சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து தனியாக வளர்ந்த நிலையில், 39 ஆண்டுகள் உடன் வாழ்ந்த மனைவியும் கரோனா தொற்றால் இறந்ததால் அவரது நினைவாக இருந்த கணவர் சிலை வைத்து வணங்குகிறார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் செதுக்கரையைச் சேர்ந்த சங்கரய்யா- மங்கம்மாள் தம்பதியின் மகன் சேட்டு (63). இவர் தனது சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார்.
உறவினர்கள் அரவணைப்பில் வளர்ந்த சேட்டு, தொழிலாளியாகப் பணிபுரிந்தார்.
1983-ஆம் ஆண்டில் பொன்னம்பட்டியைச் சேர்ந்த ராணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜீவிதா (38) என்ற மகளும், பிரபு (36) என்ற மகனும் உள்ளனர். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடத் தொடங்கி, செல்வந்தரானார் சேட்டு.
கடந்த ஆண்டு மே மாதத்தில் கரோனா தொற்றுக்கு ஆளான ராணி, சிகிச்சை பலனின்றி மே 25- இல் உயிரிழந்தார்.
ராணியின் சடலம் சடங்கு, சம்பிரதாயங்கள் எதுவும் செய்ய முடியாமல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்தது. இதையொட்டி, குஜராத் மாநிலத்தில் ரூ.2 லட்சத்தில் மார்பிள் கல்லால் மனைவியின் உருவச் சிலையை வடிவமைத்து எடுத்து வந்து அதை நிறுவி, அஞ்சலி செலுத்தினார். வீட்டில் தனி அறை அமைத்து, பூஜை நடத்தி வருகிறார்.