எந்த ஒரு பின்புலமும் இன்றி சினிமாவில் நுழைவதே பெரும் சவாலான காலக்கட்டத்தில் தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சம்பத்ராம். தமிழ் சினிமாவில் மட்டும் 211 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று பல மொழிகளில் பல வேடங்களில் நடித்து வரும் சம்பத் ராம், தற்போது 25-ஆம் ஆண்டு சினிமா பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார். தற்போது மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ள "மாளிகப்புரம்' படத்தின் வெற்றி இவரை இன்னும் மலர்த்திருக்கிறது.
"விக்ரம்' படத்தில் நான் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தேன். அதை பார்த்துவிட்டு தான் "மாளிகப்புரம்' தயாரிப்பாளர் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். "விக்ரம்' படம் பார்த்தேன், நன்றாக நடித்திருக்கிறீர்கள், நான் ஒரு படம் செய்யப் போகிறேன், அதில் உங்களுக்கு முக்கிய வேடம் இருக்கிறது என்று மெசேஜ் அனுப்பியிருந்தார். அதன்படி, சில மாதங்களுக்கு பிறகு எனக்கு அழைப்பு வந்தது, சென்று நடித்தேன்.
இது மலையாளத்தில் எனக்கு 6 -ஆவது படம். என் முதல் படமே மோகன் லால் படம் தான், அதில் முக்கிய வில்லனாக நடித்தேன். பிறகு மம்முட்டி சார் என மலையாலத்தில் இதுவரை நான் நடித்த 6 படங்களும் பெரிய பெரிய நடிகர்கள் படங்கள் தான். ஆறாவது படமான மாளிகப்புரம் தான் சிறிய படம், ஆனால் அதன் வெற்றி மிகப்பெரியதாக அமைந்துவிட்டது. வெற்றிமாறன் இயக்கத்தில் "விடுதலை', பா.இரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் "தங்கலான்', "கட்டில்', "கங்கனம்', சூர்ப்பனகை ஆகிய படங்களோடு, "தி கிரேட் எஸ்கேப்' மற்றும் "தி பேர்ல் பிளட்' என்ற ஆங்கிலப் படத்தில் நடிக்கிறேன். ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் வீரப்பன் இணைய தொடரிலும் நடிக்கிறேன். எல்லோருக்கும் நன்றி'' என்றார் சம்பத் ராம்.