அப்துல்கலாம் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். அவர் பேசும் பேச்சுக்கள் பத்திரிகையில் வந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக அவர் பள்ளி மாணவர்களிடம் பேசுவது மிகவும் பிரபலமானது. ஒரு முறை சென்னை பள்ளி ஒன்றிற்கு வருகை தந்தார். அப்போது எனக்கு சென்னை மாநகரத்தில் பணி என்பதால் அந்த விழாவில் கலந்து கொள்வது எனது கடமையாகவும் இருந்தது.
அவரது பேச்சைக் கேட்க ஆர்வம் கொண்டு அவரது பேச்சைக் கவனித்தேன். மாணவர்களிடம் அவர் நடத்திய உரையாடல் மிகவும் விசித்திரமாக இருந்தது.
இந்திய நாட்டின் மிக மோசமான மூன்று எதிரிகள் யார் என்பது அவரது முதல் கேள்வி.
இந்த கேள்விக்கு மாணவர்கள் பாகிஸ்தான், சீனா என்றும் இன்னும் சிலர் இலங்கை என்றும் பதில் அளித்தார்கள். சிலர் அமெரிக்கா, பங்களாதேஷ் என்றும் கூட சொன்னார்கள். அதை எல்லாம் பொறுமையாக கேட்ட அவர் நமது முக்கிய மூன்று எதிரிகள்:
1.ஏழ்மை
2. படிப்பறிவின்மை
3.வேலையில்லாத் திண்டாட்டம் என்று கூறினார்.
எனக்கு வியப்பாக இருந்தது.
("உலக உத்தமர் கலாம்' நூலில் காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு எழுதியது)