ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடைபெறும் நிலையில் புதிய சாம்பியன் யார்? என்ற ஆவல் உலகம் முழுவதும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் விளையாட்டுகளில் கால்பந்து, டென்னிஸ், கூடைப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, வாலிபால் போன்றவற்றுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். பிரிட்டனில் பிறந்த விளையாட்டான கிரிக்கெட் 10 நாடுகள் மத்தியிலேயே ஆடப்பட்ட நிலையில், தற்போது உலகம் முழுவதும் ஆடப்பட்டு வருகிறது.
முதல் சர்வதேச கிரிக்கெட் ஆட்டம் 1884இல் அமெரிக்காகனடா இடையே நடைபெற்றது.
1900இல் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் கிரிக்கெட் முதன்முதலாகச் சேர்க்கப்பட்டு பிரான்ஸை வீழ்த்தி, கிரேட் பிரிட்டன் தங்கம் வென்றது. 1975இல் முதல் உலகக் கோப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் கிரிக்கெட்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் (50 ஓவர்கள்) உலகக் கோப்பை, டி 20 உலகக் கோப்பை போட்டிகள் பிரசித்தி பெற்றவை. இதில், 50 ஒவர்கள் உலகக் கோப்பை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம்.
1975, 1979, 1983 என முதல் மூன்று உலகக் கோப்பைப் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்றன. "புருடென்ஷியல் கோப்பை' என அழைக்கப்பட்ட நிலையில் ஒருநாள் உலகக் கோப்பையின் முதல் சாம்பியன் பட்டத்தை மேற்கு இந்திய தீவுகள் கைப்பற்றியது. அதன்பின் 1979இல் மேற்கு இந்திய தீவுகளே பட்டத்தை கைப்பற்றியது.
புதிய சாம்பியன் இந்தியா
மிகவும் வலுவான அணியாகத் திகழ்ந்த மேற்கு இந்திய தீவுகளே 1983இல் ஹாட்ரிக் சாம்பியன் பட்டம் வெல்லும் எனக் கருதப்பட்ட நிலையில், கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி ஆச்சரியப்படத்தக்க முறையில் வென்று, முதன்முறையாக சாம்பியன் ஆனது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது.
50 ஓவர்களாக குறைப்பு
1987இல் இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து நான்காவது உலகக் கோப்பையை நடத்தின. இதில் 60 ஓவர்களில் இருந்து முதன்முறையாக 50 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. கொல்கத்தாவில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா முதன்முறையாக சாம்பியன் ஆனது.
1999இல் நிரந்தர கோப்பை
1987இல் ரிலையன்ஸ், 1992இல் பென்சன் அன்ட் ஹெட்ஜஸ், 1996இல் வில்ஸ், என வெவ்வேறு கோப்பைகள் வழங்கப்பட்டன.
1999இல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில்தான் நிரந்தரமாக புதிய கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது. தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட இந்தக் கோப்பை 60 செ.மீ, உயரம் கொண்டது. கோல்டன் குளோப் அமைப்பில் ஸ்டம்புகள், பந்து, பேட் என பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங்கை நினைவுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 11 கிலோ எடை உடையது இந்தக் கோப்பை.
இந்தியா புதிய சாதனை
உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாடு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றாத நிலை இருந்தது. இந்த நிலையில், 2011இல் இந்தியா, வங்கதேசம், இலங்கை இணைந்து போட்டியை நடத்தின. இதில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்தியா, போட்டியை நடத்தும் நாடு பட்டம் வென்றதில்லை என்ற நிலையை தகர்த்தது.
2015இல் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து இணைந்து போட்டியை நடத்திய நிலையில், ஆஸ்திரேலியாவும் பட்டம் வென்றது. 2019இல் போட்டியை நடத்திய இங்கிலாந்தே பட்டம் வென்றது.
சாம்பியன்கள்
1975, 1979மேற்கு இந்திய தீவுகள், 1983 இந்தியா, 1987 ஆஸ்திரேலியா, 1992 பாகிஸ்தான், 1996 இலங்கை, 1999, 2003, 2007ஆஸ்திரேலியா, 2011இந்தியா, 2015 ஆஸ்திரேலியா, 2019இங்கிலாந்து.
அக். 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறும் தற்போதைய உலகக் கோப்பை போட்டி 13ஆவது எடிஷன் ஆகும்.
10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி ரவுண்ட் ராபின் மற்றும் நாக் அவுட் முறையில் ஆட்டங்கள் நடைபெறுகிறது.
1.3 லட்சம் ரசிகர்கள் அமரக் கூடிய உலகின் மிகப் பெரிய அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நவ. 19ஆம் தேதி இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே மூன்று முறை வெவ்வேறு நாடுகளுடன் இணைந்து உலகக் கோப்பையை நடத்திய நிலையில், தற்போது இந்தியா முதன்முறையாக போட்டியை தானே முன்னின்று நடத்துகிறது.
உலகக் கோப்பையின் சிறப்புகள்