத்தில் நன்றாக விரிந்து கொடுக்கும் அளவுக்கு தன்னைத்தானே மாற்றிக் கொள்கின்றன.  "ரிலாக்ஸின்'  என்கிற ஹார்மோன் உடலில் உற்பத்தியாகி,  இந்த வேலையைச் செய்ய வைக்கிறது.

முதல் மூன்று மாத கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு வாசனையும் ருசியும் சற்று அதிகமாகவே தெரியும். ஹார்மோன்களின் அதிக சுரப்பு கர்ப்பிணிகளின் சுவை, மணத்தை மாற்றிவிடுகின்றன. அதனால் ஆச்சரியப் படும்படியாக,  சில அரிதான பொருட்களை கர்ப்பிணிகள் சாப்பிடக் கேட்பார்கள். அவர்கள் ஆசைப்பட்டு கேட்கிறார்கள் என்பதற்காக நீங்கள் கேட்கிற எல்லாவற்றையும் ஆசையுடன் கொடுத்துவிடாதீர்கள். கவனம் வேண்டும்.

நிறைய கர்ப்பிணிப் பெண்களுக்கு, தற்காலிக ஞாபகமறதி ஏற்படுவதுண்டு. தூக்கம் சரியாக வராதது, லேட்டாகத் தூங்குவது,  அதிக களைப்பு, சரியாக சாப்பிடமுடியாதது, புதிய வரவை எப்படி நல்லபடியாக வெளியே கொண்டுவரப் போகிறோம் என்ற பயம், லேசான மன அழுத்தம் ஆகிய இவைகளே இந்த தற்காலிக ஞாபகமறதியை உண்டு பண்ணுகின்றன. பிரசவத்திற்குப் பின் இவை எல்லாமே சரியாகி விடும். கவலை வேண்டாம்.

அதிக உயரம் இருக்கும் கர்ப்பிணிப்பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறக்க வாய்ப்புண்டு என்று சொல்லப்படுவதுண்டு. மத்திய ஆப்ரிக்காவிலுள்ள பெனின் என்கிற நகரத்தில், அதிகமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறதாம். ஆயிரம் பிரசவத்துக்கு, 27 பிரசவங்கள் இரட்டையர்களாம். அதேமாதிரி ஒரே பிரசவத்தில் 6 ஆண் 2 பெண் பிறந்திருப்பதாக ஒரு பதிவு இருக்கிறது.

பல் ஈறுகளில் புதிதாக காறை படிவதும், லேசாக ரத்தம் கசிவதும் கர்ப்ப காலத்தில் ஏற்படும். உடலில் நீர் தேங்க ஆரம்பிப்பதால், கை கால் மூட்டுகளிலுள்ள திசுக்கள் லேசாக வீங்கி, நரம்புகளை அழுத்தி லேசான வலியை உண்டு பண்ணலாம்.

சில பேருக்கு முகத்திலும், உடலிலும் முடி திடீரென்று அதிகமாக வளர வாய்ப்புண்டு. நெற்றியில், கன்னங்களில், மூக்கின் மேல் பகுதியில் பழுப்பு நிறத்தில் தோலின் மேல் ஒரு படிமம் ஏற்படுவதுண்டு. அனுபவசாலிப் பெண்கள் இந்தப் புதுப் படலத்தை முகத்தில் பார்த்தவுடனேயே, அந்தப் பெண் கர்ப்பமுற்றிருக்கிறாள் என்று கண்டுபிடித்து விடுவார்கள். கரோனா காலத்தில் போடப்படும் முகக் கவசத்தைப் போல, கர்ப்பகாலத்தில் போடப்படும் புது மாஸ்க் இது. பயம் வேண்டாம். பிரசவத்திற்குப் பின் நாம் தூக்கிப் போட வேண்டாம். அதுவே காணாமல் போய்விடும்.

வயிறு பெரிதாவதாலும், கொழுப்பு வயிற்றின் மேல்தோல் மீது கொஞ்சம்கொஞ்சமாக படிவதாலும், மார்பகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாவதாலும், மொழு மொழுவென்று இருந்த வயிற்றில், வரிவரியாக தழும்புகள் போன்றதொரு தோற்றம், இங்கும் அங்கும் வயிற்றின் குறுக்கேயும் நெடுக்கேயும் ஓடியிருக்கும். இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் இந்த புதிய வரித்தழும்புகள் தோன்றும். வயிற்றிலுள்ள எலாஸ்டிக் தன்மையுள்ள தோல் சற்று விரிந்து கொடுப்பதனால்தான் இம்மாதிரி ஏற்படுகிறது. இந்த வரித்தழும்புகள் பிரசவத்திற்குப் பிறகு காணாமல் போய்விடும். சிலருக்கு இது அப்படியே நிரந்தரமாக இருந்துவிடும். சில பெண்களுக்கு பல குழந்தைகள் பெற்றெடுத்தாலும், வயிற்றில் வரித்தழும்புகள் வரவே வராது.

"வத்தக் குழம்பு நல்லா இருக்குதே'  என்று நாலு வாய் அதிகம் சாப்பிட்டாலே, மூச்சு திணறுது, வயிறு முட்டுது, வயிறு வீங்கிருச்சு என்று புலம்பித் தள்ளிவிடுவோம் நாம். அப்படியிருக்கையில் ஒரு கிராமில் ஆரம்பித்து, சுமார் 3 கிலோ வரை எடையுள்ள ஒரு குழந்தையை சுமார் 300 நாள்கள் இரவும் பகலும் சுமந்து கொண்டு, அன்றாட வேலைகளையும் பார்த்துக் கொண்டு இருக்கும் பெண்களை சற்று நினைத்துப் பாருங்கள். சுமப்பது தான் சுகம் என்று மனதுக்குள் நினைத்தாலும், உடல் அதற்கு ஈடு கொடுக்க வேண்டும் அல்லவா ஏராளமான மாற்றங்கள், எதிர்பாராத ஆச்சரியங்கள் கர்ப்பிணிப் பெண்களின் உடலில் ஏற்பட்டுவிடுகின்றன. இவையெல்லாமே, உங்கள் கர்ப்பப்பையில் வளரும் விலைமதிக்க முடியாத அற்புதத்தை, அதிசயத்தை, ஆனந்தத்தை நல்ல முறையில் வளர்த்து வெளியில் கொண்டு வருவதற்காகத்தான். எனவே கர்ப்ப காலம் ஒரு பொற்காலம் ஆகும். பெண்களை போற்றிப் பாடுங்கள் .

-தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com