"இளம்தலைமுறையினர் நாட்டுப்பற்றுடன் இருக்க வேண்டும்' என்கிறார் தியாகி லோகநாதன்.
ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட ஆற்காட்டைச் சேர்ந்த அவர், மைசூரில் பிறந்தார். அவர் தனது பெற்றோர் சுந்தரம்- சாவித்திரி ஆகியோருடன் இளம்வயதில் ஆற்காட்டுக்கு வந்து குடியேறினார்.
1941-ஆம் தனிநபர் சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். சென்னையில் ம.பொ. சிவஞானத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு, 2 மாதம் சிறையில் இருந்தார். ஆற்காட்டில் தியாகி ஜானகிராமன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், அந்நிய துணி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்றார். "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்று, 1942-இல் வேலூர் ராணுவ முகாம், தபால் நிலையம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கிலும் லோகநாதன் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு பல போராட்டங்களில் ஈடுபட்ட லோகநாதன் தற்போது சொந்த ஊரில் இருந்து, தனது பகுதி இளைஞர்கள், மாணவர்களுக்கு சுதந்திர வேட்கையைப் புகட்டி வருகிறார்.
அவரிடம் பேசியபோது:
""சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டு நிறைவு பெறுகிறது. இந்த நேரத்தில், பெற்ற சுதந்திரத்தைப் பேணி காக்கும் வகையில், இளைஞர்கள் நாட்டுப் பற்றுடன் இருக்க வேண்டும். காந்தி, நேதாஜி போன்ற தலைவர்கள் வழியில், அவர்கள் எடுத்துரைத்த கருத்துகளை இளைய தலைமுறையினர் பின்பற்றி, நாட்டின் முன்னேற்றத்துக்குப் பாடுபட வேண்டும்'' என்றார்.