மனித வாழ்க்கையின் தரிசனம்!

சொந்த ஊர் திருச்சி.  சினிமாவின் மீது அதீத காதல். இளவயதில் அப்பாவோடு கைகோர்த்துக் கொண்டு நடக்கும் போது அவர் சொல்லும் சம்பவங்கள் எல்லாம் எனக்குள் திரைக்கதையாகி ஓடிக் கொண்டிருக்கும்.
மனித வாழ்க்கையின் தரிசனம்!

சொந்த ஊர் திருச்சி. சினிமாவின் மீது அதீத காதல். இளவயதில் அப்பாவோடு கைகோர்த்துக் கொண்டு நடக்கும் போது அவர் சொல்லும் சம்பவங்கள் எல்லாம் எனக்குள் திரைக்கதையாகி ஓடிக் கொண்டிருக்கும். எனக்குள் ஊற்றெடுத்துக் கொண்டிருந்த கதைகளை கோடம்பாக்கத்தில்தான் முழுமைப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு சினிமாவுக்கு வந்தேன். இயக்குநர் பாண்டிராஜ் சார்தான் நமக்கு குரு. கொஞ்சம் குறும்பட அனுபவம். இதுதான் நம் சினிமா பயணம். அனுபவங்கள்தான் இங்கே கொண்டு வந்து சேர்த்தது. அனைத்து நல் வாய்ப்புகளுக்கும் நன்றி. உள்ளார்ந்து பேசுகிறார் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ். இவர் இயக்கியுள்ள "விலங்கு' ஜீ 5 ஓடிடி தளத்தில் வரும் 18-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

போலீஸ் பின்புலம்..... விலங்கு... குறியீடுகள் நிறைந்த களமா?

படத்தின் தலைப்பு, கதையோடு தொடர்புடையது... இப்போதைக்கு இதை மட்டும்தான் சொல்ல முடியும். கதைக்கான புள்ளி சிறு சிறு பயணங்கள்தான். அப்போது நான் பார்த்தது, கேட்டது எல்லாவற்றையுமே காட்சிகளாக செய்து முடித்திருக்கிறேன். வாழ்க்கையின் எந்தப் பக்கத்தைத் திறந்து பார்த்தாலும் அதில் ஆச்சரியங்கள் நிறைந்து இறைந்து கிடக்கிறது.

அப்படித்தான் இது. பெரிய திட்டமிடல் இருந்தது. ஈரமான மனசுகள் நாம் எதிர்பார்க்காத இடங்களில் இருக்கிறது. எங்கே கிரிமினல்கள் உருவாகி வருகிறார்கள் என்று தேடினால், உங்களுக்குக் கிடைப்பது எதிர்பாராத திருப்பங்கள். உங்களின் சந்தோஷத்திற்கும், நிறைந்த எதிர்பார்ப்பிற்கும் நிச்சயம் கேரண்டி. நானே ரசிக மனப்பான்மையில் படத்தைப் பார்த்து விட்டு சொல்கிறேன். மனித மனம் காட்டை மறந்து, வீட்டின் சூழலுக்குப் பழக்கப்பட்ட மிருகம் போல எப்போதும் ஒரு நிர்பந்தத்துக்குக் கட்டுப்பட்டது. மிருகம் மிருகமாக இருக்க இயலாமல் தடுப்பது மிருகத்தின் கோணத்தில் பெருந்துக்கம்.

எங்கேயாவது ஒரு மரத்தடியில் அமர்ந்து , உள் இழுத்து முழுவதுமாக புதைந்து போயிருந்த நினைவுகளை எல்லாம் தூர்வாரி வெளியே இழுத்துப்போட்டால் எப்படி இருக்கும். அப்படி ஒரு தாக்கத்தில் எழுந்த உணர்வுதான் படம். பரவசம் கொடுக்கும் பயணம், எளியவர்களின் எதிர்பார்ப்பு இல்லாத பிரியம்... இப்படித்தான் இருக்கும் இது.

இது சில சாமானிய போலீஸ் அதிகாரியின் கதை. இது ஒரே ஒரு போலீஸ் அதிகாரியின் கதையும் கிடையாது. நான் பார்த்த, கேட்ட, படித்த நிறைய விஷயங்களின் தொகுப்பு. நிச்சயம் "சிங்கம்', "சாமி' படங்கள் மாதிரி கிடையாது. அந்த இடத்திற்கு வர எனக்கு நாள் பிடிக்கும். இது மனித வாழ்க்கையின் தரிசனம். கதை அனுமதிக்கிற, பொருந்துகிற அளவுக்குத்தான் எல்லாம். மனித உணர்வுகளை உள்ளடக்கிய பயணம்.

கதை என்ன?

கேரளக் காவல் துறையில் பல ஆண்டுகள் போலீஸ் வேலை பார்த்த ராமச்சந்திர நாயர் என்பவர் எழுதிய நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி என்ற புத்தகம். அப்படி இருக்கும்... புரட்சியாளன் நர்கீûஸ, மேலதிகாரிகளின் குரூரமான வற்புறுத்ததலால் தனது கையால் சுட்டுக் கொன்றதில் இருந்து, பொது மக்களிடம் இருந்து எவ்வளவு விலகி நிற்கிறான், அதிகார மையங்கள் அவனை எப்படியெல்லாம் கேவலமாக பயன்படுத்திக் கொள்கின்றன என்பது வரை மிகத் தீவிரமாக எழுதப்பட்ட பதிவு அது. வெறுமென காக்கியோடு அண்ணா மேம்பாலத்தில் கால் கடுக்க நின்றிருக்கும் பெண் காவலர் ஒருவர், போலீஸ் வேலை கிடைத்த தருணத்தில் என்னென்ன நினைத்திருப்பார். போலீஸ்காரர்களில் அற்புதமானவர்களையும் பார்த்திருக்கலாம். ஆனால், இங்கே நிறைய பேருடைய மனிதத்தை அதிகாரமும், அரசியலும் தின்று விடுகின்றன. அரசியலும், சாதியும், பணமும் காவல் துறையை இயக்கிக் கொண்டு இருக்கிற வரை உன்னதமான பாதுகாப்பை நம்மால் உணரவே முடியாது. பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதாஎன்பதே விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.

தமிழ் சினிமாவில் காவல் துறையை விமர்சிக்கும் படமா இது ....

ரத்தம் வழிய வழிய.. நான்கு பேர் அடித்துக் கொள்ளும் போது ஒதுங்கி ஒளியும் போலீஸ்காரர்கள் எப்படி உருவாகிறார்கள். சாலைகளிலும் கடைகளிலும் அனுதினம் பார்க்க நேரிடும் போலீஸ்காரர்களைக் கேவலமாக திட்டும் நமக்கு, பெரும் அரசியல் பேரங்களிலும் கலவரங்களிலும் கொலைகளிலும் பங்கு போட்டு நடத்தும் காவல் அதிகாரிகளை தெரிவதே இல்லை. ஒரு குற்றம்தான் இந்த கதையின் பிரதானம். குற்றத்தின் உருவாக்கம் தொடங்கி, அதன் சம்பவங்கள் வரை எல்லாமே இதில் இருக்கும். போலீஸ் கதைகளில் 100க்கு 80 சதவீதம் வெற்றி அடைந்திருக்கிறது. . அதை ரிப்பீட் செய்ததில் சில படங்கள் தோற்றிருக்கலாம். திரைக்கதை எழுதும் போதே, சேகரித்த கதைகளே எக்கச்சக்கம் இருக்கும். நானே போலீஸ் ஸ்டோரியில் புதிதாக பத்துக் கதை இயக்க முடியும். ஒரு ஆளை நாம் சந்திக்க மட்டும்தான் செய்வோம். போலீஸ் அந்த ஆளை ஊடுருவிப் பார்க்கும். கண்காணிக்கும். விட்டுட்டு வேடிக்கை பார்க்கும். விட்டுத்தான் பிடிக்கும். நீங்கள் போலீஸில் நல்லவரையும், கெட்டவரையும் பார்த்திருக்கலாம். இது அப்படி இரண்டு பக்கமும் இருக்கிறது. இங்கு எல்லோருமே மிருகங்கள்.

விமல் - இனியா இருவரும் ஏற்கெனவே ஹிட் கொடுத்த கூட்டணி....

ஆமாம். "வாகை சூட வா' படத்துக்குப் பின் நம் படத்தில்தான் இணைந்திருக்கிறார்கள். விமலுக்கென தனி சினிமாக்கள் இங்கே உண்டு. அதை விட அவரிடம் எந்தப் பிரச்னையும் இல்லை. கதையைக் கேட்டதும் சம்மதம் சொல்லி விட்டார். கதை கூடவே பயணிக்கிற மாதிரி ஒரு இடம் அவருக்கு. காதல், அன்பு, நேசம், பாசம் எல்லாம் வேலை செய்கிற இடத்தில் கிடைத்தால் எப்படியிருக்கும். அப்படி ஒரு விதமாக கதை இருக்கும். படத்தில் அவருக்கு அருமையான ரோல். முதன் முறையாக போலீஸ் ரோல். நடித்துக் கொண்டு இருக்கும் போதே அவர் அதை உணர்ந்ததுதான் விசேஷம்.

எனக்கு தமிழ் பேச தெரிந்த, நான் சொல்லுவதை புரிந்துக் கொள்ள தெரிந்த நடிகை தேவை. அந்த இடத்துக்கு இனியா வந்து சேர்ந்தார். நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி, ஆர்.என். மனோகர் இப்படி காட்சி எங்கிலும் நல்ல கதா பாத்திரங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com