பள்ளி மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்க்கவும், அவர்களுக்கு தமிழ் மீதான நேசத்தைத் தூண்டவும் அளப்பரிய பணிகளைச் செய்து வருகிறது கருங்கல் தமிழ்ச் சங்கம்.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட கருங்கல்லில் இயங்கிவரும் இந்தச் சங்கத் தலைவரான கப்பியறை ராயப்பன், ஓய்வு பெற்ற கல்வியியல் கல்லூரி முதல்வராவார்.
எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர்.. என பன்முகத்தன்மை கொண்ட இவர், தன் எழுபத்து ஏழு வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிவருபவர்.
இதுவரை 8 நூல்களை எழுதியிருக்கும் அவர், தற்போது 4 நூல்களை எழுதி நிறைவு செய்துள்ளார்.
அவரிடம் பேசியபோது:
'பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைஆங்கிலப் பள்ளிகளில் சேர்த்தாலும், தாய் மொழி மட்டுமே சிறந்த சிந்தனைகளை குழந்தைகளிடம் வளர்க்கும். அதற்காகவே பள்ளிகளின் விடுமுறை நாள்களில் இலவசமாக தூய தமிழ்ப் பயிற்சியை கருங்கல் தமிழ் சங்கம் வழியே நடத்திவருகிறோம். தமிழை பிழையின்றி எழுதும் பயிற்சி இதில் நடத்தப்படும்.
பள்ளிகள், கல்லூரிகளுக்கும் நேரடியாகச் சென்று தமிழ் சார்ந்த போட்டிகளை நடத்திபரிசுகளை வழங்கி ஊக்குவிக்கின்றோம்.
திருக்குறள் போட்டிகளை மாணவர்களுக்கு நடத்தி "திருக்குறள் திலகம்' எனும் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறோம்.
பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற 500 மாணவ, மாணவிகளுக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டினோம். மாணவர்கள் மத்தியிலும், அடுத்த தலைமுறையினர் மத்தியிலும் தமிழின் பெருமையை விதைக்க கிடைத்த வாய்ப்பை வாழ்நாள் பாக்கியமாகவே கருதுகிறேன்.
"ஆசிரியர் சிகரம்', "பாரதி பைந்தமிழ்ச்சுடர்', "சிறந்த சமூக சேவகர்', "இலக்கியச் செல்வர்' உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றாலும், மாணவர்களிடம் தமிழ் வளர்ப்பதில் உள்ளசந்தோஷம் எதிலும் இல்லை'' என்றார்.