பெங்களூரில் உள்ள தமிழ்ப் பெண் மு. சுதா என்பவர், பல நாடுகளில் உள்ள தமிழர்களின் குழந்தைகளுக்கு இணைய வழியில் தமிழ் மொழியை கற்றுக் கொடுத்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
""நான் 2011-ஆம் ஆண்டு இணைய வழியில் பேசும் தமிழை கற்றுக் கொடுக்கத் தொடங்கினேன். தொடக்கத்தில் பிரிட்டனில் உள்ள எனது உறவினர், அவரது நண்பர்கள், குடும்பத்தில் உள்ள சிலர் மட்டுமே என்னிடம் சேர்ந்து இணைய வழியில் பேசும் தமிழை கற்கத் தொடங்கினர்.
வெளிநாட்டில் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் பேச வேண்டும் என பெற்றோர்கள் விரும்புகின்றனர். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவதே எனது கடமையாக நினைத்து செயல்பட்டு வருகிறேன்.
பல நாடுகளிருந்தும் சுமார் 2,000 மாணவர்கள் தற்போது தமிழ் கற்று வருகின்றனர். முதியவர்களும் பேசும் தமிழ் கற்று வருகின்றனர்.
70-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் என்னுடைய இணையதளம் மூலம் பேசும் தமிழை கற்றுத் தருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் இணையவழியில் தமிழ் பேசும் போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிவருகிறேன். வெளிநாட்டில் உள்ள தமிழ் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் தமிழர்கள் அல்லாத வெளிநாட்டினரும், தமிழ் இலக்கணம் உள்ளிட்டவைகளை கற்று வருகின்றனர்.
தமிழ் கற்க விருப்பம் இருந்தும் அதற்காகத் தொடர்ந்து நேரம் ஒதுக்க இயலாதவர்களை குழுவாக ஒருங்கிணைத்து வார இறுதியில் இலவசமாக பேசும் மொழியை கற்றுத்தருகிறேன். மொரிஷியஸ், மியான்மர், ஃபிஜி தீவுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரம்பரையாக வசிக்கும் தமிழர்களின் தற்போதைய தலைமுறையினர் பேசும் தமிழை இலவச வகுப்பில் சேர்ந்து ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்'' என்றார் சுதா.