தெற்காசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர், வீராங்கனைகள் தங்கம் உள்பட பல்வேறு பதக்கங்களைக் குவித்து அசத்தியுள்ளனர்.
இந்திய டேக்வாண்டோ சங்கம், தெலங்கானா மாநில டேக்வாண்டோ சங்கம் ஆகியன சார்பில் ஹைதராபாதில் 7-ஆவது தெற்காசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. 14 வயதில் இருந்து பல்வேறு வயதுப் பிரிளகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யு.ஏ.இ.யைச் சேர்ந்த 1,000-கக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஸ்பேரிங், பவர் பிரேக்கிங், செல்ஃப் டிபன்ஸ் உள்ளிட்ட பிரிளகளில் ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் கலந்துகொண்டனர்.
ஸ்பேரிங் பிரிவில் குருஷந்த், திபேஷ் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். அனீஸ், மிதுன் ஆகியோர் அதே பிரிவில் தலா 1 வெள்ளியை கைப்பற்றினர்.
இன் பேட்டர்ன் பிரிவில் திபேஷ், குருஷந்த் தலா 1 வெண்கலமும், ஸ்பேரிங் பிரிவில் தேவராஜ், சந்துரு தலா 1 வெண்கலமும் வென்றனர். தெற்கு, மேற்கு இந்திய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தில் இருந்து 34 பேர் பங்கேற்றனர். இதில் தமிழக அணியினர் 6 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினர்.
சிறப்பிடம் பெற்ற தமிழக அணிக்கு எம்.கே. சுரேஷ் குமரன், மஞ்சுளா தேவி ஆகியோர் தீவிர பயிற்சியை அளித்தனர்.