சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வந்த்(23). பி.எஸ்சி பிலிம் டெக்னாலஜி படித்துள்ள இவர். சினிமாத்துறையில் உதவி இயக்குநராகப் பயிற்சி பெற்றுக் குறும்படங்களை இயக்கும் முயற்சியில் இறங்கினார். சரிவர சினிமாவில் வாய்ப்பு அமையவில்லை. சிறு வயதில் இருந்தே அடுத்தவர்களுக்குச் சாப்பாடு கொடுத்து சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவானது. இதனையடுத்து தான் வசிக்கும் பெரம்பூர் பகுதியில் 15 ரூபாயில் மதிய சாப்பாடு வழங்கி வருகிறார்.
எப்படி இது சாத்தியமாகிறது அவரிடம் பேசினோம்:
""பிலிம் டெக்னாலஜி முடித்த பிறகு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதற்காகப் பல முயற்சிகளில் இறங்கினேன். ஆனால் வெற்றிகிடைக்கவில்லை. அப்போது தான் சாப்பாடு பிசினஸ் செய்யலாம் என்ற எண்ணம் வந்தது. 3 ஆண்டுகளுக்கு முன்னால் சினிமா பக்கம் செல்லக்கூடாது என முடிவெடுத்து தான் உணவுத்துறையில் இறங்கினேன். அப்போது இஸ்லாமியர்கள் வீட்டில் நடக்கும் கல்யாணத்தில் தயாராகும் பிரியாணி சென்னையிலுள்ள கடைகளில் கிடைக்காது. அதனைத் தயாரித்துச் சென்னை முழுவதும் விநியோகம் செய்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆனால் வியாபாரம் முன்னேற்றம் அடையும் நேரத்தில் பொதுமுடக்கம் வந்தது. வாங்கிய அரிசி, சமையல் பொருள்களை வீணாக்கக்கூடாது என்று நினைத்து அதனை உணவாகத் தயாரித்து இலவசமாக வழங்கினேன். இப்போது நிலைமை சீராக, பெரம்பூர் ராகவன் தெருவில் திங்கள் முதல் சனி வரை குறைந்த விலையில் மதிய சாப்பாடு கொடுக்கிறேன்.
பணம் இல்லாதவர்கள் இலவசமாகச் சாப்பிட்டுச் செல்லலாம். சொந்த தொழில் மூலம் கணிசமாக அளவு வருமானம் கிடைக்கிறது. படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்கள் சொந்த தொழிலில் செய்து வெற்றியடைந்து விட்டால் போதும். வாழ்க்கை மாறிவிடும்.
இன்று என்னுடைய குடும்பத்தில் இருப்பவர்களே என்னை வியப்பாகப் பார்க்கிறார்கள். நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறேன். நான் சினிமாவில் பிரபலமாகி கிடைக்கும் வருமானத்தை விட, என்னுடைய உழைப்பில் கிடைக்கும் வருமானமே திருப்தியை தருகிறது'' என்கிறார் அஸ்வந்த்.