1922-ஆம் ஆண்டு டிச. 4-இல் பிறந்த பின்னணிப் பாடகர் கண்டசாலாவுக்கு நூற்றாண்டு விழா ஆண்டு இது. மண்ணைவிட்டு மறைந்தாலும், வித்தியாசமான குரலால் இன்றும் திரை ரசிகர்ளின் செவிகளில் அவர் ஒலித்துவருகிறார்.
இவரது தந்தை ஹரிகதா காலட்சேபம் செய்பவர். மிருதங்கமும் வாசிப்பவர். அவருடன் சிறுவயதில் கண்டசாலாவும் சென்றதால், சங்கீதத்தில் ஈடுபாடு வந்தது.
விசாகப்பட்டினத்தில் இயங்கிவந்த இசைக் கல்லூரியில் சங்கீதம் பயின்றார். பின்னர், ரேடியோவில் பாட்டு, ஹெச்.எம்.வி.யில் இசைத்தட்டு என்று உயர்ந்தார். பின்னர், நடிகராக "சீதாராம ஜனனம்' என்ற படத்தில் நடித்தார். "லக்ஸ் மம்மா' என்ற படத்துக்கு இசையமைப்பாளர். சில படங்களில் கூட்டாகவும், தனியாகவும் இசையமைத்துள்ளார்.
சி.ஆர்.சுப்புராமனுடன் தொடர்பு ஏற்பட்டவுடன் பின்னணிப் பாடகரானார்.
1950-60-களில் 100 படங்களுக்கு மேல் பாடினார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாடியவர். மூன்று படங்களைத் தயாரித்துள்ளார்.அவருடைய தமிழ் கடினமாக இருந்தாலும் வித்தியாசமான குரலால் தமிழர்களை வெகுவாகக் கவர்ந்தார்.
"பாதாள பைரவி', "தேவதாஸ்', "கள்வனின் காதலி', "அனார்கலி', "அலிபாபாவும் 40 திருடர்களும்', "தெனாலிராமன்', "சம்பூர்ண ராமாயணம்', "யார் பையன்', "மாயா பஜார்', "எங்க வீட்டு மகாலட்சுமி', "மஞ்சள் மகிமை', "அன்புச் சகோதரர்கள்' உள்ளிட்ட படங்களில் இவருடைய பாடல்கள் சூப்பர் ஹிட்! இவை இன்று வரை காலத்தால் அழியாத பாடல்களாகப் பாடப்பட்டு வருகின்றன.
இவரைப் பற்றி பலரும் அறியாத இரு விஷயங்கள் உள்ளன. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவர், ஆவணப் படத்துக்குப் பாடல் பாடிய மறுநாள் இவர் இறந்தார்.
வித்தியாசமான குரலால் கண்டசாலா மறைந்தும் வாழ்கிறார்.