சினிமா அவ்வளவு ஈஸி இல்லை!

""சினிமாவில் எனக்கு என்று ஒரு வேகம் வைத்து ஓடிக் கொண்டிருக்கிறேன்.  அவ்வப்போது நடிக்கிற படங்களைப் பற்றி மட்டும்தான் மனதில் நினைப்பு ஓடிக் கொண்டிருக்கும்.
சினிமா அவ்வளவு ஈஸி இல்லை!

"சினிமாவில் எனக்கு என்று ஒரு வேகம் வைத்து ஓடிக் கொண்டிருக்கிறேன். அவ்வப்போது நடிக்கிற படங்களைப் பற்றி மட்டும்தான் மனதில் நினைப்பு ஓடிக் கொண்டிருக்கும். அதுவும் இந்த வருடம் ரொம்பவே ஸ்பெஷல். "டி பிளாக்', "தேஜாவு', அடுத்து வருகிற "டைரி' வரை எல்லாமே ஸ்பெஷல். இது சந்தோஷம் என்றாலும், எனக்கு பொறுப்பு ஜாஸ்தியாகி இருக்கிறது என்று தோன்றுகிறது. இனி என் படங்களைப் பற்றி நானே பேசாமல், ரசிகர்களை பேச வைக்க வேண்டும்'' - குறுகுறு கண்களும் கிடா மீசை சிரிப்புமாக அருள்நிதியிடம் பேசும்போதே நமக்கும் உற்சாகம் ஒட்டிக்கொள்கிறது.

அடுத்தடுத்து மூன்று படங்கள் ரிலீஸ்....

அருமையான பயணம் இது. பரவசமும் இருக்கிறது. அதே சமயம் பயம். தாத்தாவுக்கு (கருணாநிதி) நான் சினிமாவுக்கு வருவேன் என்று தெரியாது. அப்பாவும் (மு.க.தமிழரசு) அப்படித்தான். படிப்பின் அருமை தெரிந்தவர்அப்பா. அப்போது அவருக்கு அதுதான் முக்கியமாக இருந்தது. பாண்டிராஜ் சாரை சந்தித்த நேரம்தான், மிகப் பெரும் திருப்பு முனை. "வம்சம்' மாதிரி ஒரு படத்துக்கு தயாராகி வருவேன் என யாருமே நம்பியிருக்க மாட்டார்கள். குறிப்பாக அது மாதிரியான எதிர்பார்ப்பை நான் ஒவ்வொரு படத்திலும் உணர்கிறேன். கடந்து வந்த அத்தனை படங்களிலும் என் அபரிமிதமான உழைப்பு இருக்கிறது. வெற்றி, தோல்வி என்பதெல்லாம் அடுத்தக் கட்டம். என் வேலையில் திருப்தி அடைந்திருக்கிறேன். அதுவே பெரும் நிறைவு. பிசிக்கல் ஸ்ட்ரெய்ன், மென்ட்டல் ஸ்ட்ரெஸ்... இது இரண்டுமே சேர்ந்ததுதான் ஒரு நடிகனின் வாழ்க்கை. தாத்தா, அப்பாவைப் பார்த்து வளர்ந்தவன். இதைத்தான் என் சினிமாக்களுக்கான எரிபொருளாக வைத்திருக்கிறேன். ஒரு நடிகன் தன் இமேஜை, இடத்தை தக்க வைத்தே தீர வேண்டும். இருபது, முப்பது வருடங்களாக ஒரு நடிகனை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிற ரசிகர்கள் திடீரென்று அவனை வெறுக்க ஆரம்பித்தால், அதற்கு முழுக் காரணமும் அந்த நடிகன்தானே தவிர, ரசிகர்கள் கிடையாது. இந்த உண்மையைத்தான் எப்போதும் மனதில் ஓட்டிப்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

புதுமுக இயக்குநர்களே உங்களின் தேர்வாக இருக்கிறார்கள்... பெரிய இயக்குநர், முன்னணி ஹீரோயின் என யோசனை இல்லையா....

ஒவ்வொரு இயக்குநரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு. ஒருவர் புதுப்புது டெக்னிக்கை சினிமாவில் கொண்டு வருவதில் வித்தை காட்டுவார். சிலர் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என பிடிவாதமாக இருப்பார்கள். இன்னும் சிலர் பி அண்ட் சி சென்டர் வரை இறங்கி அடிக்க வேண்டும் என இயங்குவார்கள். கதை என்பது தானாக நிகழ்வது. அது பிடித்தால் அதில் நான் இருப்பேன். எதையும் உணர்தல் மூலமாக பெற வேண்டும் என நினைக்கிறேன். இப்போது "டைரி' படம் பார்த்தவர்களுக்கு அத்தனை பரவசம். ஒரு சினிமா தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் மனதில் நிற்க வேண்டும். அதை எங்கள் உழைப்பு ரசிகர்களுக்கு கொடுத்திருப்பாதாக உணர்கிறேன். ஒரு சினிமா பார்வையாளருக்கு அப்படி ஏதோ ஒன்றைக் கடத்த வேண்டும். நல்ல சினிமாக்கள் பற்றி நிறைய கனவுகள் எனக்குள் இருக்கிறது. அடுத்தடுத்து அது நிகழும்.

பத்து வருடத்துக்கு மேலான சினிமா பயணம்.... 15 படங்கள்... இந்த வேகம் போதுமா...

எல்லா ஹீரோக்களுக்கும் வருஷத்துக்கு மூன்று படங்கள் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும். ஆனால் நடிக்கிற படங்கள் அப்படி சின்ன சின்னச் இடைவெளியில் முடியாததாக இருக்கிறது. காடு மேடெல்லாம் சுற்றி, கிராமத்து மண்ணில் திரிந்த முதல் படம் முதல், மழை, வெயில் பார்க்காமல் அலைந்த "மௌனகுரு' படம் வரை எல்லாவற்றுக்கும் பெரும் உழைப்பு இருக்கிறது. அதை விட ஒவ்வொரு படத்துக்கு ரிகர்சல் அதிகம் எடுத்துக் கொள்வேன். அரசியல், சினிமா என்கிற அடையாளம் எப்போதுமே முன் நிற்பதால், நடிப்புக்கு அதிகம் கவனம் செலுத்துகிறேன். எந்த இடத்திலும் சறுக்கி விடக் கூடாது என்பதில் நிதானம் வைக்கிறேன். அதனாலேயே அடுத்தடுத்து படங்களை ஒப்புக் கொள்ள முடியவில்லை. இப்போது நான் ஓட வேண்டிய நேரம் வந்து விட்டது. அடுத்து கமர்ஷியல் பேக்கேஜ், நல்ல கதை என ஒரு திட்டம் உண்டு.

இதில் ஒவ்வொன்றும் முந்தைய படங்களுக்கு சம்பந்தமே இல்லாத படங்கள். எல்லாமே நன்றாக வர வேண்டும்..


"வம்சம்' தொடங்கி இப்போது வரை சினிமா பற்றிய உங்கள் ஐடியா எந்த அளவுக்கு மாறி வந்திருக்கிறது...?

சினிமா அவ்வளவு ஈஸி இல்லையென்று உணர்ந்திருக்கிறேன். இணையதளம், விமர்சனங்கள், பைரசி என சினிமாவுக்கு எதிரிகள் இருக்கும் பட்சத்தில், ஆதரிப்பவர்கள் யாருமே இல்லை. இதுதான் இன்றைய சினிமாவின் பெரும் சோகம். ஒரு கதை இருந்தால், அதற்கான கேரக்டர் தானாகவே விரிவடைந்து வரும் என ஆரம்பத்தில் நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், சுவாரஸ்யமான, சவாலான ஒரு கதாபாத்திரம் இருந்தால், அதைச் சுற்றி பிரமாதமான கதை பிடித்து விடலாம் என இப்போது தெரிந்து கொண்டேன். சினிமா பார்க்கிற ரசிகர்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே இருக்கிறது. அவர்களின் ரசனைக்கு வேறு மாதிரியாகி விட்டது. அதனால் ரசிகர்களின் ரசனை ஏற்ற மாதிரி படம் கொடுக்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. இது மட்டும்தான் சினிமாவில் இருக்கிற ஆரோக்கியமான விஷயம். நல்ல கதை இருந்தால், ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் உண்டு என சினிமா மாறி வந்திருப்பது
சந்தோஷம்.

சம கால ஹீரோக்களில் உங்களுக்கு யாரை பிடிக்கும்...

ஒவ்வொரு ஹீரோவும் ஒவ்வொரு மாதிரி ஸ்டைலில் மிரட்டுகிறார்கள். என்னைப் பொருத்தவரை எல்லோருமே பெஸ்ட்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com