கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்து கொண்டு தொழில் ஆரம்பித்து 4300 வாகனங்களுக்கு சொந்தக்காரராக மாறிய ஒரு மிகப்பெரும் தொழிலதிபரின் அசாதாரணமான வாழ்க்கைதான் "விஜயானந்த்'. பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 9-ஆம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகள் வெளியாகவுள்ளது.
வணிக ரீதியிலான சாலை போக்குவரத்து வாகனத்தை இயக்கும் தொழிலில், இந்திய அளவில் முன்னணி நிறுவனமான வி. ஆர். எல். எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கியுள்ள இதில், விஜய் சங்கேஸ்வர் கதாபாத்திரத்தில் நிஹால் நடிக்கிறார். ஆனந்த் நாக், ரவிச்சந்திரன், பாரத் பொப்பண்ணா, பிரகாஷ் பெலவாடி, ஸ்ரீ பிரகலாத், வினயா பிரசாத், அர்ச்சனா, அனிஷ் குருவில்லா உள்ளிட்டோர் பிற கதாபாத்திரங்களை ஏற்கின்றனர்.
கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லரை கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ளார். இதில் அவர் பேசும் போது... ""விஜய் சங்கேஸ்வர் இதுவரை நடத்திய அனைத்து தொழில்களுமே லாபகரமான ஒன்றாக இருந்து இருக்கிறது. முடியாததை முடிப்பது தான் அவரது பாணி. அவர் எதை தொட்டாலும் வெற்றிதான். இந்த சுயசரிதை படம் பல மொழிகளில் வெளியாவது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்'' என்றார்.