ரத்தத்தின் ரத்தமே... - 65

ஒரு பொருள் பெருகுவதை, வளர்ச்சி அடைவதை, விரிவடைவதை, "விருத்தி' என்று சொல்வதுண்டு. வளர்ச்சி, செழிப்பு, செல்வம், வளமை, லாபம், யோகம், ஒழுக்கம், தொண்டு.. இவை எல்லாமே விருத்தியின் பல வடிவங்களே..!
ரத்தத்தின் ரத்தமே... - 65

ஒரு பொருள் பெருகுவதை, வளர்ச்சி அடைவதை, விரிவடைவதை, "விருத்தி' என்று சொல்வதுண்டு. வளர்ச்சி, செழிப்பு, செல்வம், வளமை, லாபம், யோகம், ஒழுக்கம், தொண்டு.. இவை எல்லாமே விருத்தியின் பல வடிவங்களே..!

ஆயுள் விருத்தி, இன விருத்தி, தன விருத்தி, புத்திர விருத்தி, வம்ச விருத்தி, தொழில் விருத்தி, சந்தான விருத்தி... இப்படி இடம், பொருளுக்கு ஏற்றபடி விருத்தியாதலை நாம் கையாளுவதுண்டு. இவைகளிலெல்லாம் சிறந்த விருத்தி "ரத்த விருத்தி' ஆகும்.

விஞ்ஞானம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து கொண்டு வரும் இந்த ரசாயனக் காலத்தில், முன்னோர்கள் வாழ்ந்த காலத்தைவிட சமீப காலத்திலுள்ள மக்களுக்கு ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.

உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகளும், உணவுப் பொருள்களும்தான் ரத்தத்தையும் கெடுத்துவிடுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு பக்கம் ரத்தத்தை சீரழிக்கும் உணவுப் பொருள்களைக் கண்டுபிடித்து அதை அறவே தவிர்க்க வேண்டும்.

ரத்தத்தை விருத்தி செய்ய உதவும் உணவுப் பொருள்கள் காய்கள், பழங்கள், கீரைகள், தானியங்களில் இருக்கின்றன.

ஒரு நாள் நல்ல சத்தான உணவுகளை சாப்பிடுவோம். வேறொரு நாள் வெறும் சத்தில்லாத சாதாரண உணவுகளைத் தான் சாப்பிடவேண்டிய சூழ்நிலை வரும். அதனால்தான் அந்தக் காலத்தில் வீட்டிலிருந்த பெரியவர்கள் எல்லா சத்துகளும் மாற்றி மாற்றி, தினமும் நமது உடலுக்குக் கிடைக்கிற மாதிரி, சரிவிகித சத்துணவு என்ற சூத்திரத்தை வைத்துக் கொண்டு, பல்வேறு விதமான உணவுகளை தயாரித்துக் கொடுத்தார்கள்.

இது குறைந்தால் அதைக் கொடுத்தால் சரியாகிவிடும், அது குறைந்தால் இதைக் கொடுத்தால் சரியாகிவிடும் என்று அனுபவப் பாடம் மூலமாகக் கற்றுக் கொண்டதை நடைமுறை வாழ்க்கையிலும் உபயோகித்தார்கள். ஆனால் இந்த கால மக்களுக்கு அனுபவப் பாடம் சுத்தமாகக் கிடைக்காமல் போய்விட்டது என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.

"ரத்த விருத்தி' என்பது ரத்தத்தில் எப்பொழுதும் இருக்க வேண்டிய ரத்த அணுக்கள், செல்கள், பிளாஸ்மா திரவம், இரும்புச்சத்து , ஹீமோகுளோபின், ஆக்ஸிஜன் போன்றவற்றின் அளவுகள் குறையாமல் தன்னிறைவுடன் வளமாக இருப்பதேயாகும்.

உடலில் ஒரு சாதாரண நோய் வந்துவிட்டுப் போனாலே, ரத்தத்திலுள்ள செல்கள், அணுக்கள் போன்றவற்றின் எண்ணிக்கை சுத்தமாகக் குறைந்துவிடுகிறது. சத்தான பல உணவுகளை நாம் பல மாதங்கள் சாப்பிட்டுத்தான் இதைச் சரி செய்ய வேண்டும். சாதாரண நோய்க்கே இந்தக் கதி என்றால், நாள்பட்ட மிகத் தீவிரமான கொடிய நோய்கள் நமது உடலில் வந்துவிட்டால், கடும்புயலில் மாட்டிய வாழை மரங்களின் கதிதான்.

ரத்தத்தில் ஏற்படும் குறைபாடுகளிலேயே மிகச் சாதாரணமாக, மிக அதிகமாக உலகமெங்கும் இருப்பது ரத்தச் சோகை என்பதுதான். உலகமெங்கும் உள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 25 சதவீதம் பேர், அதாவது சுமார் 160 கோடி மக்கள் ரத்தச் சோகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் சரியாக இயங்கி, அதனதன் வேலைகளை சரிவர செய்வதற்கு காற்றிலுள்ள ஆக்ஸிஜன்தான் மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது. சுவாசித்தல் மூலமாக காற்றிலுள்ள ஆக்ஸிஜன் நமது உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் போய்ச் சேர்கிறது. எனவே, உடலிலுள்ள ரத்தத்தின் அளவு குறைந்தாலும் சரி, ரத்தத்திலுள்ள செல்கள், அணுக்கள் போன்ற பொருள்களின் அளவு குறைந்தாலும் சரி ரத்தச் சோகை உண்டாகிவிடும்.

இந்தியாவைப் பொருத்தவரை இரும்புச் சத்து குறைபாட்டினால் உண்டாகும் ரத்தச் சோகையே மிக அதிகமாக இருக்கிறது. வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படும் ரத்தச் சோகை, இரும்புச் சத்து குறைபாட்டினால் ஏற்படும் ரத்தச் சோகை ஆகிய இரண்டும்தான் அதிகமாக பொதுமக்களிடம் இருக்கிறது. ஆண்களைவிட, பெண்கள்தான் இந்த நோயால் மிக அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

மயக்கம், உடற்சோர்வு, லேசான நெஞ்சுவலி, சீரற்ற இருதயத் துடிப்பு, லேசான மூச்சுத் திணறல், பசியின்மை, அடிக்கடி தலைவலி போன்ற சில அறிகுறிகள் ஒன்று மாற்றி மற்றொன்று வந்துபோகும்.

ரத்தச் சோகை (இரும்புச் சத்து குறைபாடு) அதிகமாக உள்ளவர்களில் சிலர் சாக்பீஸ், மண், அரிசி, சுண்ணாம்பு முதலிய பொருள்கள் சாப்பிட விரும்புவர். திராட்சைப் பழங்களில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கும். கறுப்பு திராட்சைப் பழத்தில், ஆந்தோசயனின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் பொருள் நிறைந்திருக்கிறது. பச்சை திராட்சைப் பழத்தில்கேட்டஸின் எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் பொருள் நிறைந்திருக்கிறது. திராட்சை விதையிலும், தோலிலும் உள்ள ஒரு வேதியியல் பொருள் இருதய நோய்கள், பக்க வாதம், நரம்புத் தளர்ச்சி ஆகியவைகளைத் தடுக்க உதவும். பச்சை திராட்சைப் பழங்களைவிட காய்ந்த (உலர்ந்த) திராட்சையில் சத்துக்கள் இன்னும் அதிகமாக உள்ளன.

இதைவிட, இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிடுவது சிறந்தது. நூறு கிராம் பேரீச்சம் பழத்தில் கிட்டத்தட்ட 1 மில்லி கிராம் அளவுக்கு இரும்புச் சத்து இருக்கிறது.
மாதுளம்பழம்: ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் மாதுளை முத்துகளைக் கொட்டி வைத்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகாக இருக்கும். ரத்த விருத்திக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கு நல்ல பல சத்துக்களையும் கொடுக்கக் கூடியது மாதுளை.

அன்னாசிப் பழம் : வைட்டமின் பி சத்து அதிக அளவில் இருக்கிறது. இது ரத்தத்தை விருத்தி செய்யவும், உடலுக்குப் பலத்தையும் தரக்கூடியது. இதிலிருக்கும் லைக்கோபின் என்ற சத்து சூரிய ஒளியிலிருந்து வரும் புறஊதாக் கதிர்வீச்சிலிருந்து மனித உடலைப் பாதுகாக்கும் தன்மை கொண்டது.

அத்திப்பழம்: உலர்ந்த திராட்சையைப் போலவே இதுவும் விலை உயர்ந்தது. ரத்த உற்பத்தியை அதிகரிக்கும் பழங்களில் இது மிக முக்கியமானது. நூறு கிராம் அத்திப் பழத்தில் சுமார் 2 மில்லி கிராம் இரும்புச் சத்து இருக்கிறது.

கொய்யாப்பழம்: இதில் பல சத்துகள் அடங்கியிருக்கின்றன. நூறு கிராம் கொய்யாப்பழத்தில் சுமார் 210 மில்லி கிராம் வைட்டமின் சி சத்து உள்ளது. இரும்புச் சத்தும் உள்ளது.

ஆப்பிள், கிவி பழம், அத்திப்பழம், விளாம்பழம், வாழைப்பழம், நாவல்பழம் முதலியவற்றில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது. கேரட், பீட்ரூட், ப்ராக்கோலி, பீன்ஸ், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, புதினா, பச்சை நிறக்காய்கறிகளில் இருந்து இரும்புச் சத்தைப் பெறலாம். நெல்லிக்காய், முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, வெந்தயக்கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, கருவேப்பிலை போன்றவைகளில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது.

பயறு வகைகளான சோயா பன்னீர், ஆலிவ் பழம், பருப்பு வகைகளான கொண்டைக் கடலை, பட்டாணி, மொச்சை, வேர்க்கடலை, குடமிளகாய், காய்ந்த பீன்ஸ், கோதுமை, அரிசி சாதம் முதலியவற்றிலும் இரும்புச் சத்து இருக்கிறது. முந்திரிப் பருப்பு, வெல்லம், பால் முதலியவற்றிலும் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது.

சில பெண்கள் பார்ப்பதற்கு குண்டாக, ஆரோக்கியமாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் அவர்களுடைய ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவை சோதித்துப் பார்த்தால், ஒரு பாட்டில் ரத்தம் உடனே ஏற்ற வேண்டிய நிலையில் இருப்பார்கள். எனவே, ஆளைப் பார்த்து ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று எடை போட்டுவிடக் கூடாது.

ரத்த விருத்தி செய்யும் காய்கறிகளையும், பழங்களையும் தினம்தோறும் நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறிய வயதிலிருந்தே குழந்தைகளுக்கும் ரத்தத்தை விருத்தியாக்குவது எப்படி என்பதைச் சொல்லிக் கொடுத்து, அதற்கு உதவக் கூடிய உணவு வகைகளை சாப்பிடச் சொல்ல வேண்டும். எந்த நோய் வந்தாலும், ரத்தம் வலுவாக இருந்தால் சமாளித்து விடலாம்.

"ரத்தச் சோகை இல்லாத இந்தியா' என்றொரு திட்டத்தை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். துரித உணவுகளையும், ரசாயனத் தூள் கலந்த உணவுகளையும், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளையும் ஒதுக்கிவிட்டு, இயற்கையாக விளைந்த காய் கனிகளை உண்டு ரத்தத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்த இதழில் முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com