ஒவ்வொரு பெண்ணும் தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டு வெற்றி வாகையைச் சூடி வருகின்றனர். சிறுவயதிலேயே அசத்தும் பெண்களும் உண்டு. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கின்னா சுவாதி என்ற கல்லூரி மாணவி குத்துச்சண்டைப் போட்டியில் தங்க மங்கையாகத் தடம் பதித்து வருகிறார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர்களது குடும்பம் புதுக்கோட்டைக்கு வந்துவிட்டது.
இவர் தொடக்கக் கல்வி அரசுப் பள்ளியில் படித்தார். ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை, சாதனையாளர்களை உருவாக்கிய இராணியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் இவர் சேர்ந்தார். தற்போது, கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை, அறிவியல் மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறையில் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
குத்துச்சண்டை பிரிவான 46 முதல் 48 கிலோ எடை பிரிவில் சாதனைகள் புரிந்துவருகிறார். மாநில, மாவட்ட அளவில் பல்வேறு பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார். தனியார் அமைப்புகள் நடத்தும் போட்டிகளிலும் பரிசுகளை வாங்கிக் குவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான பல்கலைக்கழகப் போட்டியில் பங்கேற்று, சீனியர் மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டியில் முதல் பரிசு, சிறந்த வீராங்கனை விருதுகளையும் பெற்றார்.
சாதனைகள் குறித்து இவர் கூறியதாவது:
பல இடங்களில் தோல்வியைத் தழுவ நேரிடலாம். ஆனால் அதற்காக போட்டியில் கலந்து கொள்வதற்கு நான் பின் வாங்கியது கிடையாது. ஒவ்வொரு போட்டிகளிலும் கலந்துகொள்ள சென்று வருவதற்கு பயணச் செலவு அதிகமாகத்தான் உள்ளது. தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டுத்துறை மூலமாக ஊக்குவித்து , பயணச் செலவை ஏற்றுக் கொண்டால் இன்னும் அதிகமான போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றார்.