திருக்குறளில் தமிழ் மருத்துவம்!

தமிழ் இலக்கியங்களில் மிகப் பிரசத்தியும், புகழும் பெற்ற உலகப்பொதுமறையாம் திருக்குறளை போற்றி பின்பற்றக்கூடிய உலக மக்கள் பலர்.
திருக்குறளில் தமிழ் மருத்துவம்!

தமிழ் இலக்கியங்களில் மிகப் பிரசத்தியும், புகழும் பெற்ற உலகப்பொதுமறையாம் திருக்குறளை போற்றி பின்பற்றக்கூடிய உலக மக்கள் பலர். தமிழர்கள் மட்டுமல்லாது, உலக மக்களும் போற்றும் வகையில் உலகில் உள்ள தலையாய மொழிகள் பலவற்றில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது என்பது வியப்பிற்குரியது. அத்தகைய சிறப்பு மிக்க திருக்குறளில் 133 அதிகாரங்களில் 1330 குறள்களை இயற்றி உலகத்தாருக்கு தேவையான அனைத்து நெறிமுறைகளையும் வகுத்து, வாழ்வாங்கு வாழ்வதற்கு வழிவகை செய்துள்ளார் தெய்வப்புலவர் "திருவள்ளுவர்'. 

அந்த வகையில் நோய்கள் உண்டாகும் விதத்தையும், நோய் இல்லாமல் வாழ்வதற்கும், நோய் வந்த பிறகு பின்பற்ற வேண்டிய மருத்துவ நெறிமுறைகளையும் அதில் தொகுத்து தமிழுக்கு மட்டுமல்லாமல் தமிழ் மருத்துவத்திற்கும் சிறந்த அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளது.

துரித உணவு பழக்கத்தால் மேற்கத்திய நாடுகளில் அதிகம் காணப்படும் மலச்சிக்கல் நோய், இன்று நம் நாட்டிலும் அதிகமாகிவிட்டது. அத்தகைய மலச்சிக்கலால் அதிகரிக்கும் வாயுவால் பல்வேறு நோய்களும் வந்து சேரும் என்பதை "வாதமலாது மேனி கெடாது' என்று சித்த மருத்துவமும் அறிவுறுத்துகின்றது. 

இதற்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து கொடுக்கும் வழக்கமும் மருத்துவ முறையாக உள்ளது.

திருக்குறள் தனது பொருட்பாலில், நட்பியலில், மருந்து எனும் அதிகாரத்தில் "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்' என்ற 942-ஆவது குறளில் மேற்கூறிய கருத்தை பதிவு செய்து இன்றைய நவீன நாகரிக வாழ்வியலில் துரித உணவு வகைகளை உட்கொண்டு நோயில் சிக்கி தவிப்போருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழிகாட்டி இருப்பது ஆச்சர்யத்திற்குரியது.

 அதாவது உணவு உட்கொண்டு பின் ஜீரண மண்டலத்தில் உள்ள பல்வேறு செரிக்கும் நொதிகளால் ஜீரணித்து உடலுக்கு தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு மீதமுள்ள சக்கை வெளியேற்றப்படுகிறது. அத்தகைய சக்கையை வெளியேற்ற முடியாமல் மலச்சிக்கலில் தவிக்கும் பலருக்கும் பல்வேறு வியாதி வந்து சேரும் என்பது இதன் பொருள். "பசித்த பின் புசி' என்ற தமிழ் பழமொழியை பின்பற்றினால் நோயற்ற வாழ்வு வாழ வழி வகை செய்யும்.

நோய்க்கான காரணத்தை கண்டறிய பல்வேறு பரிசோதனை முறைகள் இன்றைய நாளில் அவசியமாகியுள்ளது. எந்தவித அறிவியல் வளர்ச்சியும் இல்லாத போதே, நோய்களுக்கான காரணத்தை திருக்குறள் தனது 941-ஆவது குறளில் "மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று' என கூறியுள்ளது. இது தமிழ் மருத்துவத்தை மட்டுமல்ல இன்றைய நவீன மருத்துவத்தையும் இரண்டு வரிகளில் அடக்கிவிட்டது. வாதம், பித்தம், கபம் இவை மூன்றும் தான் சித்த மருத்துவத்தில் நோய்க்கான முதன்மை காரணம். 

இவற்றில் வாதம், பித்தம், கபம் இவை அதிகமாதல் அல்லது குறைதல் போன்ற மாற்றங்களால் நோயை உண்டாக்கும். உதாரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவோ, ஹார்மோன் அளவோ கூடினாலும், குறைந்தாலும் நோய் தான் என்பதை இக்குறள் தெளிவாக விளக்குவது, அறிவியலை விஞ்சும் வண்ணம் உள்ளது. புலவர் பெருமக்கள் நூல்களை இயற்றுதலோடு நில்லாமல், அக்காலத்தில் நோய்களை நீக்கும் மருத்துவராகவும் இருந்திருப்பதற்கு இது மிகப்பெரிய சான்று.

இவ்வாறு நோயை வரும்முன் காத்துக்கொள்ளவும், உணவே மருந்தாக பயன்படுத்தவும் வலியுறுத்தியுள்ள வள்ளுவம், நோய் வந்த பின் தீர்க்க எவ்வாறு மருத்துவம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. "நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப செயல்' சென்று மருந்து அதிகாரத்தில் 948-ஆவது குறளில், நோய், நோய்க்கான காரணம், நோய் தீர்க்கும் வழி இவை என்ன? என்பதை முறையாக ஆராய்ந்து சிறப்பான சிகிச்சை அளிக்க வலியுறுத்துவது தமிழ் மருத்துவராய் வள்ளுவர் வாழ்ந்துள்ளதற்கு உதாரணம். "கழிபேர் இரையான்கண் நோய்' என்ற வரிகளில், இயற்கைக்கு மாறாக அதிக பசி எடுத்து அதிக உணவு உண்ணும் "புலிமியா' என்று 1980-களில் கண்டு உருவாக்கப்பட்ட வியாதியை பற்றி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் கூறியுள்ளது வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் உள்ளது. இதுவே பல்வேறு நோய் நிலைகளுக்கு காரணமாகும்.

தனி மனித ஆரோக்கியத்தை, உடல் நலனை, புறந்தூய்மை நீரால் அமையும் என்ற 298-ஆவது குறள் வரிகளில் குறிப்பிட்டு, மனத்திற்கு தூய்மை "வாய்மை' எனப்படும் ஒழுக்கத்தால் அமையும் என்று குறிப்பிட்டுள்ளதில் மிகப்பெரிய மருத்துவ உண்மை பொதிந்துள்ளது. உண்மையை பேசி உண்மையாக இருப்பவர்களிடம் இன்று பல்வேறு நோய்களுக்கு ஆதாரமாய் உள்ள ஸ்ட்ரெஸ் என்ற மன அழுத்தம் வந்து சேராது. பிற நோய்களும் வந்து சேராது . நாட்பட்ட மன அழுத்தம் பல்வேறு தொற்றா நோய்களான நீரிழிவு, இருதய நோய்கள், உடல் பருமன், பக்க வாதம் மட்டுமல்லாது நீரிழிவு நோயில் வரும் பல்வேறு பின் விளைவுகளுக்கும் காரணமாவது இன்றைய நவீன அறிவியல் கூறும் காரணம்.

"மாறுபாடில்லாத உண்டி மறுத்துண்ணின்' என்று கூறியுள்ளதில் தனக்கு ஒவ்வாத உணவை உண்ணாமல் தவிர்த்து, அவரவர் உடல் ஏற்றுக்கொள்ளும் உணவை மட்டும் உண்டாலே எந்த ஒரு நோய் நிலையும் ஏற்படாது என்பது விளங்கும். உண்ணும் உணவில் உள்ள ஒவ்வாமையால் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் எதிர்வினையால் பல்வேறு இம்யூன் சார்ந்த நோய்கள் ஏற்படும் என்று 945-ஆவது குறளில் தெரிவித்துள்ளார். இந்த நோய் எதிர்ப்பு மண்டலம் சார்ந்த நோய் நிலைகள் நம் நாட்டினரை விட, வெளி நாட்டினருக்கு மிகப்பெரும் சவால். ஏனெனில் திருவள்ளுவர் கூறும் தமிழ் மருத்துவ நெறியில் வாழும் நம் நாட்டினருக்கு பத்தியம் கடைபிடிப்பது என்பது புதிதல்ல.

உணவு, அதனால் ஏற்படும் நோயை பற்றிய கூறிய வள்ளுவர் நோயை தீர்க்க மருத்துவம் அவசியம் என்றும் கூறுகிறார். அத்தகைய சிறப்பான மருத்துவம் செய்வதற்கு "உற்றவன் தீர்ப்பான்' என்ற குறளில் நோயை உடையவன், நோயை தீர்க்கும் மருத்துவன், நோய்க்கு ஏற்ற மருந்து தயாரிப்பவன், அதை கொடுக்கும் மருந்தாளுநர் ஆகிய நால்வரின் பங்களிப்பும் அவசியம் என கூறுவது இன்றைய மருத்துவமனைகளுக்கு தமிழ் மருத்துவம் தந்த முன்னுதாரணம். 

சிரிப்பு சிகிச்சை "இடுக்கண் வருங்கால் நகுக' என்ற வள்ளுவத்தின் வரிகளில் இன்றைய பெருநகரங்களில் வாடிக்கையாகி உள்ள சிரிப்பு சிகிச்சையை மையப்படுத்தி கூறியுள்ளார். சிரிப்பு சிகிச்சை முறை உளவியல் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துவதை பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. மன அழுத்தம், மன சோம்பல் போன்ற நிலைகளில் இருந்து காத்து, மன ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும். சிரிப்பு சிகிச்சைக்கும் திருக்குறள் தந்த தமிழ் மருத்துவம் தான் ஆதாரம் என்பது இதில் விளங்கும். 

மேலும் ஜெனெடிக் நோய்கள் எனப்படும் மரபு வழி நோய்கள் பற்றியும், சைக்காட்ரிக் நோய்கள் எனப்படும் மன நோய்கள் பற்றியும், தீரா நோய்களான புற்று நோய், கிருமி நோய்கள் போன்ற பெருவியாதிகள் பற்றியும் திருக்குறளில் மறைபொருளாக சொல்லப்பட்டுள்ளது. இது திருக்குறள் தமிழ் மருத்துவ நூல் என்பதற்கு மிகப்பெரிய சான்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலான நூல்கள் மருந்துகளின் பெயரை கொண்டுள்ளதாக உள்ளது. ஏலாதி, திரிகடுகம், சிறுபஞ்ச மூலம் போன்ற நூல்கள் இதற்கு உதாரணம். இவை சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுபவை. அந்த தொகுப்பில் திருக்குறளும் இணைந்துள்ளதால், அதுவும் ஒரு தமிழ் மருத்துவ நூல் தான் என்று அறிய முடிகின்றது. நோயின்றி வாழவும், முதுமையை தவிர்க்கவும் அவர் கூறியுள்ள மருத்துவ கருத்துக்கள் சிறப்பு. 

இதனால் திருக்குறளில் இரண்டு அடிகளில், தமிழ் மொழியில் மருத்துவத்தை சுருங்க கூறி விளங்க வைத்துள்ளது தமிழ் மருத்துவத்திற்கு கிடைக்கும் ஆதாரம். ஆகவே வள்ளுவர் வழியில் நின்று திருக்குறளோடு தமிழ் மருத்துவத்தையும் பின்பற்ற துவங்கினால் ஆரோக்கியத்தை கூட்டி ஆயுளை நீட்ட முடியும் . திருக்குறள் தமிழுக்கு மட்டுமல்ல, தமிழ் மருத்துவத்திற்கும் கிடைத்த புதையல்.

அரசு சித்த மருத்துவர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com