லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் "லியோ'. மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இதன் முதல் புரொமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.இதையடுத்து கடந்த மாதம் காஷ்மீரில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கி ஒருமாத காலமாக நடைபெற்று வருகிறது. விரைவில் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டுப் படக்குழுவினர் திரும்பவுள்ளனர். இதற்கிடையில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் பிறந்த நாளை காஷ்மீரிலேயே கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு.
இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள இயக்குநர் மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துப் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
"காஷ்மீரிலிருந்து சென்னை திரும்புகிறேன். மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கொண்ட படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது. லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான், அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன்.
என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்தப் படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன். "லியோ' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்' என்று கூறியுள்ளார்.