ரஜினி, குஷ்பூ, சுஹாசினி உள்ளிட்ட திரை பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் சாய்பாபு. இவர் தற்போது ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டீஸ்வரி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வரும் படம் 'மாயத்திரை'.
எழில், பாலா ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சம்பத்குமார் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
அசோக்குமார், சாந்தினி தமிழரசன், ஷீலா ராஜ்குமார், காதல் சுகுமார், காதல் சரவணன், பாவா லட்சுமணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் பேசும்போது.... ""23 வருடங்களுக்கு முன்பு நாகர்கோவில் பகுதியில் இருந்த ஒரு திரையரங்கில் தீ விபத்து ஏற்பட்டு 23 பேர் பலி என்ற செய்தியைத் தழுவி இந்தத் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்தப்படம் வழக்கமான ஹாரர் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இதுவரை வந்த ஹாரர் படங்களில் பேய் பழிவாங்கும். இந்தப் படத்தில் பேய் பழிவாங்காது.. மன்னிப்பு என்பது மனித குலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல.. ஒரு பேயிடம் அது இருக்கிறதென சொல்லியிருக்கிறேன்.
ஒன்றல்ல, இரண்டல்ல 26 பேய்கள் இந்தப்படத்தில் இருக்கின்றன. சினிமாவில் இதுவரை திரைத்துறை சம்பந்தமான கதாபாத்திரங்கள் பல இடம் பெற்றிருந்தாலும் சவுண்ட் இன்ஜினியர் கதாபாத்திரம் இப்போதுதான் முதன்முறையாக இடம் பெற்றுள்ளது. புளியங்குடி அருகே இருந்த ஒரு திரையரங்கை வடிவமைத்து படப்பிடிப்பு நடத்தினோம்.
திருநெல்வேலி, தென்காசி, புளியங்குடி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளன. வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்க வெளியீடாக வெளியாகவுள்ளது'' என்றார்.