""கர்ப்பக் காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் இளம்தாய்மார்களின் மன, உடல் ஆரோக்கியம் காப்பது முக்கியம்'' என்கிறார் சென்னை அப்போலோ கிராடில் அண்ட் சில்ரன்ஸ் ஹாஸ்பிடலின் மகப்பேறு, மகளிரியல் மருத்துவ நிபுணர் சௌம்யா ராகவன்.
அவரிடம் ஓர் சந்திப்பு:
பெண்களுக்கான கர்ப்பக் காலம் குறித்து...?
கருத்தரிப்பு என்பது மிக அழகான காலம். அதற்குரிய சவால்களும் உண்டு. இளம் தாயின் மனம் - உடலில் ஏற்படும் மாற்றங்கள் முற்றிலும் புதியவையோ எதிர்பார்க்கப்படாதவையோ அல்ல. கர்ப்பம், பிரசவம், குழந்தையை கவனித்துக் கொள்வது ஆகியன சார்ந்து இளம் தாயின் உடல் - மனதுக்கு ஏற்படும் சிக்கல்கள் பொதுவாக அறியப்பட்டவைதான்.
ஓர் ஆய்வின்படி, இளம்தாய்மார்கள் தங்கள் உடல்நலம், நல்வாழ்வுக்கு மிகக் குறைந்த முக்கியத்துவமே தருகிறார்கள். ஏனெனில் அவர்கள் பல்வேறு பட்டபணிகளைச் செய்ய வேண்டியுள்ளது.
இளம்தாய்மார்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். பிரசவத்துக்குப் பிந்தைய ஹார்மோன் மாற்றங்கள், தூக்கமின்மை, உடலில் ஏற்படும் மாற்றங்கள், போதுமான தாய்ப்பால் அளவு பற்றிய கவலை - பிரசவத்துக்குப் பிந்தைய மன அழுத்தம், மனச்சோர்வு.
தொடர்ச்சியான நெருக்கடிகள், சவால்கள் போன்றவை இளம் தாயின் பயணத்தை கடினமாக்கும். அத்துடன் ஒருவரின் மன - உடல் ஆரோக்கியத்தை மோசமாகப் பாதிக்கும்.
உடல், மன நலத்தைப் பாதுகாக்கச் செய்ய வேண்டியவை என்ன?
நல்ல ஓய்வு: இளம் தாய்க்கு எப்போதும் ஏதாவது ஒரு வேலையிருந்து கொண்டேயிருக்கும். இருப்பினும், கர்ப்பம் -பிரசவத்தின்போது உடல் நிறைய பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்வது அவசியம். கர்ப்பம், பிரசவத்தின் சிக்கலான மாற்றங்களிலிருந்து மீள்வதற்கு ஓய்வு - கவனிப்பு தேவை. ஓர் இளம் தாய் பழைய நிலைக்குத் திரும்ப ஓய்வு மிக முக்கியமான தேவை.
சத்தான உணவை உட்கொள்ளுதல்: பிரசவத்தின் மூலம் ஒருவர் இழந்திருக்கக்கூடிய வலிமை, சகிப்புத்தன்மையை மீண்டும் பெற இளம் தாய்மார்கள் நன்றாக சாப்பிட வேண்டும். உணவு ஆரோக்கியமானதாகவும், சத்தானதாகவும், புதியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும், தாய் ஆரோக்கியமான உணவையே உள்கொள்ள வேண்டும். ஏனெனில் குழந்தை முற்றிலும் தாய்ப்பாலை மட்டுமே நம்பியுள்ளது. ப ôலூட்டும் தாய்மார்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளகொள்ள வேண்டும்.
அத்துடன் எந்த வகை உணவை அவர்கள் உட்கொள்கிறார்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் சர்க்கரை நிறைந்த பானங்கள், ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.
சுறுசுறுப்பாக இருத்தல்: கர்ப்ப காலம், அதற்குப் பிந்தைய காலத்தில் ஓய்வு முக்கியமானது. ஆனால் அதற்காக ஒருவர் உட்கார்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. இளம் தாய்மார்கள் உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதும், நடைபயிற்சி, தோட்டம் அமைத்தல் அல்லது உடல்ரீதியாக அதிகக் கடினமில்லாத அன்றாடப் பணிகளைச் செய்வது போன்ற எளிய செயல்களில் ஈடுபடுத்திக்கொள்வதும் முக்கியம். இது அவர்களுக்கு உடல் - மனநலப் பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.
நல்ல தூக்கம்: இளம் தாய்மார்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணிகளில் தூக்கமும் ஒன்று. கர்ப்ப காலத்தில் தூக்கத் தொந்தரவு அதிகமாக இருக்கும். பிரசவத்திற்குப் பிறகு, புதிதாகப் பிறந்த குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதாலும் தூக்கம் பாதிக்கப்படும்.
ஏற்கெனவே இருக்கும் மோசமான உடல் ஆரோக்கியம், சோர்வுடன் தூக்கம் - ஓய்வு இல்லாதது சேர்ந்துவிடும்போது எரிச்சல், மன அழுத்தம் உருவாக வழிவகுக்கிறது, முறையான மருத்துவப் பரிசோதனை செய்தல்: குழந்தையின் பிறப்புக்குப் பிறகு இளம் தாயின் உடல் - மன அம்சங்கள் நிறைய மாறுகின்றன. மகப்பேறுக்கு பிறகான மன அழுத்தம், இளம்தாய்மார்களை பாதிக்கும் பிற மனநல நிலைமைகள் அக்கறையுடன் கவனிக்கப்பட வேண்டும். வழக்கமான மருத்துவர் சந்திப்பு, பரிசோதனைகள் சிக்கல்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க உதவும்.
மருத்துவ உதவியை நாடுவது ஆரோக்கியமான, பயனுள்ள வழிகளில் பிரச்னைகளைச் சமாளிக்க உதவும். இளம்தாயும் அவரது குடும்பத்தினரும் உடல் - மன மாற்றங்கள் நிகழும் என்பதைப் பற்றி விழிப்புணர்வுடன் வேண்டும்.
இந்தக் கட்டத்தில் குடும்பத்தினரும் நண்பர்களும் மிகவும் ஆதரவாக இருக்க வேண்டும். இளம்தாய்மார்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை விரைவில் உணர்ந்து கொண்டு, உரிய மருத்துவ உதவியை நாட வேண்டும்.