கோபுரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ரங்கோலி'. ஹமரேஷ், பிரார்த்தனா, சாய் , அக்ஷயா, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் வாலி மோகன் தாஸ். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... "" ஏக்கம், கனவு, ஆசை, பொறாமை, வன்மம், ஈகோ, மன்னிப்பு, காதல், தண்டனை என எதுவும் இல்லாத இதயங்கள் சிறுவர்களுக்கானது. உண்மையில் பரிசுத்தங்கள். இல்லாத போது ஏங்குவதும், இருக்கிற போது ஆடுவதுமான மன நிலை அவர்களுக்கு இருப்பதில்லை. எப்போதும் ஒரே மன நிலைதான். குழந்தையாக வந்து குழந்தையாகி போகும் இந்த வாழ்க்கையில், எல்லோரும் மீண்டும் குழந்தையாகி விடுகிற தருணத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் உலக இலக்கியங்களும், சினிமாக்களும், கதைகளும் குழந்தைகளை பற்றியே பேசி விடுகின்றன.
ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் குழந்தைதான் மனித இனத்தின் பேரழகு. அதுதான் இந்தக் கதையின் ஊடாக வெளிப்படும். முழுக்க முழுக்க சிறுவர்களுக்கான உலகத்தை படம் பிடித்திருக்கிறேன் என்றார் இயக்குநர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், வெங்கட் பிரபு, , இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், நடிகை வாணி போஜன், ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். விரைவில் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது.