ரத்தத்தின் ரத்தமே... - 58

உலகத்தின் எல்லா மூலையிலும், ஒவ்வொருநொடியிலும்,பல குழந்தைகள் பிறந்துகொண்டேதான் இருக்கின்றன.
ரத்தத்தின் ரத்தமே... - 58


உலகத்தின் எல்லா மூலையிலும், ஒவ்வொருநொடியிலும்,பல குழந்தைகள் பிறந்துகொண்டேதான் இருக்கின்றன. இவ்வாறு,பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைகளும் இயற்கையின் புதிய பதிப்புதான். அநேக பிரசவங்கள் ஒரு குழந்தையுடனும், அரிதாக சில பிரசவங்கள் பல குழந்தைகளுடனும் பிறக்கின்றன.

"தீட்டு நின்று திரட்சியானதுதான் குழந்தை' என்று குழந்தை உருவாவதை விஞ்ஞானத்தையும், இலக்கியத்தையும் சேர்த்து மிக அழகாகச் சொல்வார் சுகி.சிவம் .

குழந்தைபிறப்பை "பிரசவம்' என்று தான் எல்லோரும் சொல்வதுண்டு. ஆனால் சமீபகாலமாக,  "பிரசவம்' என்று சொல்வது மிகவும் குறைந்து போய், "டெலிவரி' என்று சொல்வது தான் அதிகமாகிவிட்டது. "டெலிவரி' என்றால் ஆங்கிலத்தில் "ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டுபோய் கொடுப்பது என்றுதான் அர்த்தம். இதை கொடுத்தல், சேர்த்தல் ஒப்படைப்பு, வழங்கல் என்று கூடச் சொல்லலாம். அப்படிப் பார்த்தால், குழந்தையைப் பெற்றுக் கொடுத்தல், குழந்தையைப் பெற்று ஒப்படைத்தல், குழந்தையைப் பெற்று வழங்குதல் என்பதும் சரிதானே அதனால் தான் ஆங்கில வார்த்தையாகிய டெலிவரி பிரசவம் என்கிற வார்த்தைக்குப் பதிலாக உபயோகப்படுத்தப்பட்டது.

பிரசவத்தின் போது ஏற்படும் வலியின் அளவை,சொல்லவே முடியாது. இந்த வலியின் அளவு ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலர் இதை மிகச் சாதாரணமாக சமாளித்துவிடுவார்கள். சிலர் சற்று அதிகமாக கஷ்டப்படுவார்கள். முதல் நாள் வரை வயலில் விவசாய வேலையைப் பார்த்துவிட்டு, அடுத்தநாள் ஆஸ்பத்திரிக்குப் போய் குழந்தையைப் பெற்றுக் கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். குழந்தை பிறப்பு என்பது வலியானது தான். ஆனால் அது சமாளிக்கக்கூடிய ஒரு விஷயம் தான்.

கத்தியின்றி ரத்தமின்றி இயற்கையாக நடக்கும் குழந்தை பிறப்புக்குப் பெயர் "நார்மல் டெலிவரி' அதாவது சுகப்பிரசவம். கத்தியுடனும், ரத்தத்துடனும் ஆபரேஷன் செய்து வயிற்றிலிருந்து குழந்தையை அலாக்காக தூக்கி எடுக்கும் முறைக்குப் பெயர் "சிúஸரியன் டெலிவரி' ஆகும். பெயர்தான் சுகப்பிரசவமே தவிர, படும் வலியும்,  கஷ்டமும் இருக்குதே கொஞ்ச நஞ்சமல்ல. இதுக்கு பேசாம ஆபரேஷனையே செய்து  குழந்தையை எடுக்கச் சொல்லிடலாம் என்று,  இன்றைய காலத்து பெண்மணி ஒருவர் சொன்னது இப்போது ஞாபகத்திற்கு வருகிறது. பெண்மை, தாய்மை, குழந்தை-தாய் பாசம், தாய்-குழந்தை பாசம், தியாகம், அன்பு, தாய்க்கும் சேய்க்கும் இடையே ஏற்படும் இன்னும் எத்தனை எத்தனையோ பந்த பாசங்களுக்கு அஸ்தி வாரம் வலியோடு கூடிய சுகப்பிரசவம் தான்.

நாட்டுப்புறங்களில் வீட்டுப் பிரசவம்,  அங்கே இங்கே இன்றைக்கும் சில கிராமங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. நாகரிகத்தின் உச்சியிலும், நவீன விஞ்ஞான வசதியின் உச்சியிலும் நாம் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கின்றோம். அப்படியும் வீட்டுப் பிரசவம், ரகசியமாக நடக்கத்தான் செய்கிறது. ஆஸ்பத்திரிக்குப் போய் குழந்தை பெத்துக்கலாமே, டெலிவரி நேரத்தில் ஏதாவது சமாளிக்க முடியாத பிரச்னை ஏற்பட்டுவிட்டால் என்னபண்றது? என்று கேட்டால், எங்க பாட்டி எங்க அம்மாவை,  இந்த வீட்லதான் பெத்தாங்க, எங்க அம்மா என்னை இந்த வீட்லதான் பெத்தாங்க, அதனால நானும் இந்த வீட்லதான் பெத்துக்கப்போறேன். ஒண்ணும் ஆகாது என்று பதில் சொல்வார்கள். வசதிகள் இருந்தும் உபயோகப்படுத்திக் கொள்ள மறுக்கிறார்கள்.

சாதாரணமாக ஒரு ù பண், தன்னுடைய பிரசவ நேரத்தில் சுமார் அரைலிட்டர் ரத்தத்தை இழக்க நேரிடும். சுகப்பிரவத்திலும் சரி, சிúஸரியன் ஆபரேஷன் டெலிவரியிலும் சரி, ரத்த இழப்பு கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும். ரத்த இழப்பின் அளவு வித்தியாசப்படும். அவ்வளவுதான். பொதுவாக, சுகப்பிரசவத்தைவிட, சிúஸரியன் டெலிவரி சமயத்தில் ரத்த இழப்பு, சற்றுஅதிகமாக இருக்கும்.

கர்ப்பகாலம் முழுவதும் கர்ப்பப்பையில் கருவுக்கு நல்ல ரத்தத்தையும் அனைத்துசத்துப் பொருட்களையும் வழங்கிக் கொண்டிருக்கும் உறுப்பின் பெயர் "நஞ்சுக்கொடி' ஆகும். இதை "பிளாஸன்டா' என்று ஆங்கிலத்தில் அழைப்பர். கருவுக்கு நல்ல ரத்தத்தையும், நல்ல உணவையும் வழங்கிக் கொண்டு, நல்லதையே செய்துகொண்டிருக்கும் இந்த நல்ல உறுப்புக்கு பெயர் மட்டும் "நஞ்சுக்கொடி' என்று வைத்துவிட்டார்களே என்று என் மனம் மிகவும் வேதனைப்படுகிறது. படிக்கின்ற உங்கள் மனதும் கண்டிப்பாக வேதனைப்படும்.

ஒருவர் உயிரோடு இருக்கிறவரைஅவர் எழுதி வைத்த சொத்து உயிலுக்கு மரியாதை கிடையாது. உபயோகமும் கிடையாது. அதாவது உயிலுக்கு உயிர் கிடையாது என்று கூட சொல்லலாம். ஆனால், அவர் இறந்துபோனஅடுத்த நிமிடமே, அவர் உயிலுக்குத்தான் மரியாதை. அவர் உடலுக்கு சுத்தமாக மரியாதை கிடையாது. அதுபோல, குழந்தை கர்ப்பப்பையில் இருக்கும் வரைதான் நஞ்சுக்கொடிக்குமரியாதை.

குழந்தை கர்ப்பப்பையை விட்டு வெளியே வந்துவிட்டால், நஞ்சுக்கொடிக்கு மரியாதை கிடையாது. உபயோகமும் கிடையாது. குழந்தை வெளியே வந்துவிட்டால், நஞ்சுக்கொடிக்கு உள்ளே வேலை இல்லை. குழந்தை கருப்பையை விட்டு வெளியே வந்தவுடன் பின்னாலேயே நஞ்சுக்கொடியும் மரியாதையாக வெளியே வந்துவிடவேண்டும். அதுதான் அதற்கும் மரியாதை. வெளியே ஒழுங்காக, முழுவதுமாக வராமல், வேலைகாட்டினால், அது நஞ்சாகி, விஷமாகி, தாயின் உயிருக்கு பலவிதத்தில் ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதனால்தான் "பிளாஸன்டா' என்கிற இந்த உறுப்பை "நஞ்சுக்கொடி' என்றுஅழைக்கிறார்கள்.

கர்ப்பப்பையிலிருந்து குழந்தை வெளியே வந்தவுடன், நஞ்சுக்கொடியும் அது ஒட்டிக்கொண்டிருக்கும் கர்ப்பப்பையின் சுவரிலிருந்து பிரிந்து, துண்டாகி, தனியாகி வெளியே வர தயாராகி விடுகிறது. நஞ்சுக்கொடி பிரிந்து, கிழிந்து, தனியாகி வெளியே வரும் போது, அது ஒட்டிக்கொண்டிருந்த  கர்ப்பப்பை இடத்திலுள்ள ரத்தக்குழாய்களும் கிழிந்து, பிரிந்து, திறந்துகொள்ளும். இவ்வாறு ரத்தக்குழாய்கள் திறந்துகொள்ளும்போது, அந்த ரத்தக்குழாய்களிலிருந்து சிறிது நேரத்துக்கு ரத்தம் வெளிவரத்தான் செய்யும்.

பிரசவம் ஆவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே,  (ஏன், சில மணி நேரங்களுக்கு முன்பே என்று கூட சொல்லலாம்) மிகப்பெரிதாக இருக்கும் கர்ப்பப்பை, விட்டுவிட்டு சுருங்க ஆரம்பித்துவிடுகிறது. கர்ப்பப்பை சுருங்கி, சுருங்கி முதலில் குழந்தையை வெளியே தள்ளுகிறது. கர்ப்பப்பையிலிருந்து குழந்தை வெளியே வந்து விழுவதைத்தான் பட்டினத்தடிகள் "உதரம் அகன்றுபுவியில் விழுந்து' என்று தனது பாடலில் சொல்லுவார்.

கர்ப்பப்பை சுருங்கி சுருங்கி முதலில் குழந்தையை வெளியே தள்ளுகிறதல்லவா அடுத்து, நஞ்சுக்கொடியையும் குழந்தையின் பின்னாலேயே வெளியே தள்ளுகிறது. ஆக, முதலில் குழந்தை, அடுத்து நஞ்சுக்கொடி வெளியே வந்துவிடுகிறது. நஞ்சுக்கொடிவெளியே வந்த பின்பும், கர்ப்பப்பை சுருங்கும் செயல் நடந்துகொண்டேதான் இருக்கிறது. குழந்தை வெளியே வந்தாச்சு. உள்ளே இருந்தால் பிரச்னையை உண்டாக்கிவிடக்கூடிய நஞ்சுக்கொடியும்  வெளியே வந்தாச்சு. அதற்குப் பிறகும் கர்ப்பப்பை ஏன் சுருங்கிக் கொண்டே இருக்கிறது? எதற்கு இது நடக்கிறது?

நஞ்சுக்கொடி, கர்ப்பப்பையிலிருந்து கிழித்துக்கொண்டு, பிய்த்துக் கொண்டு தானே வெளியே வருகிறது. அப்படி வெளியே வரும் போது கர்ப்பப்பைக்கும் நஞ்சுக்கொடிக்கும் இணைப்பில் இருந்த ரத்தக்குழாய்களும் கிழிந்து,பிரிந்து, திறந்து கொண்டுதானே இருக்கும். திறந்துகொண்டிருக்கும் ரத்தக்குழாய்களிலிருந்து ரத்தம் வடிந்துகொண்டிருக்கும் அல்லவா அந்த ரத்தக் குழாய்களை மூடத்தான், ரத்தம் மேற்கொண்டு வராமலிருக்கத்தான், கர்ப்பப்பைசுருங்கிக் கொண்டிருக்கிறது. என்ன விந்தை கர்ப்பப்பை, மிக ஸ்ட்ராங்காக சுருங்கவில்லை என்றால், கர்ப்பப்பைக்குள் சிதைந்திருக்கும் ரத்தக்குழாய்கள் மூடாது. ரத்தக்குழாய்கள் மூடவில்லை என்றால், ரத்தம் வடிந்துகொண்டேதான் இருக்கும். எனவே இயற்கையாகவே நடக்கும் இந்த கர்ப்பப்பை சுருங்கும் வேலை, ரத்தத்தை நிறுத்த மிகவும் உதவியாக இருக்கிறது. நஞ்சுக்கொடியின் ஒரு சிறுபாகம் கர்ப்பப்பைக்குள் இருந்தால் கூட, அது வெளியே தள்ளப்படும் வரை ரத்தம் வழிந்து கொண்டேதான் இருக்கும். நஞ்சுக்கொடி மொத்தமும் வெளியே வந்துவிட்டால், ரத்தம் வருவது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிடும். நாட்டுப்புறங்களில் வீட்டுப் பிரசவம் பார்க்கும் சில அனுபவம் இல்லாததாய்மார்கள், செவிலியர்கள், குழந்தை வெளியே வந்தவுடன்  நஞ்சுக்கொடியும் முழுவதுமாக வெளியே வந்துவிட்டது என்று தவறுதலாக நினைத்துக் கொண்டு, அமைதியாகவிட்டு விடுவார்கள். தாய் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதெல்லாம் இம்மாதிரி அஜாக்கிரதையான விஷயங்களினால்தான்.  ஆஸ்பத்திரிக்குப் போய் பிரசவம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதன் அர்த்தமும் இதனால்தான்.

பிரசவத்திற்குப் பின் ஏற்படும் ரத்த இழப்பானது பிரசவ நேரத்தில் ஏற்படும் ரத்த இழப்பை விட அதிகமாக இருக்கும். கவனம் வேண்டும். நூற்றில் 1 அல்லது 2 பேருக்கு,  ரத்த இழப்பு கண்டிப்பாக இருக்கும். நஞ்சுக் கொடி வெளியே வந்த பிறகு தான், திடீரென்று ரத்தம்  மிகஅதிகமாக வெளியே வர ஆரம்பிக்கும் எனவே தாயை கவனமாகப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

பிரசவத்திற்குப் பின் ஏற்படும் ரத்த இழப்பின் அறிகுறிகள்:

1) கட்டுப்பாடு இல்லாத ரத்தப்பெருக்கு
2) ரத்த அழுத்தம் குறைந்துவிடுதல்
3) இருதயத்துடிப்பு அதிகமாகிவிடுதல்
4) சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து விடுதல்
5) பிறப்புறுப்பு வீங்கிப் போய் வலியுடன் இருத்தல்
6)இம்மாதிரிஅறிகுறிகள் ஏதாவது ஏற்பட்டால், அந்த நேரம் நீங்கள் மருத்துவமனையில் தான் இருப்பீர்கள். உடனே மகப்பேறு மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

பிரசவத்திற்குப் பின் ஏற்படும் ரத்த இழப்புக்கான காரணங்கள்:

1) பிரசவத்தின் போது பிறப்புறுப்பில் ஏற்படும் கிழிசல்
2) கர்ப்பப்பையின் ஒருபகுதியில் ஏற்படும் கிழிசல்
3) ரத்த உறைவு பிரச்னைகள்
4) நஞ்சுக்கொடி பிரச்னைகள்

சில சமயங்களில் குழந்தை வெளியே வரும்போது, முதலில் நஞ்சுக்கொடி பிரிந்து வெளியே வந்து, குழந்தை வெளியே வர வேண்டிய வழியை அடைத்துக்கொள்வது. இதனால் ரத்தம் தேங்கிநின்று, பின் மொத்தமாக ரத்தம் வெளிவருவதுண்டு.

தண்ணீர் வரத்து அணைக்கு அதிகமாகிவிட்டால் அணையில் தேக்கி வைத்திருந்த தண்ணீரை திடீரென திறந்துவிட்டால் என்ன ஆகுமோ, அதே நிலைதான் இங்கும் ஏற்படும். சிலருக்குக் கர்ப்பப்பை இயற்கையாக இருக்கும் அளவைவிட, சற்று பெரிதாக இருந்தால் ரத்த இழப்பு அதிகமாகலாம்.

ஒரே நேரத்தில் 2,  3 குழந்தைகள் பிரசவம் ஆனால், ரத்த இழப்பு அதிகமாக வாய்ப்பு உண்டு.

கர்ப்பமாயிருக்கும் போது ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், ரத்த இழப்பு சற்றுஅதிகமாகலாம்.

நிறைய குழந்தைகள் பெற்றதாயாக இருந்தால், ரத்த இழப்பு சற்று அதிகமாகலாம். மேற்கூறிய காரணங்களெல்லாம் உங்களை பயமுறுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. நீங்கள் உஷாராக இருக்கவேண்டும் என்பதற்காகவே சொல்லப்பட்டவை.

கர்ப்பகாலத்தில், சத்தான, தேவையான, போதுமான உணவை சாப்பிட்டுக் கொண்டு, சோம்பேறித்தனமாக  உட்கார்ந்தே காலத்தைக் கழிக்காமல், அன்றாட வேலைகளை கவனத்துடன் செய்துகொண்டு, மகப்பேறு மருத்துவர் சொல்லிக் கொடுக்கும் கர்ப்பகால, உடற்பயிற்சிகளை, தினமும் செய்துகொண்டு, கர்ப்பமுற்றகாலத்திலிருந்து, பிரசவம் ஆகும் காலம் வரை மகப்பேறு மருத்துவரை மாதாமாதம் சந்தித்து பரிசோதனை செய்து கொண்டு, போதுமான நேரம் தூங்கிக் கொண்டு, உடலையும், மனதையும், சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொண்டு இருந்தால், எல்லோருக்குமே சுகமான சுலபமான சுகப்பிரசவம் நடக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

-தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com