

தமிழ்த் திரையுலகின்அன்றைய பிரபல நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் (என்.எஸ்.கே.), நடிகை மதுரத்துக்கும் திருமணத்தை நடத்திவைத்தது இயக்குநர் ராஜா சாண்டோ. அவரிடம் மதுரத்தை கடைசிவரை காப்பாற்றுவேன் என்று சத்தியம் என்.எஸ்.கே. சத்தியம் செய்த பிறகே திருமணம் நடைபெற்றது என்பது ஆச்சரியம்தானே!
"வசந்த சேனா' படத்தை ராஜா சாண்டோ இயக்கினார். இவர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். மௌனப் படங்களில் மும்பை சென்று நடித்துகொண்டிருந்தார். அப்போதே இவர் பல படங்களை இயக்கியவர்.
"வசந்த சேனா' படம் புணேவில் திரையாக்கம் செய்யப்பட்டது. படத்தில் நடிக்க வந்த ஆண் கலைஞர்களுக்கு தனி வீடும், பெண் கலைஞர்களுக்கு தனி வீடும் என்று பிரித்து தங்க வைத்திருந்தனர். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் என்.எஸ்.கே. யாருக்கும் தெரியாமல் மதுரம் இருந்த வீட்டுக்குச் சென்று ரகசியமாய் சந்தித்துப் பேசி வந்தார்.
இதை இயக்குநர் ராஜா சாண்டோ கவனித்து, என்.எஸ்.கே. அழைத்து அதட்டலாக, "நீ பெண்கள் இருக்கும் இடத்துக்கு அடிக்கடி போய் வருவதை நான் பலமுறை பார்த்து கொண்டுதான் வருகிறேன். யாரைப் பார்க்க போகிறாய்? ஏன்?'' என்று கேட்டார்.
இதற்கு என்.எஸ்.கே. பயத்துடன் , " மதுரத்தைப் பார்க்கப் போயிட்டு வர்றேன். மதுரத்தைக் கல்யாணம் கட்டிக்க ஆசை'' எனறு தயங்கியபடியே சொன்னார். அவர் பயந்ததற்கு ஓர் காரணம் உண்டு. ராஜா சாண்டோ முரட்டுச் சுபாவம் கொண்டர். திடீரென அடித்துவிடுவார். அப்படிப்பட்ட பலசாலி. உயரமானவர், பார்த்தவர்கள் பயப்படத்தான் செய்வார்கள்.
என்.எஸ்.கே. சொல்வதைக் கேட்டுக் கொண்டே வந்தவர், திடீரென ஒரு முடிவுக்கு வந்து, "மதுரத்தைக் கடைசி வரை கண்கலங்காமல் காப்பாற்றுவாயா?'' என்று கேட்டார் இயக்குநர் ராஜா சாண்டோ.
என்.எஸ்.கே. தைரியத்துடன் வேகமாக, "சத்தியமாக காப்பாற்றுவேன்'' என்றார்.
உடனே இரண்டு மாலைகள் வாங்கி வர ராஜா சாண்டோ ஆள்களை அனுப்பிவைத்தார். பின்னர், என்.எஸ்.கே., மதுரம் ஆகிய இருவரையும் மாலைகள் மாற்றிக் கொள்ளச் செய்து திருமணத்தைச் செய்துவைத்தார் ராஜா சாண்டோ.
படங்கள், நாடகங்களில் இருவரும் சேர்ந்தே நடத்திவந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.