தமிழ்த் தாத்தா உ.வே.சா ஒருமுறை திருவண்ணாமலைக்கு வருகை தந்து, பகவான் ரமண மகரிஷியைச் சந்தித்தார்.
ஆஸ்ரமத்தின் அமைதியும் ரமண மகரிஷியின் ஆன்மிகச் சக்தியையும் நுகர்ந்து இன்புற்ற உ.வே.சா., ""பகவானே! எனக்குச் சந்நியாசம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நீண்ட நாள் விருப்பம். ஆனாலும், பாச பந்தம் என்னைவிட்டுப் போகவில்லை. நான் என்ன செய்வது?'' என்றார்.
""என்ன பாச பந்தம்'' என்று கேட்டார் ரமணர்.
""பகவானே! இந்த ஏட்டுச் சுவடிகளை வைத்துக் கொண்டு இரவும் பகலும் அல்லல் படுவதிலேயே மனம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அந்தப் பந்தம் விலகுமானால் நான் சந்நியாசம் வாங்கிக் கொள்ளலாம்'' என்றார் உ.வே.சா.
இதற்கு ரமணர், ""அது பந்தம் அல்ல. அது உங்களுக்காகச் செய்து கொள்ளும் காரியம் அல்ல. உலகத்துக்காகச் செய்யும் மாபெரும் சேவை. தனக்காகச் செய்துகொள்ளும் காரியங்களை விளக்கிக் கொள்வதுதான் சந்நியாசம்.
ஒரு குடும்பத்தைவிட்டு வருகிற சந்நியாசிக்கு உலகமே குடும்பம் என்றாகிவிடுகிறது. அதனால் நீங்கள் செய்துவரும் மாபெரும் தமிழ்த் தொண்டே நல்ல சந்நியாச யோகம்தான்!'' என்று ஆசி வழங்கினார்.